OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY - From: Friendship with God
எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்
-தமிழாக்கம்

Saturday, August 20, 2022

இரண்டாம் பாகம்

எனது ஆன்மீகப் பயணத்தைக் கனடாவுக்கு வருவதற்கு முன், கனடாவுக்கு வந்ததன் பின் என இரண்டாகப் பிரிக்கலாம் எனத் தோன்றுகிறது. முதலில் நான் பாபா பக்தையாவதற்கு முன், அதன் பின் எனப் பிரிப்போமோ என நினைத்தேன். ஆனால் முதற் பகுதியில் நான் பாபா பக்தையான விதமெல்லாம் எழுதிவிட்டேன் என்பதனால் அதனை விட்டுவிட்டேன். ஆனால் நான் பாபா பக்தையான பின்னர் தான் கனடாவுக்கு வந்தேன். அதுவும் அவனருள் தான் (அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பார்கள்). நான் கனடாவுக்கு வருவதற்கு முன் தன்னில் நம்பிக்கை வரச்செய்ய வேண்டும் இல்லாவிடில் இவள் நிரம்பக் கஷ்டப்படுவாள் என அவர் தீர்மானித்தாரோ என நான் எண்ணுவதுண்டு. வைப்ரேஷன் (vibration) என்று சொல்வார்கள். எமது நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ போல இல்லை மேற்கத்தைய நாடுகளின் வைப்ரேஷன். இங்கு எப்படிப்பட்ட நல்லவர்களும் கொஞ்சம் தடுமாறுவார்கள் தான். இந்த வைப்ரேஷனில் உண்மையுள்ளது. வைப்ரேஷன் என்றால் Google Translate இல் அதிர்வு என்று உள்ளது. அதாவது எமது எண்ணங்கள் எல்லாம் பிரபஞ்சத்தில் உடனுக்குடன் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அவை நல்ல எண்ணங்களாக இருந்தால் நல்ல வைப்ரேஷன் இருக்கும். இல்லையெனில் கூடாத வைப்ரேஷன் இருக்கும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள வைப்ரேஷன் இன்னமும் கூட நன்றாக உள்ளதால் அங்கு இருக்கையில் எமது மனங்களில் நல்ல எண்ணங்களே பெரும்பாலும் தோன்றும். கனடா போன்ற மேற்கத்தைய நாடுகளில் எதிர்மறையான அலையதிர்வுகள் (வைப்ரேஷன்) எமது மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது தான் எப்படிப்பட்ட நல்லவர்களினது மன நிலையிலும் சிறிது மாறுதல் ஏற்படுகிறது. அப்போ கெட்டவர்களென்றால் கேட்கவே வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 'அங்கு சும்மா ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தவை எல்லாம் இங்கு ஹைவேயில் ஓடத்தொடங்கி விடுவினம்' என்று பகிடி விடுவார். சிறிய பிரச்சனைகளெல்லாம் பூதாகரமாகத் தெரியும். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது பக்தி தான் என்னைக் காப்பாற்றும் எனத் தெரிந்து செய்த மாதிரி எழுபதுகளில் இருந்தே பாபாவைப் பற்றி நான் அறிந்திருந்தாலும் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில், அதாவது நான் கனடாவுக்கு வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் தான் எனக்கு அவரில் நம்பிக்கை வந்தது. முன்னரே நம்பிக்கை வந்திருந்தால் நாம் இந்தியாவில் வசிக்கும் போது எப்பாடு பட்டாகிலும் கணவரை இழுத்துக் கொண்டு சென்று பாபாவைத் தரிசித்திருப்பேன். புண்ணிய பூமியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வசித்திருந்தும் எம் தெய்வத்தை நேரில் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

இந்த வைப்ரேஷனை நான் நேரில் உணர்ந்தவள். கனடாவுக்கு நான் வந்த புதிதில் நானும் கணவரும் மொன்றியல் நகரில் ஒரு இடத்தில் நடைபெறும் பாபா பஜனைக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் செல்வோம். அன்றும் அப்படித்தான் செல்கையில், நான் கனடாவுக்கு வந்த புதிதென்பதால் என் மனதிலும் ஒரே குழப்பமாக, மனமெல்லாம் ஒரே போராட்டமாகத் தான் சென்றேன். அங்கு உள்ளே சென்று காலணிகளைக் கழற்றும் இடத்துக்கு இறங்கிச் செல்கையில் அந்தப் படிக்கு மேலே ஒரு பாபாவின் சிரித்த படி இருக்கும் படம் மாட்டியிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு கீழே சென்று காலணிகளைக் கழற்றி விட்டுப் படிகளால் மேலே வருகையில் மனமெல்லாம் நிர்மலமாகி சூரியனைக் கண்ட பனி போலக் கவலையெல்லாம் விலகி மனம் இலேசாகி விட்டிருந்தது. என்னே அதிசயம்! பார்த்தீர்களா? அந்தக் கட்டிடத்தில் இருந்த நல்ல சூழ்நிலையால் அங்கே ஒரு நல்ல வைப்ரேஷன் உருவாகியிருந்ததால் அது எனது மனநிலையில் நல்ல மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. இந்த வைப்ரேஷன் (அதாவது அலையதிர்வுகள் என்று சொல்லலாம்) என்பதை வேறும் சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு பாடசாலைக்குள் சென்ற போது படிப்பு அலையதிர்வுகளை உணர்ந்திருக்கிறேன். அதேபோல எந்த நேரமும் எதிர்மறையான எண்ணங்களையுடைய ஒருவருடைய வீட்டுக்கு என்னால் செல்ல இயலாது. ஏனெனில் அங்கே இருக்கும் எதிர் மறையான அலையதிர்வுகளை என்னால் உணர முடிந்ததால்.

நான் முதலிலேயே எழுதியது போல் எனக்குக் கனடாவுக்கு வருமுன் சாயிபாபாவில் நம்பிக்கை வந்திருந்தாலும் முழுமையாக மனம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லைப் போலும். இங்கு (கனடா) வந்தபின் திரையிசைப் பின்னணிப் பாடகி பி. சுசீலா கனடாவுக்கு ஒரு முறை வந்திருந்தார். அவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகியென்பதால் அவரது கச்சேரிக்குச் சென்றோம். அக்கச்சேரியில் அவர் பாபாவின் பஜனைப் பாடல்கள் பாடிய ஒரு கசெட்டை வித்தனர். நானும் அதனை வாங்கி அதில் அவரின் கையெழுத்தை வாங்கினேன். வீட்டுக்கு வந்தபின் அப்போ கணவர் வாங்கித் தந்த வாக்மான் (walk man) இல் அதைப் போட்டுக் கேட்டுக் கொண்டு உடைகள் மடித்துக் கொண்டிருந்தேன். முதலில் விநாயகர் பாடலும் அதைத் தொடர்ந்து சிவன், முருகன், கிருஷ்ணன் பாடல்கள் போயின. எல்லாப் பாடல்களும் முடிகையில் கடைசி வரியில் பாபாவின் பெயரும் வரும் படி இருந்தன. ஆனால் ஒரு பாடல் 'ப்ரஷாந்தி நிலைய சுந்தரா..' என்று தொடங்கி நேரடியாகவே அவரைப் பற்றிப் பாடத்தொடங்கியது. எனக்கு மற்றைய கடவுள்களின் பாடலின் இறுதியில் பாபாவைப் பற்றி ஒரு வரி வந்தது ஏற்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அவரைப் பற்றியே ஒரு பாடல் இருந்தது ஏற்கக்கூடியதாகவில்லை. அத்துடன் அக்கசட்டில் முழுவதுமாகப் பாடல்கள் இருக்கவுமில்லை. முக்கால்வாசியுடன் பாடல்கள் முடிந்து விட்டன. அதுவும் மனதுக்குக் குறையாக இருந்ததால் கசட்டை மேலே வைத்து விட்டேன். சிறிது காலம் சென்றபின் அவரின் பற்பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்த பின் ஒரு நாள் அந்தக் கசட்டை மீண்டும் கேட்க நேர்ந்த போது அப்பாடல் (ப்ரஷாந்தி நிலைய சுந்தரா.....) தொடங்கியதும் என்னையறியாமல் என் மனம், 'ஐயோ எனது பாதி உயிர் அங்கே உள்ளதே நான் என்ன செய்வேன்' என்று அழத்தொடங்கி விட்டது. கண்ணால் கண்ணீர் ஓட, நான் விம்மி விம்மி அழுது கொண்டே அப்படியே அமர்ந்து விட்டேன். முதலில் எந்தப் பாடலைக் கேட்க மனமில்லாமல் வைத்தேனோ அதைக் கேட்டே இப்படி அழுதுவிட்டேன். நான் நினைக்கிறேன் அப்போ தான் மனம் பாபாவை முழுமையாக ஏற்றுக் கொண்டது என்று. அதற்கு அவரின் அதிசயங்கள் என் வாழ்வில் நடக்க வேண்டியிருந்தது.
அப்போ நானும் கணவரும் ஃப்ரெஞ்ச் ஆட்கள் நடத்திய அந்த பஜனை சென்டருக்கு ஒவ்வொரு ஞாயிறும் பஸ் எடுத்து மெட்ரோ எனப்படும் அண்டர்கிரௌண்ட் ட்ரெயின் எடுத்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போ தான் எனது மச்சாளுக்கு (கணவரின் தங்கை) திருமணம் நடந்தது. மாப்பிள்ளை ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்தார். அவரும் ஒரு சாயி பக்தன் தான். அப்படிச் சொன்னால் போதாது 'அவர் ஒரு தீவிர சாயிபக்தன்' என்பது தான் மிகவும் பொருத்தம். திருமணம் எல்லாம் இனிதே முடிந்து, எல்லாம் சற்றே ஓய அந்த சகோதரர் தனது வீட்டில் முதன் முறையாக மொன்றியல் நகரில் தமிழ் மக்களுக்கான ஒரு பஜனையைத் தொடக்கி வைத்தார். அவர் தான் வசித்த ஃபிரான்ஸ் நாட்டிலும் தமிழர்களுக்கு இரண்டு பஜனை சென்டர்கள் திறந்திருந்தார். சாயி பக்தியின் அரிச்சுவடியிலிருந்த எனக்கு சாயி பஜனையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நாமாவளி சொல்வதோ அல்லது பஜனை பாடவோ ஒன்றும் தெரியாது. அந்த சகோதரர் தான் பஜனை பாடும் படி எனக்கு நம்பிக்கை ஊட்டியதுடன் பாடல்கள் கொண்ட கசட்டுகளைத் தந்து கேட்கச் சொல்லி என்னையும் ஒரு பஜனைப் பாடகி ஆக்கினார். அவரின் (மச்சாளின்) வீட்டில் தான் பஜனை நடை பெற்றுக் கொண்டிருந்தது. பல உறவினர்கள், நண்பர்கள், பஜனை நடைபெறுவதைக் கேள்விப்பட்டு வந்தோர் என பஜனை களைகட்டியது. பின்னர் அவர்கள் டொரோண்டோ நகருக்கு மாற்றலாகிச் செல்கையில் பஜனை நடத்தும் பொறுப்பை வேறொரு தமிழ் குடும்பம் பொறுப்பெடுத்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீட்டில் பஜனை வைக்க விரும்பினார்கள். அவர்களின் வீடு சற்றே தூரத்தில் இருந்தது. நாம் மெட்ரோ என்னும் அண்டர்கிரவுண்ட் ட்ரெயின் எடுத்து (அப்போ எங்களிடம் கார் இல்லாததால்) அங்கிருந்து பஸ் எடுத்துச் செல்வோம். பஜனைகளுக்குச் சென்று வருவதாலோ என்னவோ எனக்கு பக்தி கூடி மாமிசம் உண்பதில் மீண்டும் வெறுப்பு வந்து விட்டது. மீண்டும் நான் சைவமாக மாறி விட்டேன். திருமணம் நடப்பதற்கு முன் நான் சைவமாக இருந்து பின் மாமிசம் உண்ணத் தொடங்கியது முதலிலேயே நடந்தது. சில காலம் மாமிசம் உண்ணாமல் இருந்தேன். பின்னர் கணவருக்கு ஒரு சமையல், மகளுக்கு ஒரு சமையல், எனக்கு ஒரு சமையல் எனக் கஷ்டம் எனச் சொல்லி இவர் என் மனதை மாற்றி என்னை மீண்டும் மாமிசம் உண்ண வைத்தார்.
அப்போது நான் எனது இரண்டாவது குழந்தையைக் கர்ப்பமாக இருந்தேன். அதாவது மூத்த புதல்வன். அப்போ பஜனைக்கு பஸ் எடுத்து ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவேன். சில வேளைகளில் இவர் வருவார். சில வேளைகளில் நான் தனியே செல்வேன். அப்போ பஜனை நடத்துபவர்கள் எனது வயிற்றிலிருக்கும் குழந்தை பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பஜனை நடத்தியவர்கள் வீட்டில் ஒரு சிறிய பிரச்சனையால் பஜனையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. எனவே எமது வீட்டிலும் சிறிது காலம் பஜனை நடந்தது. எமது வீடு சிறியது என்றாலும் நான் பஜனை செய்யலாமென்று எல்லோருக்கும் சொல்லி விட்டேன். ஆனாலும் எனக்குக் கொஞ்சம் யோசனை தான். ஆனால் எமது வீட்டுக்கு அளவான ஆட்களே வருகை தந்தனர். வழக்கமாகப் பெரிய ஹாலில் நிறைய ஆட்கள் வருவது தான் வழக்கம். அதுவும் கூட இறைவன் அருள் தான். இரண்டு அல்லது மூன்று கிழமைகள் தான் நடந்திருக்கும். ஒரு நாள் முதலில் பஜனைக்கு வந்த ஒரு நபர் எங்கள் வீட்டில் பஜனை நடப்பதையறிந்து தாமும் வந்திருந்தார். அவர் ஒரு பொது இடத்தில் பஜனை வைப்பதைப் பற்றிப் பேசினார். நாமும் சம்மதித்தோம். ஒரு மண்டபம் எடுத்து அங்கு பஜனை நடந்தது. அதற்குத் தலைவராக எமக்கு மண்டபம் எடுத்துத் தந்தவர் இருந்தார். எனது கணவர் உபதலைவராக இருந்தார். பஜனை சிறப்பாக நடந்தது. பிரசாதங்கள் செய்து கொண்டு பஜனைக்குச் செல்வோம். எங்களுடன் பஜனைக்கு வந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணும் அப்போது கர்ப்பமாக இருந்து பின் அவளுக்குக் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென்று அப்பெண் பகவானிடம் பிரார்த்தனை செய்த போது அவருக்குக் கனவில் பகவான் வந்து முருகனின் பெயரை வைக்கும் படி சொன்னதாக அவர் தனது குழந்தைக்கு முருகனின் பெயரை வைத்தார். நானும் பகவானிடம் எனது குழந்தைக்கும் பெயர் தெரிவு செய்து தரும் படி மனதுள் பிரார்த்தனை செய்தேன். அதன் காரணமோ என்னவோ பகவானின் நாமாவளியின் கடைசிக்கு முந்தைய (107) வசனம் (சுலபப் பிரசன்னாய நமஹ என்று) சொல்கையில் 'பிரசன்னா' என்று வைக்கும் படி மனதுள் தோன்றியது. அதற்கு முதலும் கூட ultrasound பார்க்கையில் ஆண்பிள்ளை என்று சொன்னதால் என்ன பெயர் வைப்பதென்று ஒரே யோசிப்பேன். அப்போ பாபாவின் செல்லப் பெயர் 'சத்யா' என்று இருப்பதால் அதையே வைப்போமா எனவும் எண்ணியதுண்டு. ஆனால் பின்னர் எண்சாஸ்திரத்தில் (அதாவது numerology யில்), 's' எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் இருதலைக் கொள்ளி எறும்பு போல முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள் என்று இருந்தது நினைவுக்கு வந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். ஆனால் பகவான் வேறொருவர் மூலம் அந்தப் பெயரையே அவனுக்கு வீட்டுப் பெயராக வைக்கும் படி செய்து விட்டார். பஜனை நன்றாக நடந்து கொண்டிருந்தது. நான் எனது மூன்றாவது குழந்தையைக் கர்ப்பமானேன். சிலபல காரணிகளால் பஜனை நடத்துவதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. அந்த பஜனையை மீண்டும் புதுப்பித்து நடாத்துவதற்கு யார் அதனை ஆரம்பித்தார்களோ அவரே தான் செய்யும் படி வந்தது. அதாவது மச்சாளும் கணவரும் மீண்டும் மொன்றியலுக்கே குடிவந்தார்கள். அவர்களே பஜனையைப் புதுப்பித்து நடாத்தினார்கள். இறைவனின் எண்ணமும் அது தான் போலும். பஜனையும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மூன்றாவது குழந்தை அதாவது இரண்டாவது மகன் பிறந்தான். அவன் கர்ப்பமாக இருக்கையிலேயே நான்காம் மாதத்தில் ultrasound செய்வதற்கு டாக்டர் சொன்னதால் வைத்தியசாலைக்குச் சென்றோம். Ultrasound இல் குழந்தை ஆணா பெண்ணா என்பதையும் நாம் விரும்பினால் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வதற்கு முன்னமே என் உள்ளுணர்வில் குழந்தை ஆண் தானெனத் தெரிந்தது. அவனும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் தான் பிறந்தான். எனக்குக் சிறிது நாட்களாகவே சில ஆன்மீக அனுபவங்கள் கனவுகள் மூலம் வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்று நாம் ஒரு கோவிலுக்குச் செல்கிறோம். எம்மை அந்தக் கோவிலுக்கு தெரிந்த ஒருவர் தான் அழைத்துச் செல்கிறார். அவர் தான் எனது ஆத்மீக வழிகாட்டி என்று கனவுகளின் மூலம் உணர்த்தப் பட்டது.
அப்போ கணவர் பின்னேர வேலை செய்து கொண்டிருந்தார். அதாவது மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தான் வேலை. நான் ஒரு கைக்குழந்தை மற்றும் இரண்டு வயதுப் பையனுடன் நித்திரை முழிப்பதால், இரு பக்கமும் இரு குழந்தைகளுடன் படுத்து விடுவேன். கணவருக்கு உணவை முதலிலேயே பரிமாறி வைத்து விடுவதால் அவர் என்னை எழுப்பாமலேயே உணவுண்டு விட்டுப் படுத்து விடுவார். அப்போ நான் விழித்திருந்தால் நான் எழும்புவேன். அன்றும் நான் இரு பாலகர்களுடன் துயிலும் பொழுது ஒரு கனவு: பக்திப்படங்களில் வானத்தில் ஒரு கட்டிடம் இருக்குமே அதே போல அந்தரத்தில் ஒரு ஒடுக்கமான மாடத்திலிருந்து நான் கீழே வீழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மேலே வர முயற்சிக்க ஒருவர் என்னைத் தள்ளிக்கொண்டு இருக்கிறார். நான் ஏன் தள்ளுகிறார் என வினவ அவர் சொல்கிறார், "உனக்கு அதிக ஆணவம் உள்ளது. அதனால் நீ மேலே வர இயலாது" என்று. அப்போ என் மனதில் சிவனின் ஒரு குறிப்பிட்ட மந்திரம் நினைவுக்கு வருகிறது. அதனை நான் உச்சரிக்கச் சுவரிலிட்ட பந்து போல நான் மேலெழுகிறேன். பின்னர் கீழே விழுகிறேன். பின்னர் அம்மந்திரத்தைச் சொல்ல மீண்டும் மேலெழுகிறேன். இப்படியாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கனவின் தொடர்ச்சியாக நாம் சிறுபிள்ளைகளாக இருந்து வளர்ந்த வீட்டின் முற்றத்தில் எனது மகளும் வேறு சிலரும் நிற்கின்றனர். நான் ஒரு பந்து போலக் கீழே விழுவதும் பின்னர் மந்திரத்தைச் சொல்லக் கூரைக்கு மேலே எழுவதுமாக இருக்க மகள் அதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். அதன் பின்னர் கனவிலிருந்து விழித்து விட்டேன். ஆனாலும் கண் மூடியபடி மனதுள் அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தான் விழிப்பு வந்தது. அம்மந்திரத்தை மனமானது உச்சரிக்க உச்சரிக்க எதோ ஒன்று என் உடலிலிருந்து தலை வழியாக மேலே செல்வதை உணர்ந்தேன். ஒரு சுகமான உணர்வையும் ஒரு இதமான குளிரையும் என்னால் உணர முடிந்தது. அந்த சுகமான உணர்வு வர்ணிக்க இயலாதது. அந்த ஆனந்தமானது வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது. பேரின்பம் என்பது அப்படித் தானா இருக்கும்? நான் சிவபக்தை என்பதால் நான் நினைத்தேன் அந்த ஆனந்தமானது கைலாயத்தில் தான் கிடைக்குமென்று. இப்போ தெரிகிறது அது சமயச்சார்புகளற்ற ஒரு ஆத்மீக அனுபவமென்று. அப்படியே அந்த ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். அப்போ கணவர் வேலையால் வந்து கதவைத் திறந்த சப்தம் கேட்டது. நான் எழுந்தால் எங்கே அந்த ஆனந்த அனுபவம் கலைந்து விடுமோ என எண்ணி அப்படியே படுத்திருந்தேன். மறுநாள் தான் கணவரிடம் அந்த அனுபவத்தைச் சொன்னேன். மறுநாள் அதைப்பற்றி எண்ணுகையில் தான் நினைவு வந்தது அந்தக் கனவு வந்த அன்று காலையில் எல்லாம் என் மனம் நிர்மலமாக இருந்தது என்று. காலையிலேயே அந்த ஆன்மீக அனுபவத்துக்கு நான் தயாராகி விட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஆன்மீக அனுபவங்களை நாம் எமக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றும் பிறருக்குச் சொல்லக் கூடாதென்றும் சிலர் சொல்வார்கள். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு அப்போ தெரியாது பாபா சிலருக்குக் கனவு மூலம் தீட்சை வழங்குவதாக. பின்னர் தான் அதைத் தெரிந்து கொண்டேன். சிறு பிராயத்தில் எமது ஊரில் கோவிலில் சிறுவர்களுக்குத் தீட்சை வழங்கப்பட்டது. அப்போ நாமும் செல்வதற்கு இருக்கையில் மூத்த சகோதரிகளும் வயதில் பெரிய மச்சாள்மார்களும் தீட்சையின் போது அய்யர் ஒரு வெள்ளைத் துணியை எனக்கும் தனக்கும் சேர்த்துப் போர்த்தி விட்டுத் தான் மந்திரத்தைச் சொல்லித் தருவார் என்றார்கள். அப்போ அவர்கள் அய்யர் துணியைப் போட்டு விட்டு என்ன சொல்கிறாரோ எனப் பகிடி விட்டார்கள். எனக்குப் பயம் வந்து விட்டது. அதனால் நான் தீட்சை பெறப் போகமாட்டேன் எனச் சொல்லி விட்டேன். அப்போ நாயன்மார்களில் ஒருவருக்கு ஒரு மடத்தில் வைத்துத் தனது காலை அவர் தலையில் வைத்து இறைவன் தீட்சை வழங்கியதைப் படித்த ஞாபகம் வந்ததால் அதே போல இறைவன் எனக்கும் தீட்சை வழங்குவார் என எண்ணினேன். அது கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. இறைவன் கனவில் எனக்குத் தீட்சை வழங்கி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. என்னைப் படிப்படியாக இறைவன் ஆன்மீகத்தில் முன்னேற வைத்துக் கொண்டிருந்தான்.
எனக்குக் கனவில் உரைக்கப்பட்ட மந்திரம் என்பதால் அது தான் எனக்குரிய மந்திரம் எனப் புரிந்தது. ஏற்கனவே சாயி பக்தர்கள் 'சாயிராம்' என்ற மந்திரத்தை உச்சரிப்பார்கள். எனவே எனக்கு இரு மந்திரங்கள் உள்ளன.
சாயி பஜனை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனது மகளும் பஜனைப் பாடல்கள் பாடுவாள். மகன்மார்கள் இருவரும் பஜனை மண்டபத்தில் விளையாடித் திரிவார்கள். அங்கே சிறுவர்களுக்கான பாலவிகாஸ் வகுப்புகள் சிறிது காலம் நடைபெற்றது. என்னைத் தான் அதற்குப் பொறுப்பாக விட்டதால் நானே நடத்தும்படி வந்தது.
பஜனையை நடத்தும் அந்த சகோதரர் ஆத்மீக நூல்களையும் இடையிடையே வாசிப்பதற்குத் தருவார். அதில் பலவகையான ஆங்கில நூல்களும் இருக்கும். அதில் 'இறைவனுடனான உரையாடல்கள்' (Conversations with God) என்னும் ஒரு நூலானது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்நூலை எழுதியவர் பெயர் நீல் டொனால்ட் வால்ஷ் (Neale Donald Walsch) ஆகும். அவர் எதாவது மனக்கஷ்டங்கள் வருகையில் அதனை ஒரு காகிதத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். ஒரு முறை அவருக்கு மனைவி, மக்களுடன் பிரச்சனை, வேலையில் பிரச்சனை அத்துடன் உடல் நலத்திலும் பிரச்சனை வந்த போது வழக்கம் போலத் தனது மனத்தாங்கல்களை ஒரு காகிதத்தாளில் எழுத என்று தொடங்கி விட்டுப் பின்னர் வெறுமே எழுதாமல் ஏன் இம்முறை இறைவனை விளித்து எழுதக்கூடாது என எண்ணி 'இறைவா,' எனத் தொடங்கித் தனது கவலைகளை எழுதினார். எல்லாவற்றையும் எழுதி முடித்த பின்னர் அவர் பேனாவை அகற்ற முனைந்த போது அவரது கை மேலும் ஏதோ எழுத முனைந்தது. கையை அதன் போக்கில் விட 'உனக்கு இக்கேள்விகளுக்குப் பதில் வேண்டுமா அல்லது சும்மா தான் எழுதினாயா?' என்ற கேள்வியை அவரது கை எழுதியிருந்தது. அவருக்கு அதிசயமாக இருந்தது. அப்போ அவர் அக்கேள்விக்குப் பதில் எழுதுமுகமாக, 'நான் சும்மா தான் எழுதினேன். ஆனால் பதில் வருமென்றால் நன்று' என எழுதினார். அப்படித்தான் இறைவனுடனான அந்த உரையாடல் ஆரம்பித்தது. அவர் தனது கேள்வியை எழுதி முடித்து விட்டுப் பேனாவை சும்மா வைத்திருக்க அவரது கை அவரின் முயற்சியில்லாமலே பதிலை எழுதும். எழுதி முடியும் வரை என்ன எழுதப்படப் போகிறது என்பது அவருக்குத் தெரியாது. இதனை 'ஆட்டோமாட்டிக் ரைட்டிங்' (automatic writing) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த வகையில் பற்பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. படிப்படியாக அப்படித் தொடங்கப்பட்ட உரையாடலானது ஒரு கட்டத்தில் அவருடைய பிரத்தியேகமான விஷயங்களில் இருந்து பொதுவான விஷயங்களுக்கு மாறியது. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் பேப்பரும் பேனாவுமாக அமர்ந்து இறைவனிடம் கேட்க வேண்டியவைகளை எழுதி விட்டுக் காத்திருக்க அவரது கை தானே பதில்களை எழுதத்தொடங்கும். அவருக்கும் இது எங்கே முடியப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இறைவன் இந்த உரையாடல்கள் அனைத்தும் மூன்று புத்தகங்களாக வெளிவரும் என எழுதினார். அப்போது அவர் அதனை நம்பவில்லை. ஆனால் முதல் புத்தகத்துக்குரிய விஷயங்கள் எழுதி முடியவும் அதனை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளைத் தொடங்கும்படி உரைக்கப்பட்டது. உலகம் இதனை ஏற்குமோ ஏற்காதோ எனப் பயந்து கொண்டே தொடங்கினார். அது வெற்றிகரமாக வெளியிடப்பட்டு விற்பனையும் அமோகமாக நடந்தது. பிரத்தியேகமான விஷங்கள் முதலாவது புத்தகத்திலும் உலகசம்பந்தமான விஷயங்கள் இரண்டாவது புத்தகத்திலும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மூன்றாவது புத்தகத்திலும் வெளிவந்தன. அம்மூன்று புத்தகங்களையும் வாசித்து அனைவரும் வியந்தோம். உண்மையிலேயே பதில்களெல்லாம் சாதாரண மனிதர்களால் சொல்ல முடியாத பதில்களாகவே இருந்தன. எம்மையும் இவ்வுலகையும் படைத்து உருவாக்கிய ஒருவராலே தான் அப்படிப்பட்ட பதில்களை அளிக்க முடியும். அதிலும் அந்த மூன்றாவது புத்தகம் (பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றியது) ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகமாகும்.
எனக்கு ஆன்மீகத்தில் வழிகாட்டி போலிருந்த அந்த சகோதரர் ஒரு நாள் எனக்கு 'இவ்வுலகுக்கு அப்பால்' (A World Beyond) என்ற ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வாசிக்கும்படி தந்தார். என் மனமோ ஏன் இதை நான் வாசிக்க வேண்டும்; ஆன்மீகத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணியது. ஆனால் அதனை வாசிக்கத் தொடங்கிய பின்னர் தான் இறப்பின் பின்னர் என்ன நடக்கின்றது என்பதை உணராத வரை நாம் ஆன்மீகத்தின் நுனிப்பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறோம் என்பதனை உணர்ந்தேன். அதன் பின்னர் எனக்கு அந்தத் துறையில் அதாவது இறப்பின் பின்னர் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிவதில் நாட்டம் வந்து அதைப் பற்றிய புத்தகங்களை மேலும் மேலும் வாசித்து அறிந்து கொண்டேன். A World Beyond என்ற அந்த ஆங்கில நூலானது பார்வைக்கு மிகச்சிறியதாக இருந்ததால் அதனை ஏன் நான் மொழி பெயர்க்க இயலாதென எண்ணினேன். ஏற்கனவே CWG என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'இறைவனுடனான உரையாடல்கள்' என்ற நூலை நான் மொழி பெயர்ப்பது என்று ஒரு எண்ணம் சிலரின் மனதில் (நான் உட்பட) இருந்தது நான் அறிவேன். ஆனால் அப்புத்தகங்கள் மிகப் பெரியனவாதலாலும் அவற்றில் இறைவனின் பதில்கள் சற்றே வித்தியாசமான முறையில் இருந்தமையாலும் அந்த எண்ணத்தைத் தவிர்த்து வந்தேன். A World Beyond என்ற புத்தகம் மிகச்சிறியதாக இருந்ததால் இந்த விபரீத ஆசை எழுந்தது. ஏன் விபரீத ஆசை என்று சொல்கிறேன் என்றால் அதனை மொழி பெயர்க்க ஆரம்பித்ததும் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உணர்ந்தேன். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்மாப் போல புத்தகம் சிறியதாக இருந்தாலும் அதில் உள்ள ஆங்கில வசனங்கள் ஒவ்வொன்றும் மிக மிக நீளமானவை. அத்துடன் மொழி பெயர்ப்பு என்பது எனக்கும் புதியது. ஆரம்பத்தில் நான் அந்த நீளமான ஆங்கில வசனங்களை நேரடி மொழி பெயர்ப்பாக வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தேன். அது அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. பின்னர் தான் அவ்வசனங்களை வாசித்து அவற்றின் தாத்பரியத்தை முழுவதுமாக விளங்கிக் கொண்டு அவ்வசனங்களை எமது தமிழில் எப்படி எழுதுவதென யோசித்து எழுதத் தொடங்கினேன். அப்போ எனக்கு இப்படி நாம் வலைத்தளம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்றோ அதில் நாம் தமிழில் எமது படைப்புகளைப் பதிவு செய்யலாமென்றோ தெரியாது. அதனால் நான் அப்புத்தகத்தின் மொழி பெயர்ப்பைக் கையெழுத்துப் பிரதியாக பஜனைக்கு வருபவர்களுக்குக் கொடுப்பதற்காக உறுப்பெழுத்தில் ஒழுங்காக எழுதிக் கொண்டு வந்தேன். சில பக்கங்களை எழுதிய பின்னர் சிலருக்கு அதனை வாசிக்கவும் கொடுத்தேன். அப்போ எனது மொழி பெயர்ப்பும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை; அத்துடன் பல பேருக்கு இறப்பின் பின்னர் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அறிவதில் அவ்வளவு ஆர்வமும் இருக்கவில்லை. ஆனாலும் எனது மொழி பெயர்ப்பை நான் தொடர்ந்து கொண்டே இருந்தேன். அப்போ தான் இலவசமாக நாம் வலைத் தளங்கள் நடத்துவது எப்படி என்பதை அந்த சகோதரர் காட்டித் தந்தார். ஆனால் தமிழில் டைப் செய்வது என்பது அப்போது பெரிய விஷயமாக இருந்ததால் (transliteration முறை அப்போது எனக்குத் தெரியாது) நான் அந்த வலைத்தளத்தில் ஒன்றும் செய்யவில்லை. அந்த சகோதரர் அடிக்கடி வலைத்தளத்தில் ஒன்றும் செய்யவில்லையா எனக் கேட்பார். அதனால் ஒரு நாள் அந்த வலைத்தளத்தை ஆராய்ந்தேன். அப்போ தான் இந்த transliteration என்ற முறையில் நாம் இலகுவாகத் தமிழில் பதிவு செய்யலாம் என்று கண்டு பிடித்தேன். அதன் பின்னர் எனது மொழி பெயர்ப்புகளை அவ்வலைத்தளத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அவ்வலைத்தளத்தின் பெயர் 'ஆனந்தகீதம்'. இணைப்பு: ananthageetham.blogspot.com 
இப்போ (2014/02) அம்மொழி பெயர்ப்பு முடியும் தறுவாயில் உள்ளது.

 /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இப்போ (2020/09/27) மொழிபெயர்ப்பு முடிந்துவிட்டது. 
எவ்வளவோ காலத்துக்குப் பிறகு அதாவது சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவ்வலைத்தளத்தில் எழுத வந்துள்ளேன். இதற்கிடையில் வாழ்வில் தான் எத்தனையெத்தனை மாறுதல்கள்: அப்பனே! நினைத்துப் பார்க்கிறேன்: கானன் நீ தான் கண்ணுக்குள்ளே நிற்கிறாய். நான் டொரொண்டோவுக்கு மாறி வரும் போது உன்னை இழக்கவேண்டி வருமெனக் கனவில் கூட எண்ணவில்லையடா. அக்காவின் மகனான உன்னைப் பெறாமகன் என்று தான் சொல்வார்கள். ஆனால் உன்னைத் தூக்கிய பின்னர் தான் எனக்கு ஆண் பிள்ளை பெறும் விருப்பம் வந்தது. எனவே நீயும் எனக்கு ஒரு மகன் தானடா. 
நாங்கள் கோர்ன்வோல் என்ற நகரில் பதினோரு வருடங்கள் இருந்து பின்னர் டொரொண்டோ நகருக்கு 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மாறி வந்தோம். அதற்குள் இலங்கைக்கும் அம்மாவுக்கு துணையாகச் சென்று வந்தேன். 22வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக சென்று வந்தேன். இலங்கையிலும் பலவகை மாற்றங்கள். அக்காவின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளியே நாங்கள் வாங்கிய கொண்டமேனியம் என்று இங்கு (டொரொண்டோவில்) அழைக்கும் ஃபிளட்ஸ் இருந்தது.
ஆனால் கோர்ன்வோல் நகரில் இருக்கையிலும் எனக்குச் சில ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. எனது சில முந்தைய பிறவிகள் எனக்குத் தெரியவந்துள்ளன. நினைத்துப் பார்த்தால் மொன்றியலில் இருக்கையிலேயே சில விஷயங்கள் எனக்குக் கனவுகள் மூலம் உரைக்கப்பட்டுள்ளன. கோர்ன்வோலில் ஒருநாள் காலை நானும் மகளும் மட்டும் இருக்கையில் நான் நித்திரையாக இருக்கையில் யாரோ என்னை "மும்தாஸி" என அழைக்க நான் அதற்கு "ஆமாம்" எனப் பதிலளித்துக் கொண்டு எழுந்தேன். எழுந்த பின்னர் தான் 'மும்தாஸி' என்றல்லவா அழைக்கப்பட்டேன் என்பது புரிந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை மகள் 'அம்மா' என அழைத்தது தான் எனக்கு மாறிக் கேட்டதோ என எண்ணி நித்திரையிலிருந்த மகளை எழுப்பிக் கேட்டேன். தான் என்னை அழைக்கவில்லையென மகள் உரைத்தாள். ஆனால் எனக்கு யாரோ என்னை 'அப்படி' அழைத்து அதற்கு நான் பதிலளித்துக் கொண்டு எழுந்தது சர்வநிச்சயமாகத் தெரிந்தது. அதன்பின் தான் 'மும்தாஸி' என்றல்லவா அழைத்தார்கள். ஆனால் நாம் பாடசாலையில் ஷாஜகானின் மனைவியின் பெயர் மும்தாஜ் என்று தானே படித்துள்ளோம். இதென்ன மும்தாஸி என எண்ணி இன்டர்நெட்டில் அதனை ஆராய்ந்தேன். அப்போ தான் உண்மையில் அவளின் பெயர் மும்தாஸி என அறிந்தேன். இந்த உண்மையும் அதனை நான் அறிந்து கொண்ட விதமும் கூட எனது ஆர்வத்தையும் கற்பனையையும் தூண்டின. அப்போ நான்தானா மும்தாஸி என என்னை நானே கேட்டுக் கொண்டேன். ஆமென எனது மனம் சொன்னது. அதன்பின்னர் என்னால் அவர்களின் மாளிகையை எண்ணிப் பார்க்கையில் ஊதா நிறத்திலும் பொன் நிறத்திலும் தான் அவர்களின் மாளிகை அலங்கரிக்கப் பட்டிருப்பதாக எண்ணம் வந்தது. அவர்கள் ஒரு மூடிய சமூகமாக இருந்ததாகவும் அரசியாக இருந்த நான் அனைவருக்கும் பல உதவிகள் புரிந்ததாகவும் எண்ணங்கள் வந்தன. இவையெல்லாம் எனது கற்பனை என்று சொன்னாலும் என்னை யாரோ மும்தாஸி என அழைத்து நான் அதற்குப் பதிலளிக்கு முகமாக ஆமென்று கொண்டு எழுந்தது உண்மையாக நடந்ததே. 
அதற்கு முன்னர் ஒரு கனவில் நான் ஒரு வெள்ளையனாக இருப்பதாகவும் இப்போ டாக்ஸி ஹையர் செய்வது போல் அந்நாட்களில் குதிரை வண்டியை ஹையர் செய்யலாம் எனவும் நான் வீடு மாறுவதற்காக அப்படி ஒரு குதிரை வண்டியை ஹையர் செய்து கொண்டு செல்வதாகவும் அந்தக் குதிரை வண்டிக்காரன் என்னை மயக்கி அதன்பின் எனக்குத் தெரியாமல் கடத்திக் கொண்டு சென்று எனது நெஞ்சில் கழுத்துக்குக் கீழே டியூலிப்ஸ் என்ற ஒருவகை மலரின் வடிவில் மாலை வடிவில் பச்சை குத்திய குறையில் என்னைக் கொண்டு சென்று வீட்டில் விட்டதாகவும் பின்னர் தான் நான் அதனைப் பார்த்து அதனை எப்படி அழிப்பதென எல்லாரிடமும் கேட்டுக் கொண்டு திரிவதாகவும் கனவு கண்டேன். அதில் நான் ஒரு வெள்ளையனாக இருந்தேன். 
பின்னர் ஒருநாள் நானும் மகளும் கிங்ஸ்ரன் நகருக்கு சென்றிருந்தோம். அங்கு இடம் பார்ப்பதற்கு அழைத்துச் செல்லும் ஒரு குழுவுடன் இருவரும் செல்கையில் என்னுடைய கைப்பையில் தண்ணீர்ப் போத்தல் இருந்ததால் சிறிது கனமாக இருந்ததாலும் எனக்குக் காலிலும் சற்று நோ இருந்ததாலும் மகள் என்னிடம் இடையிடையில் எனது கைப்பையைத் தான் தூக்குவதற்குக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் "பரவாயில்லை என்னால் தூக்க இயலும்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சுற்றுலாவால் வீட்டுக்கு வந்தபின் அன்று இரவு கனவில், ஒரு பேர் பெற்ற அமெரிக்கன் பாடகியின் வீட்டில் வேலை செய்யும் ஒரு மனிதனாக நான் இருப்பதாகவும் வீட்டில் முன் புறம் ஒரு பக்கத்தில் இருக்கும் ஒரு கொட்டகையில் இருந்து சில பாரமான மரப்பலகைகளை நான் தூக்கிக் கொண்டு சென்று வேறெங்கோ அடுக்குவதாகவும் எனது மகள் அப்போ எனக்கு மகனாக சிறுவனாக இருப்பதாகவும் அவன் தான் அப்பலகைகளைத் தூக்குவதாகச் சொல்வதாகவும் நான் அதற்கு "இல்லையில்லை அது எனது வேலை" என்று சொல்லி மறுப்பதாகவும் அந்நேரம் அப்பாடகி வெளியில் எங்கோ செல்வதற்காக வீட்டினுள் இருந்து வெளியில் வருவதாகவும் கனவு கண்டேன். அந்தக் கனவைப் பற்றி அறிந்த சிலர் எனக்கு அப்பாடகி விருப்பமென்பதால் அப்படிக் கனவு கண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கனவுக்கு முன் எனக்கு அப்பாடகியில் ஒருவிதமான அபிப்பிராயமும் இருந்ததில்லை. ஆனால் அக்கனவுக்குப் பின் எனக்கு அவளில் ஒரு தந்தைக்குரிய வாத்சல்யம் தோன்றியிருக்கிறது.   
இப்படியாக எனது முந்தைய பிறவிகள் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. டொரொண்டோவில் 'கொண்டோ' வாங்கும் அலுவலில் இந்த 'மோர்ட்கேஜ்' இப்படி இழுபடுகையில் எனக்கு ஒரு உள்ளுணர்வு வந்தது. என்னவென்றால் நான் தான் இந்த அனுபவத்தை விரும்பி வந்தனான் என்றும் ஏனென்றால் முதற் பிறவியொன்றில் வேறு ஒருவரை இப்படித்தான் அலைக்கழித்தனான் என்றும் அதனால் அந்த அனுபவத்தை நானும் அனுபவிக்கத் தான் இப்படியொரு அனுபவத்தை வேண்டி வந்ததாகவும் தெரியவந்தது. என்னுடைய காலில் வந்த பிரச்சனையும் அவ்வாறே முற்பிறவியில் வேறொருவரை நான் கஷ்டப்படுத்தி அவருக்குக் காலில் பிரச்சனை வந்ததால் இப்பிறவியில் எனக்கு அப்படி வரவேண்டுமென்று வாங்கி வந்ததாக உணர்ந்தேன்.
சிலர் மறுபிறவி என்பதெல்லாம் பொய் என்பதாகச் சொல்வார்கள். ஆனால் இப்போ பல அமெரிக்கர்கள் அதைப் பற்றி ஆராய்ச்சி நடத்துகிறார்கள். இயன் ஸ்டீவன்ஸன் (Ian Stevenson) என்னும் ஒரு அமெரிக்கர் வேர்ஜீனியாப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மனோதத்துவப் பிரிவின் தலைவராகவும் பின்னர் கால்ஸன் பேராசிரியராகவும் பின்னர் அத்துறையிலேயே ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் 1957ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை இருந்தவர். அவர் மறுபிறவியைப் பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறு குழந்தைகளுக்குத் தங்களது போன பிறவி ஞாபகங்கள் இலகுவாக வெளியில் வரும் என்பது அவர் கருத்து. அவர் நாற்பது வருடங்களுக்கும் மேலாக மூவாயிரம் குழந்தைகளின் போன பிறவி ஞாபகங்களை ஆராய்ந்துள்ளார். காரணமில்லாது சிலருக்கு சில விஷயங்களில் உண்டாகும் பயங்கள், சிலருக்கு சிலரில் காரணமில்லாது ஏற்படும் அன்பு, சிலருக்கு இருக்கும் சில விசேட திறமைகள் மற்றும் சில உடல் உபாதைகள் போன்றவற்றுக்கு அவர்களின் போன பிறவியில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாகலாம் என்பது அவர் கருத்தாகும். அவர் மறுபிறவியைப் பற்றிக் கிட்டத்தட்ட முன்னூறு கட்டுரைகளும் பதின்நான்கு புத்தகங்களும் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'இருபது குறிக்கப்பட்ட மறுபிறவி நிகழ்வுகள்' (Twenty Cases Suggestive of Reincarnation) எனும் புத்தகமாகும். இயன் ஸ்டீவன்சன்னுக்குப் பின் அங்கு இணைப்பேராசிரியராக இருந்த ஜிம் டக்கர் (Jim Tucker) என்பவர் அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரும் 'வாழ்வுக்கு முந்தைய வாழ்வு: சிறுவர்களின் போனபிறவி நினைவுகளைப் பற்றியதொரு விஞ்ஞான ரீதியிலான ஆய்வு (Life Before Life: A Scientific Investigation of Children's Memories of Previous Lives) என்ற நூலை 2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். கரோல் போமன் (Carol Bowman) எனும் யூதப்பெண்ணின் மகன் குழந்தைப் பருவத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தங்களைக்  கேட்கையில் பயந்து கத்திக் கொண்டிருந்ததால் அவர் மகனை வீட்டுக்கு வருகை தந்த மனோதத்துவ நிபுணரிடம் காட்டினார். அந்த நிபுணர் அச்சிறுவனைத் தாயின் மடியில் அமர வைத்து அவனிடம் சாதாரணமாக "வெடிச்சத்தங்களைக் கேட்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது" எனக்கேட்க, அச்சிறுவனோ 'தான் ஒரு பாறையின் பின் ஒரு பெரிய துப்பாக்கியுடன் இருப்பதாகவும் தனக்கு மணிக்கட்டில் துப்பாக்கிச் சூடு பட்டுவிட்டதாகவும் அதனால் சிப்பாய்களின் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகவும் பின்னர் பீரங்கி ஓன்றை இழுத்துக் கொண்டு ஒரு மலையில் தான் ஏறிக்கொண்டிருப்பதாகவும் அது தனக்குப்  பிடிக்கவில்லையெனவும் தனது மனைவியையும் பிள்ளைகளையும் நினைக்கத் தனக்குக் கவலையாக இருப்பதாகவும்' சொல்லத்தொடங்கி விட்டான். அந்த ஐந்து வயதுச் சிறுவனின் வாயிலிருந்து இப்படியான சொற்களை எதிர்பார்க்காத அவனின் தாய்க்கோ ஒரே அதிர்ச்சி. அந்த நிபுணர் கேட்கக் கேட்க அச்சிறுவன் 'தான் ஒரு கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஆணாக அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் (American Civil War) பங்கு பற்றியதாகவும் அப்போது தான் குண்டடிபட்டு இறந்ததாகவும்' உரைத்தான். அன்று அந்த நிபுணரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்த பின்னர் அச்சிறுவனுக்கு அந்தப் பயங்கள் போய்விட்டன. அதுவரையில் மறுபிறவியென்பதைப் பற்றி ஒருவிதமான அறிவும் இல்லாதிருந்த அந்தப் பெண்மணி அதன்பின்னர் மறுபிறவியைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் செய்து இப்போ அதைப் பற்றிப் புத்தகங்களும் வெளியிட்டு, அத்துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் முதல் புத்தகம் 'சிறுவர்களின் முந்தைய பிறவிகள்' (Children's Past Lives) ஆகும். இப்படியாக மறுபிறவியென்பதை நாம் ஒரேயடியாக மறுக்க இயலாதவாறு பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. 
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது. நாம் கோர்ண்வோலில் இருந்து டொரொண்டோக்கு மாறி வருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று மகளின் திருமணத்தை ஒப்பேற்றுவதாகும். என்ன தான் ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தாலும் ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக எனது கடமைகளை எனக்குத் தெரிந்தவரையில் சரியாக செய்வதற்கு முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என எண்ணுகிறேன். அந்த வகையில் மகளின் திருமணம் ஒரு முக்கிய பொறுப்பாகும். மகன்மாரின் படிப்பு அடுத்த காரணம்.     

No comments:

Post a Comment