டொரொண்டோவுக்கு மாறி வந்த புதிதில் எனக்கு வேலையொன்றும் கிடைக்கவில்லை. பின்னர் தான் அக்காவின் ஆலோசனையின் பேரில் டேக்கெயார்களுக்கு சப்ளை ஆசிரியர்களை (அதாவது யாராவது ஒருவர் வேலைக்கு வரவில்லையெனில் அவரது இடத்தை நிரப்பும் ஆசிரியர்களை) அனுப்பும் ஒரு ஏஜென்சியில் வேலைக்கு முயற்சித்து அதுவும் கிடைத்தது. அநேகமாக ஒவ்வொரு நாளுமே வேலை இருந்து கொண்டிருக்கும். ஆனால் வெவ்வேறு டேக்கெயார்களில். சப்ளை ஆசிரியர்களை டேக்கெயார்களில் இருக்கும் ஏனைய ஆசிரியைகள் பெரிதாக மதிக்க மாட்டார்கள். தாங்கள் நிரந்தரமான ஆசிரியர்கள், நாங்கள் தற்காலிகமான ஆசிரியர்கள் என்பதால் எங்களை ஒரு படி குறைவாகவே நடத்துவார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல இயலாது. இரண்டு வயதுக் குழந்தைகள் பத்து உள்ள அறையில் கட்டாயம் இரு ஆசிரியர்களாவது இருக்க வேண்டும். அதில் ஒருவர் வராவிட்டால் அந்த இடத்துக்கு சப்ளையாக வந்திருக்கும் ஆசிரியருக்குக் குழந்தைகளையும் தெரியாது. அவர்களின் பழக்கவழக்கங்களும் தெரியாது. அப்போ அவ்வாசிரியருக்கு பொறுப்பு இரட்டிப்பாகும். அதாவது பிள்ளைகளையும் பார்க்க வேண்டும். அதே நேரம் புதிதாக வந்திருக்கும் ஆசிரியருக்கும் எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனால் அவ்வாசிரியர் தனது கோபத்தைப் புதிதாக வந்திருக்கும் ஆசிரியரிடம் தான் காட்டுவார். எனவே நான் வேலைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பலவகையான கீழ்மைகளை அனுபவிக்க வேண்டி வந்துள்ளது. நான் கொஞ்சம் தன்மானமுள்ளவள். ஆனால் வேலைத்தலங்களில் எனது தன் மானத்துக்கு அடிக்கடி சோதனைகள் வரும். வேலையை விட்டுவிடலாம் போல் இருக்கும். ஆனால் நான் பொறுமை காத்தேன். முதலில் கோர்ன்வோலில் மட்டுமல்ல மொன்றியலிலும் பல வேலைகளை எனது தன்மானத்துக்குப் பங்கம் வந்த காரணத்தால் விட்டுவிட்டு வந்த நான் இம்முறை பல்லைக் கடித்துக் கொண்டு மிகவும் பொறுமை காத்தேன். அதற்கு வேறு வேலை கிடைக்காதென்பது மட்டும் காரணமல்ல. மிக முக்கிய காரணம் எனக்கு சரியான ஆணவம் என்று எனது கனவில் உரைக்கப்பட்டது தான். அந்த ஆணவத்துக்கு ஒருவேளை முந்தைய பிறவிகளில் நான் பலம் வாய்ந்த நபராக இருந்ததும் காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. அதனால் தான் இப்பிறவியில் இப்படிப் பலமில்லாதவளாக வந்திருக்கிறேனோ எனவும் எண்ணுவதுண்டு. அதனால் இப்போ இப்படி நடக்கையில் இதுவும் எனக்கொரு சோதனை தான்; அந்த ஆணவங்களை அடக்கத்தான் இப்படி நடக்கிறதோ தெரியவில்லை என்பதால், எல்லாச் சிறுமைகளையும் பொறுத்துக் கொண்டு வேலைகளுக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். அப்போது தான் எனது பெறாமகனின் இழப்பு ஏற்பட்டது. அது வாழ்வில் பெரியதொரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவராலும் இலகுவாக விடுபட முடியவில்லை.
அதனால் சிறிது நாட்கள் வேலைக்கு லீவு எடுத்து நின்றிருந்தேன். தொடர்ந்து வேலைக்கு லீவு போட்டால் வேலையிலிருந்து நிறுத்தி விடுவார்களோ என்று எண்ணி அடுத்த கிழமை இனி வேலைக்குச் செல்வோம் என எண்ணி அந்த ஏஜென்சியின் மின்னணு ஃபோர்மில் (eform) அந்தக் குறிப்பிட்ட டேக்கெயாருக்கு வேலைக்கு வருவதாக அறிவிப்பதற்காக எனது கைபேசியில் குறிப்பிட்ட அந்தப் பொத்தானை அழுத்துவதற்கு என்று கையைக் கொண்டு செல்ல எனது கை என்னையறியாமல் மற்றைய பொத்தானை அழுத்திவிட்டது. அதாவது வரவில்லை என்பதாக அறிவிக்கும் பொத்தானைக் கை அழுத்திவிட்டது. அருகில் நின்றிருந்த எனது குடும்பத்தினர், எனக்கு உண்மையில் வேலைக்குச் செல்லும் எண்ணமில்லை; வேண்டுமென்றே தான் நான் மற்றைய பொத்தானை அழுத்தியதாகப் பகிடி பண்ணினார்கள். ஆனால் உண்மையில் நான் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் தான் அன்று கைபேசியில் வழமை போல் அந்த வேலையை ஒப்புக்கொள்வதாக அதற்குரிய இடத்தில் அழுத்துவதற்கு முயற்சித்தேன். ஆனால் கை மாறி மற்றைய பொத்தானை அழுத்திவிட்டது. எனக்கே அது ஆச்சரியமாகத் தான் இருந்தது. அப்போ எண்ணினேன் எனது பெறாமகனுக்கு எனது பிரச்சனை தெரிந்ததால் அவனே எனக்கு விருப்பமில்லாத வேலைக்குச் செல்லவிடாமல் மறித்து விட்டானென. பின்னர் சிறிது நாள் ஓய்வு எடுத்துச் சற்று மனம் ஆறுதலடைந்த பின்னர் வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன்.
எனது பெறாமகனின் இழப்புக்குப் பின் குடும்பத்தில் உள்ள ஏனையோரைப் போலவே எனக்கும் விரக்தி, சோகம் எல்லாம் இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் ஆன்மீகத் தேடல் இருந்ததாலோ என்னவோ இனிமேல் ஆன்மீகப் பாதையைத்தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படியென்றால் தான் அவனுடைய இழப்பைத் தாங்க இயலும் என்று மனதில் தீர்மானித்தேன். ஆன்மீகமென்றால் கோவில்களுக்குச் செல்வதென்பதல்ல. எனது மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்தை நோக்கித் திருப்புவதெனத் தீர்மானித்தேன். எனக்கு அப்பப்பக் கனவுகள் மூலமோ வேறு வழிகளிலோ பெறாமகன் வழிகாட்டிக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு குறிப்பிட்ட கனவில் இந்த உடலின் நிலையாமையைப் பட்டவர்த்தனமாக எனக்கு உணர்த்தினான். காசிக்குச் செல்லும் சந்தர்ப்பமும் அவனால் தான் ஏற்பட்டது. அங்கு சென்று கங்கை நதியில் நீராடினோம். அங்கு நிற்கையில் ஏதோ இவ்வுலகை விடக் கொஞ்சம் உயரத்தில் நிற்பது போல ஒர் உணர்வு. என்னதான் விஞ்ஞானிகளும் இளம் பிள்ளைகளும் காசியைப் பற்றியும் கங்கை நதியைப் பற்றியும் குறைவாகச் சொன்னாலும் அந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வீகம் உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். அந்த இடத்துக்கு நான் சொந்தம் என்பது போல உணர்ந்தேன். எங்கள் வீட்டில் எனக்கு மூத்த நால்வர் பிறந்த பின் அப்பா அப்புவைக் காசிக்கு அழைத்துச் செல்வதற்காக பிள்ளைகள் நால்வரையும் அம்மம்மா வீட்டில் விட்டுவிட்டு எனது அம்மாவுக்கும் இந்தியாவுக்கு டிக்கெட் போட்டுக் கொண்டு அப்புவை அழைத்துச் சென்றதாகவும் அங்கு இமாலய அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ், காசியெல்லாம் சென்றதாகவும், இந்தியாவால் வந்தபின் தான் நாங்கள் ஐந்து பெண்களும் பிறந்ததாகவும் அம்மா அப்பா சொல்வார்கள். அப்பா நான் தான் திருச்செந்தூர் வள்ளி என்று செல்லமாகச் சொல்வார். எனக்கு இப்படி ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதால் அங்கு ரிஷிகேஷில் இருந்த ரிஷி யாரோ தான் வந்து பிறந்திருப்பதாக நான் பகிடிக்குச் சொல்லிக் கொள்வேன். ஆனால் காசியில் நிற்கையில் உண்மையிலேயே முந்தி ஏதோ ஒரு பிறவியில் அங்கு நான் இருந்திருப்பதாக உணர்ந்தேன்.
டேக்கெயார் சப்ளை ஆசிரியராகப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாகச் சென்று கொண்டிருந்த என்னை இனிப் பொறுத்தது போதும் என்பது போல வேலையை விடும் படி செய்வதற்கு இறைவனோ அன்றி இப்பிரபஞ்சமோ அந்த மாபெரும் சக்தி தீர்மானித்தது போலும். ஒருநாள் காலை குளியலறையினுள்ளே நான் என்னையறியாமல் மயங்கி விழுந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறேன். அதன்பின் நானாகவே மயக்கம் தெளிந்து எழுந்து, அதன்பின் தான் அறையினுள் படித்துக் கொண்டிருந்த மகன்மாருக்குத் தெரிந்து, இரவு வேலையால் வந்து படுத்துக் கொண்டிருந்த கணவரையும் எழுப்பி சத்தி எடுத்துக் கொண்டிருந்த எனக்கு கைவைத்தியம் பார்த்தார்கள். அதன்பின் எனக்குத் தனியே வேலைகளுக்குச் செல்வதற்குச் சிறிது அச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வெறு இடங்களில் வேலையென்பதால் அவர்கள் விலாசத்தை அறிவித்ததும் முதல் நாள் இரவே கூகிள் மாப்ஸில் (Google Maps) அங்கு செல்லும் வழி, பஸ் எண், சப்வே (subway) எனப்படும் சுரங்க ரயிலின் திசை எல்லாவற்றையும் எழுதியோ அல்லது ப்ரிண்டில் எடுத்தோ கைப்பையில் வைத்து விடுவேன். அப்படியிருந்தும் சிலவேளைகளில் ஏதாவது சந்தேகம் வந்தால் வழியில் யாரிடமாவது கேட்டுக் கொள்வேன். ஆனால் இப்படி நடந்த பின்னர் அப்படித் தனியே புதுப்புது இடங்களுக்குச் செல்வது சற்றே பயமாக இருந்தது. டாக்டர்களும் எல்லாப் பரிசோதனைகளையும் செய்து விட்டு என்ன நடந்ததென்று தெரியவில்லை என்றார்கள். தனியே நடந்து செல்கையில் எனக்கு அப்படி நேர்ந்தால் என்ன நடக்கும் என்று எண்ணி வேலையை விடுவதெனத் தீர்மானித்தேன். அதன்படி அந்த ஏஜென்சிக்கு வேலையை விடுவதாக அறிவித்து விட்டேன்.
அன்று அந்தக் கழிவறையில் நடந்த ஒரு விஷயத்தை நான் பெரிதாக ஒருவரிடமும் உரைக்கவில்லை (என்னை ஒரு லூஸென்று எண்ணுவார்களோ என்பதனால்). வழமை போல் கணவர் இரவு வேலை முடிந்து காலையில் வந்து குளித்து, உணவருந்தித் தேநீர் பருகிவிட்டுப் படுப்பதற்குச் சென்றுவிட்டார். நானும் வழமை போல் தேநீர் அருந்திய பின் காலைக்கடன் முடிப்பதற்காகச் சென்று டாய்லெட்டில் அமர்ந்தேன் (அது வெஸ்டர்ன் டாய்லெட் என்பதால் அமர்ந்தேன் எனலாம் என எண்ணுகிறேன்). அப்போ எனக்கு முன்பாக ஒரு சக்தியின் அருகாமையை உணர்ந்தேன். அந்த சக்தி முன்னே பின்னே பார்க்காமல் நீதி வழங்கும் தன்மையுடையது என்பதையும் புரிந்து கொண்டேன். அவ்வளவு தான் எனக்கு ஞாபகம். பின்னர் நான் நிலத்தில் மயக்கநிலையில் கிடப்பதைத் தான் கண்டேன். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் தலைசுற்றிக் கொண்டு சத்தி வந்தது. எல்லா ஆரவாரமும் அடங்கிய பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை மறுபடி நினைவு படுத்திப் பார்த்த போது உடனே இவ்விஷயம் நினைவுக்கு வரவில்லை. பின்னர் மீண்டும் மீண்டும் என்ன நடந்திருக்கும் என நினைவு படுத்திப் பார்க்கையில் தான் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லி ஏன் எல்லோரையும் பயமுறுத்துவான் என அதைச் சொல்லவில்லை. நீதிமன்றங்களில் நீதி தேவதையின் கண்களைக் கறுப்புச் சேலையால் கட்டியிருப்பார்கள் அல்லவா. அதே போன்றதொரு நீதி வழங்கும் சக்தியைத் தான் என் முன்னே நான் உணர்ந்தேன் (கண்ணால் காணவில்லை ஆனால் உணர்ந்தேன்). இப்போ விஜய் டிவியில் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற தொடரில் சனி பகவானை அப்படித் தான் காட்டுகிறார்கள். முகம் பார்க்காமல் நீதி வழங்குபவர் என்று. அப்படித் தான் ஒரு உணர்வை அந்த சக்தியில் உணர்ந்தேன் அன்று.
ஆனால் இப்படி நான் உணர்ந்தது இது முதல் தரமல்ல. இதற்கு முன் கோர்ன்வோலில் வாகனங்களின் பிரேக் கட்டைகள் செய்யும் ஃபக்ட்ரியில் வேலை செய்கையில் ஒருதரம் எனது காலஞ்சென்ற அண்ணாவின் அருகாமையை உணர்ந்திருக்கிறேன். அந்த நேரம் எனக்கிருந்த மனக்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக அவர் வந்திருப்பார் போலும் என்று தான் எண்ணினேன். இப்படிப்பட்ட நுட்பமான உள்ளுணர்வுகளைப் பற்றி எல்லோரிடமும் கதைக்க இயலாது தானே. அநேகம் பேருக்கு இவையொன்றும் புரியாது. அதனால் அவற்றை எனக்குள்ளேயே வைத்துக் கொள்வேன்.
எங்கள் இந்து சமயத்தில் பல தெய்வங்கள் உள்ளது மற்ற மதத்தவர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பங்களிலேயே உள்ள இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், கொஞ்சம் புரட்சிகரமாக சிந்திப்பவர்கள் என்று பலருக்குக் கேள்விக்குறியாக உள்ள விஷயம் தானே. நானும் சிவபக்தை என்பதால் விஷ்ணுவைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. எனது வீட்டுப் பெயரில் கீதை (கீதா) இருப்பதால் பகவத்கீதையில் கொஞ்சம் நாட்டமும் அதனை உலகுக்கருளிய கிருஷ்ணர் மீது (மஹாபாரதம் படித்ததனாலும்) பக்தியும் உள்ளது. அத்துடன் ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் என்ற ஸ்ரீராமரின் கதையை வாசித்ததனால் ராமரிலும் ஒரு பக்தி. அவ்வளவும் தான் எனக்கும் வைணவத்துக்கும் உள்ள சம்பந்தமாக இருந்து கொண்டிருந்தது பல காலம். ஆனால் எனக்கு விஷ்ணுவைப் பற்றியும் ஒரு உண்மை உணர்த்தப்பட்டது ஒரு நாள். எனது அக்கா மகளின் குடும்பத்துடன் ஒருதரம் ஃப்ளோறிடாவுக்கு வானில் (van) சென்றோம். அங்கு வசிக்கும் எனது தங்கையும் கணவரும் ஒருநாள் எங்களை சிப்பிகள் நிறைய உள்ள ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். பிளாஸ்டிக் பைகள் நிறையச் சிப்பிகள் பொறுக்கினோம். பின்னர் கனடாவுக்குத் திரும்புகையில் இரண்டு பைகள் நிறையக் கடற் சிப்பிகளுடன் திரும்பினேன். அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. மட்டக்களப்பில் சிறுவயதில் பாசிக்குடாவுக்குச் செல்கையில் அங்கு சிப்பிகளில் பலவகையான சிற்பங்கள் செய்து விற்பனைக்கு வைத்திருந்ததும் நாம் அவற்றை வாங்கியதும் நினைவுக்கு வந்ததால் அப்படி ஏதாவது செய்து பார்க்கலாம் என்று அவற்றைக் கழுவிக் காயவைத்து விட்டு ஒருநாள் அவற்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பலவகையான விதம்விதமான சிப்பி, சங்கு, ஊரி வகைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கையில் கடலுக்குள் இப்படி விதம்விதமான, வகைவகையான உயிரினங்களெல்லாம் உள்ளனவே என மனம் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டது. அப்போ எனக்குத் திடீரென்று 'கடலுக்குள் விஷ்ணுவின் அம்சம் உள்ளது' என்று உள்ளுணர்வுக்கு ஒரு தகவல் வந்தது. அந்த உணர்வை எல்லோராலும் விளங்கிக் கொள்ள இயலாது. சற்று நேரம் அப்படியே இருந்தேன். அதன் பின்னர் தான் சிந்தித்துப் பார்த்தேன். எப்போதும் விஷ்ணுவினதும் லக்ஷ்மியினதும் வாழ்க்கை சமுத்திரத்துடன் தொடர்பாகத் தானே உள்ளன என்பது புரிந்தது. விஷ்ணு பாற்கடலில் தான் பள்ளி கொள்கிறார். லக்ஷ்மியும் பாற்கடலைக் கடைகையில் தானே தோன்றினார். அப்படி அவர்கள் இருவரின் வாழ்க்கையுடனும் கடல் சம்பந்தப் பட்டுக் கொண்டேயிருக்கின்றது. மச்சாவதாரம், கூர்மாவதாரம் இரண்டும் கடலில் தானே நிகழ்ந்தது. ராமனாக வந்த போது இறுதியில் சரயு நதியில் தானே ராமர் உயிர் நீத்தார். கிருஷ்ணரின் துவாரகை நகரம் கடலிலேயே தோன்றிக் கடலிலேயே அமிழ்ந்தது தானே. கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆற்றில் இருந்த பாம்பின் மேல் தானே ஆடினார். ஆறெல்லாம் இறுதியில் கடலில் தானே கலக்கின்றன. லட்சுமியையும் அலைமகள் என்று தானே அழைப்பார்கள். அப்போ அவர்கள் இருவரின் வாழ்க்கையுடனும் கடல் இரண்டறக் கலந்துள்ளது என்பதில் எவ்வளவு உண்மை. இந்த உண்மைகள் புரிந்ததும் அந்தச் சிப்பிகளில் கிருஷ்ணர் ராதை சிலையொன்று செய்தேன்.
நாம் ஸ்கார்பொரோ நகரில் இருந்த பதினெட்டு மாடிகள் கொண்ட வானுயர் கட்டடமான கொண்டமேனியத்தின் (condominium) ஆறாவது மாடியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு தான் டொரொண்டோ நகருக்குக் குடி வந்திருந்தோம். அங்கு நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வசித்தோம். பின்னர் பிக்கரிங் (Pickering) என்று ஸ்கார்பொரோ நகருக்குக் கிழக்கு முகமாகக் கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவில் உள்ள ஒரு நகருக்கு மகளின் குடும்பமும் நாமும் சேர்ந்து கொஞ்சம் பெரிய வீடாக வாங்கி மேலும் கீழுமாக வசிக்கும் எண்ணத்தில் குடி வந்தோம். அந்தக் கொண்டோவை (condominium என்பதன் சுருக்கம் condo) விற்பதற்கும் பின்னர் இதனை வாங்குவதற்கும் இடையில் சில பல சிரமங்கள் பட வேண்டியிருந்தது. ஒருவாறாக வீட்டுக்கு வந்து சேர்ந்து சில நாட்கள் இருக்கும் எனது கணவருக்கு ஒரு விசித்திரமான கனவு. அக்கனவில் யாரோ என்னிடம் வந்து வீட்டை விட்டு எழும்பும் படி சொல்வதாகவும், அதைத் தனக்குச் சொல்வதற்காக நான் படியேறி வந்து தான் இருந்த அறைக்கதவைத் தட்டுவதாகவும், தான் பயந்து கொண்டு வந்து கதவைத் திறந்தால் மாமி (இவரின் அம்மா) நிற்பதாகவும், தான் உடனே மாமியின் தோள்களில் முகம் புதைத்து அழுவதாகவும் கனவு கண்டிருந்தார். அந்தக் கனவைக் கேட்டு நாங்கள் அதன் அர்த்தம் புரியாமல் இருந்தோம். ஆனால் கனவின் இறுதியில் மாமி வந்ததால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் சில நாட்களுக்குப் பின் எனக்கு ஒரு கனவு. அதில் நானும் மகளும் சமையல் அறையில் நிற்கையில் நிலத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுப் பட்டுவிட்டது. அதனை நான் கால்களால் எற்றி விடுகிறேன். அப்போ ஒரு ஆள் வந்து, கதிரையில் இருந்து கொண்டு நாம் வீட்டைப் பழுதாக்குவதாகவும், அதனால் உடனே வீட்டை விட்டு எழும்ப வேண்டுமென்றும் சொல்கிறார். நான் அவரிடம் கெஞ்சுகிறேன். ஆனால் அவர் முடிவான முடிவாகச் சொல்கிறார். கனவால் எழுந்ததும் எனக்கு அச்சம் வந்து விட்டது. அப்போ வீட்டை விட்டு எழும்புவதா எனக் குழம்பி நான் இறைவனிடம், "ஒருமாதிரிக் கஷ்டப்பட்டு இப்போ தான் நாம் செட்டில் (settle) பண்ணியிருக்க இப்படிக் கனவு வருகிறதே! நாங்கள் எங்கு செல்வோம்" என வேண்டினேன். பின்னர் இறைவன் அருளால் இன்னொரு கனவு வந்தது: அக்கனவில் மேலே உள்ள sunroof க்குள் ஆகாயத்தில் இருந்து வில்வம் இலைகள் விழுவதாகக் கனவு கண்டேன். அதன்பின்னர் தான் சற்று நிம்மதி வந்தது அனைவருக்கும். எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பதற்கிணங்க நாம் இரு குடும்பங்களும் தனித்தனியே தான் மேலும் கீழும் வசிப்பதாக முடிவு செய்து தான் அந்த வீட்டை வாங்கி வந்திருந்தோம். முதலில் மகள் தாங்கள் பேஸ்மெண்ட்டில் வசிப்பதாகவும் எம்மை மேலே வசிக்கும் படியும் தான் சொன்னாள். ஆனால் கணவர் நாம் பேஸ்மென்டில் வசிப்போம் என்றார். நாம் குடி வந்தபொழுது பேஸ்மெண்டில் சில திருத்த வேலைப்பாடுகள் இருந்ததால் அதுவரை நாமும் மேலேயே வசித்தோம். திருத்த வேலைப்பாடுகள் முடிந்ததும் தான் நானும் கணவரும் பேஸ்மென்டுக்கு வந்தோம். கணவரின் வேலை நேரம் மாலை நான்கு மணியில் இருந்து நள்ளிரவு பன்னிரெண்டரை வரையும். மகள் குடும்பமும் இரு மகன்மாரும் மேலே வசிப்பவர்கள். மகன்மாருக்கு உணவு நான் சமைப்பேன். அவர்கள் வந்து அதனை எடுத்துக் கொண்டு அவர்களின் அறைகளுக்குச் சென்று விடுவார்கள். அப்போ நான் தனியே தான் இரவில் கீழே இருக்கவேண்டி வரும். அப்போ எனக்கு அந்தக் கனவுகள் நினைவுக்கு வந்து சற்றே பயம் வரும். அந்தப் பயங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி இரவு நேரம் போகப்போக மிகப்பயமாக இருக்கும். பின்னர் அதனைத் தவிர்ப்பதற்காக 'ரேடியோ சாயி'யின் யூ டியூப் (YouTube) வீடியோக்களை இரவு தனியே இருக்கும் நேரங்களில் பார்க்கத் தொடங்கினேன். அதனால் அந்தப் பயங்கள் குறையத் தொடங்கின. 2001 ஆம் ஆண்டு பாபாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த அமைப்பானது இப்போ 'சத்யசாயி மீடியா சென்டர்' எனும் புதிய பெயருடன் ஆறு விதமான இன்டர்நெட் ஒளி பரப்பு நிலையங்களாக, வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்படும் யூ டியூப் வீடியோக்களைத் தான் நான் பார்ப்பது. அதில் பல விதமான மக்களின் சாயி அனுபவங்களை அறியக்கூடியதாக உள்ளது. அதனால் வந்த தொடர்பில் எனக்கு 'ஸ்ரீ சத்யசாயி யுகம்-4' என்ற வாட்ஸ் அப் குரூப்புக்கு அழைப்பு வந்தது. நான் அதில் சேர்ந்தேன். அதில் ஹொவர்ட் மஃபெட் என்ற அவுஸ்திரேலியர் எழுதிய Sai Baba: Man of Miracles (சாயி பாபா: அற்புத மனிதர்) என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒலி வடிவமாக (audiobook) விட்டிருந்தார்கள். ஹொவர்ட் மஃபெட் எழுதிய இரண்டாவது புத்தகமான சாயிபாபா அவதார் (Sai Baba AVATAR) எனும் புத்தகத்தை நான் முதலிலேயே வாசித்து விட்டேன். அப்புத்தகம் வாசிக்கும் போது இப்புத்தகத்தைப் பற்றி அதன் முகவுரையில் இருந்து அறிந்த போது இப்புத்தகம் வாசிக்கும் விருப்பம் வந்தது. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த ஆசை இப்போ நிறைவேறியது. அவரும் அவரது துணைவியாரும் உண்மையாகவே ஆத்மீகத் தேடல் உள்ளவர்கள் போலும். அவர்களிருவரும் பற்பல இடங்களில் தங்கள் ஆன்மீகத் தேடலைத் தொடர்ந்திருக்கிறார்கள். அத்தேடலின் போது ஷீர்டி சாயிபாபாவைப் பற்றிய ஒரு புத்தகத்தை தான் வாசிக்க நேர்ந்ததாக இப்புத்தகத்தின் அறிமுகத்தில் அவர் குறிப்பிடுகிறார். பின்னர் உலகச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் இருந்து அவர்களின் சொந்த இடமான அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் இந்தியாவுக்கு இரு காரணங்களுக்காகச் செல்ல உத்தேசித்ததாக அவர் எழுதுகிறார். அவர் எழுதிய முதலாவது காரணமானது பிளவாஸ்கி அம்மையாரினால் (Madame Blavatsky) 1875 ஆம் ஆண்டு அடையாறில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரம்மஞான சபையால் (Theosophical Society) நடத்த இருந்த மெய்யறிவு வகுப்புகளுக்குச் செல்வது; இரண்டாவது நோக்கமானது இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து அங்கு இப்போதும் ஆழமான ஆன்மீக வழிமுறைகள் ஏதும் உள்ளனவா அல்லது காணாமல் போய்விட்டனவா என்பதை அறிவதாகும். போல் ப்ரெண்டன், யோகானந்தா, கிப்ளிங், மேடம் ப்ளாவட்ஸ்கி, கொலோனல் எச். எஸ். ஒல்கொட் மற்றும் பல எழுத்தாளர்கள் எழுதியது போல் அமானுஷ்யமான விஷயங்கள் இன்னும் இந்தியாவில் மீதம் உள்ளனவா? இன்னமும் அங்கு எங்காவது மறைவியலான அறிவு ஏதும் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதாகும். இப்படியான தேடலுக்கு ஒரு வருடம் போதுமானது என அவர்கள் எண்ணினார்கள்.
தியோஸோபிப் பள்ளிக்கூடமானது மகிழ்ச்சிகரமாகவும் அவர்களின் எதிர்வரும் பயணங்களுக்கு அவர்களைத் தயார் செய்வதாகவும் அமைந்தது. அவர்கள் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் இருந்த பற்பல ஆச்சிரமங்களுக்கும் சென்றனர். இமாலயத்தின் குகைகளில் இருந்த பற்பல துறவிகளுடனும் யோகிகளுடனும் உரையாடினர்.
சத்யசாயி பாபாவைப் பற்றி ஊரூராக சுற்றித் திரியும் ஒரு யோகியிடம் தான் அவர்கள் முதலில் அறிந்தார்கள். அந்த யோகி, தான் பாபாவைச் சந்தித்ததோ அல்லது புட்டபர்த்தி என்ற கிராமத்தில் இருக்கும் அவரது ஆச்சிரமத்துக்குச் சென்றதோ இல்லையாம். அந்த யோகி அறிந்ததில் இருந்து அவரின் இடத்துக்குச் செல்வது மிகவும் கடினமாம். மிகவும் பின் தங்கிய கிராமப்பகுதியில் தான் அவரது இருப்பிடமாம். மஃபெட் சித்திகளையும் அற்புதங்களையும் பற்றி ஆராய்வதால் அவரின் இருப்பிடத்துக்குச் செல்வது மிகவும் பயனுள்ளது என்று அந்த யோகி எண்ணுவதாகச் சொல்லியுள்ளார். அந்த யோகி பாபா அற்புதங்கள் நிறைந்தவர் என இவருக்குக் கூறியுள்ளார். எப்படிப்பட்ட அற்புதங்கள் என இவர் கேட்டதற்கு அந்த யோகி பாபா வெறும் வெளியில் இருந்து பொருட்களை உருவாக்குவதாகச் சொல்லியிருக்கிறார். பிற்பாடு வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் ஷீர்டி பாபாவின் மறு அவதாரமென அவரின் பக்தர்கள் சொல்வதாக அறிந்த போது அது இவரின் ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது. ஆனாலும் இந்தியாவின் மிகப் பின்தங்கிய கிராமத்திற்கு மாட்டு வண்டியிலும் நடந்தும் செல்வதற்கு அவர்களின் அப்போதைய உடல்நிலை இடம் கொடுக்க மாட்டாது என்பதால் அப்பயணத்தைச் சற்றே ஒத்திவைத்துவிட்டுத் தம் உடல்நிலை சீராவதற்குச் சிறிது நாட்கள் பிரம்மஞான சபையின் சோலைகள் நிறைந்த சூழலில் இளைப்பாற விரும்பினார்கள்.
அவர்கள் பிரம்மஞான சபைக்குத் திரும்பி ஆறேழு மாதங்கள் இருக்கும், ஒருநாள் அங்கு நிர்மலானந்தா என்று பெயர் மாற்றம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்துசமயப் பெண் துறவி வந்தார். அவர் இந்து சமயத் துறவு வாழ்க்கைக்குத் தீட்சை பெறும் போது ஸ்வாமி சிவானந்தர் அவருக்கு அப்பெயரைச் சூட்டினார். ஸ்வாமி சிவானந்தரின் மறைவுக்குப் பின் அவர் சத்யசாயி பாபாவின் பக்தையாகி விட்டார். தான் புட்டபர்த்தியில் பல வியத்தகு அற்புதங்களைக் கண்டிருப்பதாக அவர் உரைத்தார். சத்யசாயி பாபா மெட்ராஸுக்கு வந்திருப்பதாகவும் அவருடன் கூட வந்தவர்களில் தானும் ஒருவர் என்றும் அவர் கூறினார். நிர்மலானந்தாவுடன் சென்றால் பாபாவைத் தரிசிக்கலாம் போல் இருந்தது. ஹோவர்ட் மஃபெட்டுக்கு இச் செய்தி இனிப்பாக இருந்தது. மனைவி ஐரிஸ்ஸுக்கு உடல் சுகயீனமாதலால் அவர் மட்டும் நிர்மலானந்தாவுடன் பாபா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றிருந்தார். அது சாயி பக்தரான வெங்கடேஸ்வரராவ் எனும் ஒரு மைக்கா தொழிலதிபரின் வீடாகும். நிர்மலானந்தா அவரை அங்கு குழுமியிருந்த சனத்தொகையினூடே வழி நடத்திச் சென்று, பாப் றேமர் என்றொரு அமெரிக்கருக்கு அறிமுகப்படுத்தி விட்டு எங்கோ சென்று விட்டார். பாப் றேமர் இவரை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இரு இந்தியர்களுடன் இவரும் நின்றிருந்தார்.
அப்போ அறைக்கதவு உள்ளிருந்து திறந்தது. மஃபெட் ஒருநாளும் கண்டிராத ஒரு மனிதர் வந்தார். அம்மனிதர் மிகவும் சிறிய மனிதராக இருந்தார். அவர் சிவப்பு நிறத்தில் நீள அங்கியொன்று அணிந்திருந்தார். அவருடைய தலைமுடியானது சுருள் சுருளாக அவருடைய தலையைச் சுற்றி ஒரு கூடாக நிறைந்திருந்தது. அவர் மாநிறத்தில் இருந்தார். கண்கள் ஒளி மிகுந்து காணப்பட்டன. அவரது முகமானது உள்ளார்ந்த ஒரு மகிழ்ச்சியினால் ஒளிர்ந்து காணப்பட்டது. மஃபெட் பாபாவைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும் பாபாவின் படத்தை ஒருநாளும் கண்டதில்லையாதலால் இவர் தானோ பாபா என வியந்து கொண்டு நின்றிருந்தார். பாபா நேரே இவரிடம் வந்து "நீங்களா அவுஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளவர்?" எனக்கேட்டார். மஃபெட் "ஆமாம்" என்றார். பின்னர் அந்த இரு இந்தியர்களிடமும் பாபா சென்றார். அவர்களிடம் அவர் தெலுங்கு மொழியில் பேசினார். பின்னர் அவரது கையைத் திருப்பிச் சிறு வட்டங்களாகச் சுழற்றினார். அதை நேராக்கிய போது அவரது கை முழுவதும் விண்ணிற சாம்பல் நிறைந்து காணப்பட்டது. அதை அவர் அவ்விரு ஆண்களுக்கும் பகிர்ந்தளித்தார். அதில் ஒருவர் தன் உணர்ச்சிகளை அடக்க மாட்டாமல் விம்மத் தொடங்கி விட்டார். பாபா அவர் தோளிலும் முதுகிலும் தட்டி ஒரு அன்னையைப் போல் அவருக்கு ஆறுதல் சொன்னார். அவரின் மகனுக்கு வந்த பயங்கர நோய் ஒன்றை பாபா குணப்படுத்தியதாகப் பின்னர் தான் அறிந்து கொண்டதாக மஃபெட் குறிப்பிடுகிறார். பின்னர் பாபா மஃபெட்டிடம் வந்தார். அவருக்கு முன் நின்றும் அவ்வாறே கைகளைச் சுழற்றினார். இம்முறை பாபா தனது அங்கியின் கைகளை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டார். அவரது மனதிலே பாபா தனது அங்கியின் கைகளிலே ஒளித்து வைத்திருந்த சாம்பலைத் தான் தந்திரமாக எடுத்தவரோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது தான் பாபா தனது அங்கியின் கைகளைப் பின்னே தள்ளி விட்டதன் காரணம் எனப் பல வருடத்தின் பின்னர் தான் அறிந்து கொண்டதாக மஃபெட் குறிப்பிடுகிறார். பாபாவுக்கு எங்கள் மனதில் எழும் எண்ணங்களை அறிவதில் ஒரு சிரமமும் இல்லை என்றும் மஃபெட் குறிப்பிடுகிறார். பாபாவின் கைகளில் தோன்றிய சாம்பலை அவர் மஃபெட்டின் கரங்களில் போட்டார். ஒரு கணம் மஃபெட் அதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றிருந்தார். அப்போ அவரின் இடப்புறம் இருந்து ஒரு குரல் "அதை வாயில் போடவும். உங்கள் உடல் நலத்துக்கு அது மிகவும் நல்லது" என்றது. சொன்னது அங்கே மீண்டும் வந்த பாப் ரேமர் ஆகும். சாம்பலை ரசித்து உண்ண முடியுமென்று மஃபெட் ஒருநாளும் எண்ணியதில்லை. ஆனால் அந்த சாம்பலானது நறுமணமுள்ளதாகவும் ருசியாகவும் இருந்தது என்று அவர் எழுதுகிறார். மஃபெட் மேலுமொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். அதாவது பாபா அற்புதங்கள் செய்வதையும் விட மக்களின் மனதில் ஒரு சக்தி வாய்ந்த மாற்றத்தை உண்டாக்குவதாகவும் எழுதுகிறார். எங்களைக் கவலைகளொன்றுமே இல்லாத ஒரு உயரத்துக்கு உயர்த்தி விடுவதாகக் குறிப்பிடுகிறார். சாதாரணமான மனிதனின் துன்பங்களும் சச்சரவுகளும் ஒன்றுமே இல்லாத விதமாக நாம் வாழ்விலும் பார்க்க மேலானவர்களாக உணர்வதாகவும் எழுதுகிறார். தங்களை ஒரு சந்தோஷ வலையம் சூழ்ந்திருந்ததை உணரக்கூடியதாக இருந்ததாகவும் எழுதுகிறார். அவரது மனைவி ஐரிஸ், 'பாபாவுடன் பேசிவிட்டு வந்த பின்னர் தன்னால் பல மணி நேரத்துக்குப் புன்னகை புரிந்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது' என்று சொல்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
பின்னர் அவர் புட்டபர்த்திக்கு நேரே சென்று எவ்வாறு பாபாவின் அற்புதங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தது என்றும் இறுதியில் பாபாவின் தெய்வீகத்தன்மையில் எவ்வாறு தானும் தனது மனைவியும் முழு நம்பிக்கை கொண்டது என்பது பற்றியும் எல்லாம் எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் பாபாவின் உடைக்கு அவரது மனைவியே இஸ்திரி போடவேண்டி வந்ததாம். அப்போது உள்ளே பாக்கெட் ஏதும் இல்லையென்பதை தாங்கள் உறுதி செய்து கொண்டதாகவும் எழுதியுள்ளார். மஃபெட் பாபாவின் பற்பல அற்புதங்களைப் பற்றியெல்லாம் அப்புத்தகத்தில் விபரித்து இருக்கிறார். அவற்றில் எத்தனையோ அவர் நேரே கண்டவையாகும். அத்துடன் அவர் பலரை தான் நேரே பேட்டி கண்டும் உள்ளார். மஃபெட் அங்கு சென்ற சில நாட்களில் சிவராத்திரி வந்ததால் சிவராத்திரியில் பாபா செய்யும் இரு மிகப்பெரும் அற்புதங்களான, ஷீர்டி பாபாவின் சிலைக்கு வெறும் குடத்திலிருந்து விபூதி விழப்பண்ணி அச்சிலை விபூதியில் மூழ்கும் வரை அபிஷேகம் செய்வதனையும் பின்னர் நடு இரவில் பாபாவின் வாயிலிருந்து லிங்கோத்பவம் நடைபெறுவதையும் நேரே இருந்து பார்த்ததாக எழுதியுள்ளார்.
அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை ஒலி வடிவில் கேட்கக் கேட்க எனது நம்பிக்கை இன்னும் பலமாகியது. இன்டர்நெட்டில் பாபாவைப் பற்றி அவதூறாக யாரோ எழுதியதைப் பற்றி நானும் அறிந்திருந்தேன். மனித மனத்தின் பலவீனத்தால் எனக்குமே மனம் சஞ்சப்பட்டது உண்மை. ஆனால் அவ்விதம் எழுதியவர்கள் சமயம் மாற்றும் கோஷ்டி என்பது பின்னர் தெரிய வந்திருந்தது.