OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY - From: Friendship with God
எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்
-தமிழாக்கம்

Tuesday, August 23, 2022

முதலாவது பாகம்

இறைவனுக்கும் எனக்கும் முதல் அறிமுகம் எப்போ என்று எனக்கு ஞாபகமில்லை. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவள் என்பதால் பெற்றார் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறுமணிக்கு மேல் சாமியறையில் எல்லோரும் சேர்ந்து தேவாரம் பாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அப்போ அது பெற்றாருக்காகச் செய்வதாய் இருந்தாலும் சிறுகச்சிறுக மனம் ஒன்றி நானும் இறைவனை வணங்கத் தொடங்கினேன். மற்றைய நாட்களிலும் காலையும் மாலையும் முகம் கழுவி சாமி கும்பிடுவோம். அதாவது இறைவனை வணங்குவோம்.  உணவு உட்கொள்ள முன்பும் அப்படியே செய்வோம். அப்போ இடிமுழக்கம் தாக்கக்கூடாது கடவுளே என்றெல்லாம் இறைவனிடம் கேட்ட ஞாபகம். சில வேளைகளில் பெற்றார் தான் பழக்கினார்களோ தெரியாது. அதாவது எம்மை மீறிய விஷயங்களில் இறைவனுக்குக் கட்டுப்பாடு உள்ளது; அப்படியான விடயங்களில் இறைவனை நாடலாமென்று அப்போ எனக்கு யாரோ சொல்லித் தந்திருக்க  வேண்டும். ஒரு தரம் எனக்கு ஞாபகமாயிருக்கிறது பாடசாலையில் ஏதோ ஒரு விளையாட்டில் பங்கு பெற ரன்னிங் ஷார்ட்ஸ் (running shorts) தேவையென்று டீச்சர் சொன்னதால் 'கடவுளே அந்த ரன்னிங் ஷார்ட்ஸ் இருக்க வேண்டும்' என்று பழைய ஒரு ரன்னிங் ஷார்ட்ஸ் இருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொண்டு வந்து தேடி அது கிடைத்த ஞாபகம். அதற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேனோ என்று நினைவில்லை. இப்படியாகத்தான் இறைவனுக்கும் எனக்கும் முதல் தொடர்பு ஆரம்பித்தது. 

அப்போ எங்கள் ஊரில் ஒரு பெரியவர் ஏதோ ஒரு ஸ்கூலின் ஹெட்மாஸ்டராக இருந்திருக்க வேண்டும் அவருக்கு சுகயீனமென்று, பக்கவாதம் வந்து ஒருபக்கம் இழுத்துவிட்டது என்று பெரியவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்ததால் அவருக்குச் சுகம் வரவேண்டுமென்று இறைவனிடம் இரவு சாமி கும்பிடுகையில் கேட்டேன். அதிலிருந்து யாருக்காவது ஏதாவது சுகயீனமென்றால் சாமி கும்பிடுகையில் அவர்களுக்கும் சேர்த்துக் கும்பிடுவது வழக்கமாகி விட்டது. எல்லோரும் சாமி கும்பிடும் நேரத்திலும் பார்க்க நான் கூடிய நேரம் எடுப்பதை வீட்டிலுள்ள பெரியவர்கள் கவனித்திருக்கிறார்கள். எனக்கு இது தெரியாது. ஒரு நாள் எனது பெரிய அண்ணா என்னிடம் பக்குவமாக 'ஏன் இவ்வளவு நேரம் சாமி கும்பிடுகிறாய்?' என்று கேட்டார். நானும் வெகுளித்தனமாக உள்ளதைச் சொல்லிவிட்டேன். அதை அவர் ஏனையோரிடம் சொல்ல அது எல்லா இடமும் பரவி எனது பாடசாலையில் படிக்கும் ஒரு பெண் என்னிடம் 'நீங்கள் எல்லாருக்காகவும் சாமி கும்பிடுவீர்களா?' எனக்கேட்டாள்.  நான் ஆமென்றதற்கு அப்பெண் நீங்கள் கிறிஸ்தவராக இருந்திருக்க வேண்டுமென்றாள். அவள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவள். ஏனப்படிச் சொல்கிறாள் என அப்போது எனக்கு விளங்கவில்லை. வீட்டில் வந்து விளக்கம் கேட்டேன். அப்போ விளங்கிவிட்டது. (இது எனது ஆத்மீகத் தேடலேயன்றி ஒரு சமயத்தைச் சார்ந்ததல்ல என்பதால் இவ்விஷயத்தை இத்துடன் நிறுத்துகிறேன்.)

எமது வீட்டில் கோவிலுக்குப் போகும் வழக்கம் குறைவு என்றே சொல்லலாம். 'கோயிலாவதேதடா குளங்களாவதேதடா, கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே' என்பதற்கேற்ப வீட்டில் தான் வழிபாடெல்லாம். அப்படியில்லையென்று சிலவேளைகளில் அம்மா கோவிலுக்குச் செல்லவேண்டுமென்றால் அப்பா, 'நான் படுத்திருக்கிறேன் என்னைச் சுற்றிக் கும்பிடு' என்று பகிடிக்குச் சொல்வார். ஆனால் சிலவேளைகளில் திவசம் என்று கோவிலுக்குச் சென்றால் அப்பா அப்படி பக்திப்பழமாக விழுந்து எல்லாம் கும்பிடுவார். எங்கள் வீட்டில் கோவிலுக்கு ஒரே போகும் ஒரேயொரு சீவன் சின்னண்ணர் தான். வெள்ளிக்கிழமை என்றால் போதும் வேட்டியுடுத்திக் கொண்டு பக்திப்பழமாகக் கோவிலுக்குச் செல்வார். அவருக்கு அடுத்தபடியாக சின்ன அக்காவைச் சொல்லலாம். அவரும் திருவிழாநாட்களில் ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வார். விரதநாட்களிலும் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவார். எனக்குப் பசி கிடக்க இயலாதென்பதால் விரதமிருக்கச் செல்வதில்லை. வளர்ந்தபின் பிறர் பகிடி பண்ணியதலோ அல்லது வேறு காரணத்துக்கோ விரதமிருக்கத் தொடங்கி விட்டேன். கந்தஷஷ்டி விரதக்கடைசி நாளன்று  உபவாசமிருந்து கோவிலுக்குச் சென்று அங்கே விழுந்து கும்பிடுகையில் உடல் பொருள் ஆவி எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விழுந்து கும்பிட்ட ஞாபகம்.  
'நேர்த்திக்கடன்' என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். எனக்கு அது புரிவதில்லை. அதாவது இறைவனிடம் எனக்கு இதைச் செய்வாயென்றால் நானுனக்கு அதைச்செய்வேன் என்று கேட்பது. எதையும் உரிமையுடன் அம்மா அப்பாவிடம் கேட்பது போலக் கேட்டே எனக்குப் பழகிவிட்டது. ஆனால் வளர்ந்தபின் ஒரு சோதனை பாஸ் பண்ணினால் சரஸ்வதி பூசை ஒன்பது நாளும் உபவாசம் இருப்பேன் எனக் கேட்டு விட்டுப் பிறகு இன்னமும் கூட அதை நிறைவேற்றாமல் (எக்ஸாம் பாஸ் பண்ணியும் கூட) இருப்பது வேறு கதை. 
பாடசாலையில் எங்களுக்கு சமயவகுப்புகள் நடக்கும். இந்துப்பிள்ளைகள் ஒரு வகுப்பில் இந்துசமயம் படிப்பார்கள்; கிறிஸ்தவப்பிள்ளைகள் வேறொன்றில் கிறிஸ்தவ சமயம் படிப்பார்கள்; இஸ்லாம்பிள்ளைகள் இன்னொன்றில் இஸ்லாம் சமயம் படிப்பார்கள். எனக்குப் பிடித்த பாடங்களில் இந்துசமயமும் ஒன்று. அதிலும் கூடுதலாக சைவசித்தாந்தம் பிடிக்கும். 
'சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை.....'என்று தொடங்கும் ஒரு பாடலை சமயவகுப்பில் ஒருநாள் படித்த அன்று வீட்டில் வந்து பெரிய அண்ணாவிடம் விளக்கம் கேட்டதற்கு அவர், 'எப்போதும் நீ சிவாயநம என்று மனத்துள் நினைத்துக் கொண்டிருந்தால், எந்த ஒரு அபாயமும் வராது' என்று சொன்னார். அதிலிருந்து மனத்துள் ஒரே 'சிவாயநம' என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். இரவில் படுக்கையில் 'சிவாயநம' சொல்லவியலாதே என்பதால் ஏதாவது ஒரேவிதமான ஐந்து பொருட்களைத் தேர்ந்து அவற்றில் அம்மந்திரத்தை வைத்துவிட்டுப் படுப்பேன்.         
வீட்டில் மச்சம், மாமிசம் சமைத்தால் நான் சாப்பிட மறுப்பேன். சாப்பாட்டு மேசையில் நாம் உணவு உட்கொள்ளும் போது அம்மா மீன்குழம்பை எமக்குப் பரிமாறுவதற்குக் கொண்டு வருகையில் நான் உணவுத்தட்டுடன் எழுந்து ஓடுவேன். அம்மா என்னைக் கலைத்துக் கொண்டு வந்து மீன்குழம்பை எனது தட்டில் போடுவா. என்னால் ஏனோ அதைச் சாப்பிடமுடியாது. தொண்டைக்குள்ளால் இறங்க மறுக்கும். மற்றவர்களெல்லாம் சாப்பிடுகையில் எனக்கு ஏன் சாப்பிட முடிவதில்லை என யோசிப்பேன். கடைசியில் நான் ஒரு தெய்வீகப் பிறவியாக்கும் என முடிவெடுத்தேன். அந்த வயதில் அப்பாவை சிவபெருமானாகவும் அம்மாவை உமாதேவியாராகவும் கற்பனை பண்ணும் வயதில் நான் அப்படி முடிவெடுத்தது பிழையில்லை என எண்ணுகிறேன்.
சின்னவயதில் ஒரே பேய்க்கனவுகள் வரும். எங்கள் வீட்டைச் சுற்றிப் பேய்கள் நின்று கொண்டு என்னைத் தரச் சொல்லிக் கேட்கும். அம்மா என்னைக் கொடுப்பதாகப் பயமுறுத்துவா. இப்போ இறந்தபின் ஆத்மாவின் நிலையென்ன என ஆராய்ச்சியெல்லாம் செய்கையில் அவைகளைப் பற்றியெல்லாம், மேலுலகைப் பற்றியெல்லாம் ஆராய்கையில் இந்த ஆவிபயம் இடையிடையே வருகையில் அம்மாவிடம் சிறிய வயதில் சாப்பிடாவிட்டால் பேய் பிடிக்கும் என்று பயமுறுத்தினீர்களா எனக்கேட்டுப் பார்த்தேன். அவர்கள் அப்படிப் பயமுறுத்தவில்லை என்றார்கள்.
ஆத்மீகமென்றால் இறைவனைப் பற்றித்தானே ஆராயவேண்டும் ஏன் ஆவிகளைப்பற்றி ஆராயவேண்டுமென யாரும் நினைக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். எனக்கு சகோதர முறையான ஒருவர் ஒருநாள் ஒரு மீடியம் என்று சொல்லப்படுகின்ற ஆவிகளுக்கும் எங்களுக்கும் இடையே ஊடகமாகச் செயல்படுகின்ற ஒரு ஆங்கிலேயரின் புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தார், 'இதனை வாசித்துப் பாருங்கோ' என. நான் அப்போ நினைத்தேன் ஏன் மீடியத்தின் புத்தகத்தை வாசிக்க வேண்டுமென. ஆனால் வாசிக்கத்தான் தெரிந்தது இறப்பின் பின் நடப்பது என்ன என அறிந்தாலே அரைவாசி ஆத்மீக ரகசியத்தை அறியலாமென.          
சைவசித்தாந்தத்திலே வரும் ஆத்மாவைப் பற்றிய விளக்கங்களெல்லாம் (உதாரணமாகப் பதி பசு பாசம்) விழுந்து விழுந்து படிப்பேன். எனக்கு சமயப்பாடத்திலேயே சைவசித்தாந்தம் தான் மிகப்பிடித்த பகுதி. சாதாரணதரப் பரீட்சையில் விஞ்ஞானப்பாடங்களுடன் சமயத்திலும் கூட எனக்கு விசேட சித்தி வந்தது. கனடா வந்த பின் ஒருதரம் சாயி சென்டரில் நடந்த சற்சங்கக் கூட்டமொன்றில் வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர் அத்வைதம், த்வைதம் என்பதைத் தன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறதாவெனக் கேட்டபோது என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறதென நான் சொன்னதை அப்பெண்மணி நம்பவில்லையெனத் தெரிந்தது. நான் இதெல்லாம் பாடசாலையிலேயே படித்து விட்டேனெனப் பெருமையடித்து அவ்வயதான பெண்ணின் மனத்தை நோகடிக்க விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
நாம் சிறுவர்களாக இருக்கும் போது எங்கள் வீட்டுக்கருகாமையில் இருந்த ஒரு குடும்பத்தில் மனைவிக்கு ஒரே கோவிலுக்குச் செல்லவேண்டும். கணவன் அப்படியல்ல. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் (6,7,8 வயதுகளிருக்கலாம்). கோவிலுக்குச் சென்றால் அப்பெண் பக்திப்பழமாக இருப்பார் (சில சமயங்களில் அக்காவுடன் கோவிலுக்குச் செல்லும் போது கவனித்திருக்கிறேன்). வீட்டிலும் கோவில் மணி கேட்டால் அது நிற்கும் வரையிலும் தலையில் குட்டிக் கும்பிட்டுக் கொண்டேயிருப்பார். வெள்ளிக் கிழமைகளில் என்று நினைக்கிறேன் பிட்டு அவிப்பதற்குக் குக்கரில் அளவாக மண்ணெண்ணையை விட்டுவிட்டு பிட்டை அவிய விட்டுவிட்டுக் கோவிலுக்குச் சென்று வருவா. எண்ணெய் முடிந்ததும் குக்கர் அணைக்கப்பட்டு விடும் தானே என்று சொல்வா. அப்படியொரு கோவில் பைத்தியம். அதைப் போல இன்னொரு குடும்பத்திலும் தாய் ஒரே பக்திப் பழம். தியானமெல்லாம் இருப்பா. தகப்பன் பிசினஸ் செய்பவர். பிள்ளைகள் தங்கள் பாடு. இப்போ நான் இப்படி ஆத்மீகமென்று மினக்கெடுகையில் (அதீத ஈடுபாடு கொள்கையில்), அவர்களின் நினைவெல்லாம் வந்து என்னை யோசிக்க வைக்கும். அவர்களைப் பற்றி ஏனையோர் பேசியதெல்லாம் நினைவுக்கு வரும். நானும் அப்படியோ எனச் சிந்திப்பேன்.
வீட்டில் (மீனாட்சி சுந்தரனார் எழுதிய புத்தகமென்று நினைக்கிறேன்) ஒரு சிறிய புத்தகம் இருந்தது. அதில், 'இறைவன் எல்லா உயிர்களையும் உணர்வுகளின் படி நடப்பதற்கே வழிவகுத்திருக்கிறான். மனிதன் தான் அதனைப் பின்பற்றுவதில்லை. எப்போ மனிதன் தன் உணர்வுகளைப் பின்பற்றத் தொடங்குகிறானோ அப்போதே அவனுக்கு வாழ்வில் வெற்றி கிடைக்கும்' என்பது போலப் பல விடயங்கள் எழுதியிருக்கும். அதனை நான் விருப்பத்துடன் படித்து அவற்றைப் பின்பற்ற நினைப்பேன். எப்போதும் நல்ல பிள்ளையாக இருந்து வரவேண்டுமென்றும் எண்ணிய ஞாபகம். ஆனால் வயதுவர பாடசாலையில் விஞ்ஞான பாடத்தில் டார்வினின் கூர்ப்பு என்றெல்லாம் படிக்கத் தொடங்க எனக்கும் மனதில் (உண்மையிலேயே இறைவன் இருக்கிறானா அல்லது டார்வின் சொன்னது போலத் தான் உலகம் தற்செயலாகத் தோன்றியதா என்பவை போன்ற) சிறுசலனங்கள் வந்தது உண்மை. இப்போ எனது பதினேழு வயது மகன் கடவுள் இல்லை என்றெல்லாம் நாஸ்திகம் பேச நாமும் அப்படியொரு கட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறோமென எண்ணி ஆறுதல் பட முடிகிறது. 
அப்பாவுக்கு சனிதோஷமென்று யாரோ சாஸ்திரம் சொன்னதால் அம்மா சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று சனிபகவானுக்கு அர்ச்சனை போடத் தொடங்கியதால் அம்மாவுடன் சேர்ந்து சனிக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் வந்தது. அப்போது தான் கவனித்தேன் சனிக்கிழமைகளில் கோவிலில் சனம் குறைவாயிருப்பதால் மனம் ஒருமித்துக் கும்பிட இயலுமாக இருந்தது. அதிலிருந்து சனிக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்லும் விருப்பம் வந்தது. அதற்கும் யாரோ விஷேச நாட்களில் சாமி கும்பிட்டால் தான் பலன் உண்டு என்றார்கள். எனக்கு என்னவோ விஷேச நாட்களில் கோவிலுக்குச் சென்று அங்கே பத்தும் பலதும் பேசுவதை விட சனமில்லாத நாட்களில் சென்று மனம் ஒன்றி சாமி கும்பிடுவது பிடித்திருந்தது. 
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை மூன்றும் கூடாது என்று சமயப்பாடத்தில் என்று நினைக்கிறேன் படித்ததன் பின் நகைகளில் ஆசை வைக்கக் கூடாது என்று நினைத்ததனாலோ அல்லது இயற்கையாகவே எனக்கு நகைகளில் ஆசையில்லாமல் போய் விட்டதோ பெரும்பாலும் படித்ததனால் என்றே நினைக்கிறேன், எனக்கு நகைகளில் ஆசையில்லை. காணிகளில் ஆசை வைக்கக்கூடாது. நான் பெண் என்பதால் பெண்ணாசையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நினைத்த ஞாபகம். சிறிய வயதில் அதனால் ஒரு பிரச்சனையும் வரவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ பாடசாலையில் நகைகள் போடக் கூடாதென்றதாலோ என்னவோ நாம் வீட்டில் தோடு மோதிரம் தவிரப் பெரிதாக நகைகள் போடுவதில்லை. ஆனால் பெரிய பிள்ளையான பின் முதன்முதலாகக் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு செல்வதற்காக நகைகளைப் போடச் சொல்லத்தான் பெரிய பிரச்சனையாகி விட்டது. எனக்கு ஞாபகமாயிருக்கிறது பக்கத்து வீட்டு அன்ரி வந்து என்னைக் கெஞ்சிக்கூத்தாடி ஒன்றோ இரண்டோ நகைகள் போடவைத்த ஞாபகம். அதன்பின் அது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது. அவர்களுக்குப் பொன்னாசை, மண்ணாசை என்று விளங்கப்படுத்த முடியுமாவென்று எண்ணி எனக்கு நகைகளில் ஆசையில்லை என்று பொதுவாகச் சொல்லி வைத்தேன். ஆனால் திருமணம் முடித்தபின் மாமியார் நகைகளைப் போடச் சொல்கையில் தட்ட முடியாமல் போட்டு அம்மாவின் "ஓ எங்களிடம் தான் வாலாட்டல் எல்லாம்" என்ற கிண்டலைக் கேட்டேன். 
சிறிய வயதில் பக்கத்து வீட்டில் யாரோ சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள். வழக்கம் போல ஏதாவது விசேஷமான உணவு செய்தால் அம்மா அவர்களுக்குக் கொடுத்து விடுவது போல அன்றும் என்னிடம் தந்து கொடுக்கச் சொன்னதால் அங்கு சென்றிருந்தேன். அவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களெல்லோரும் ஹாலில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் வந்திருந்த சொந்தக்கார அக்கா எமது தேவாரத்தைப் பகிடி பண்ணிப் பாடினா. அதைக் கண்ட மற்றவர்களும் மற்றத் தேவாரங்களைப் பகிடி பண்ணிப் பாடினார்கள். எனக்கு அப்பொழுது எட்டு, ஒன்பது வயதிருக்கலாம். அவர்களெல்லோரும் பெரியவர்கள். அப்போ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போ அந்தச் சம்பவத்தை எண்ணுகையில் ஒரு சிறிய பிள்ளைக்கு ஏழோ எட்டுப் பெரியவர்கள் இப்படிச் செய்ததையும் அப்போ அவர்களின் மனநிலையையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்கு அதனால் என்ன ஆத்மீக முன்னேற்றம் வந்ததென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அதனால் எனது சமயத்தில் இன்னும் கூடுதலான பற்றுதல் வந்தது உண்மை. 
இந்த நேரத்தில் எனக்கு இன்னுமொரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறுமணிக்கு முகம் கழுவி, சாமி கும்புடுகையில் தேவாரம் பாடும் வழக்கம். சில குறிப்பிட்ட பாடல்கள் வழக்கமாகப் பாடப்படும். அதில் ஒரு புராணத்தில் 'மறுசமயங்கள் மாளப் பேதகம் செய்வாய் போற்றி' என்று வரும். அந்த வசனம் வந்ததும் நான் பாடாமல் மௌனமாக நின்று விட்டுப் பின் மிகுதியைப் பாடுவேன். அதை ஏனையோர் கவனித்து விட்டதனாலோ அல்லது நான் அதைப்பற்றிச் சொன்னேனோ என்று நினைவில்லை அப்படிப் பாடுவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை என்று வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிந்து விட்டது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பாடலை விட்டுவிட்டார்கள். முதலில் சொன்ன நிகழ்ச்சி முதலில் நடந்ததா அல்லது இந்த நிகழ்ச்சி முதலில் நடந்ததா என்று எனக்கு நினைவில்லை. இப்போ நினைக்கையில் ஒரு வேளை அப்படி நடந்ததால் தான் ஒவ்வொருவருக்கும் தன்தன் சமயநம்பிக்கைகள் பெரிது தானே என்று எனக்குள் ஒரு விழிப்புணர்வு வந்து தான் அப்படிச் செய்தேனோ என எண்ணுகிறேன்.
சிறிய வயதிலிருந்தே கதைப்புத்தகங்களோடு சமயசம்பந்தமான புத்தகங்கள் மற்றையது வாழ்க்கையைப் பற்றிய அறிவுரைகளுள்ள புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் வந்துவிட்டது. எனக்கு ஞாபகமாக உள்ளது இப்போதும் எனக்கு மூட் அவுட் வந்தால் உடனே பகவத்கீதையை எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்படித் தான் ஒருதரம் அம்மா எதுக்கோ பேசியதனால் மூட் அவுட்டாகி பகவத்கீதையை எடுத்து வாசிக்க தங்கையொருத்தி போய் அம்மாவிடம் சொல்ல அம்மா கூப்பிட்டு "இப்ப என்ன நடந்ததென்று பகவத்கீதையை வாசிக்கிறாய்?" என்று கேட்டது ஞாபகமிருக்கிறது. இந்தப் பழக்கத்தில் கம்பஸ் போன பிறகும் அங்கே கோவிலில் இருக்கும் லைப்ரரியில் 'கர்மகாண்டம்' என்ற புத்தகத்தை வாசித்தேன். சின்ன வயதில் அப்படியான புத்தகங்கள் வாசித்துவிட்டு அதன்படி ஒழுகவேண்டுமென எண்ணி நடப்பதுண்டு. கர்மகாண்டம் வாசித்த பின்னர் அதன்படி ஒழுகுவதைப் பற்றித் தீவிரமாக யோசித்து ஓரளவு நடந்தும் இருக்கிறேன்.
மிகச்சிறிய வயதில் தமிழ், சமயப் பாடங்களிலோ அன்றி நான் வாசித்த புத்தகங்களிலோ கற்புக்கரசிகளைப் பற்றிப் படிக்கும் போது நாமும் அப்படி இருக்க வேண்டுமென எண்ணியது நினைவுள்ளது. அதாவது திருவள்ளுவரின் மனைவி வாசுகியின் கற்பால் துலா நில்லென்று சொன்ன இடத்திலேயே நின்றதாம், யமனோடு போராடிக் கணவனின் உயிரை சாவித்திரி வென்றெடுத்தாளாம், மற்றும் வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் கற்புப் பற்றியெல்லாம் படிக்கையில் நாமும் அப்படியே இருக்க வேண்டுமென எண்ணியதுண்டு. ஆனால் பிற்பாடு ஆனந்தவிகடன் போன்ற புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய பிற்பாடு அதில் வரும் பெண்ணுரிமை சம்பந்தமான விடயங்களைப்  படித்ததனால் பெண்ணுரிமைவாதியாக மாறியதுமுண்டு. எனவே எனக்குள் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருத்தி வாசுகி, அருந்ததியைப் போன்றவள். மற்றையவள் பெண்ணுரிமைவாதி. இரண்டுக்குமிடையில் நான்.
எழுபதுகளில் தான் சாயிபாபாவைப் பற்றி எங்கள் சிறிய டவுனுக்குத் தெரிய வந்திருக்குமென நினைக்கிறேன். அந்த நேரத்தில் தான் இப்படியொரு ஆள் அதிசயம் செய்கிறாராம் எனத் தெரியவர அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் 'அது சித்து விளையாட்டாக' இருக்கும் என்றார். யோகர் சுவாமியின் பக்தனாகிய அவருக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லையோ அல்லது அவருக்கு அப்பொழுது சாயியை நம்பும் நேரம் வரவில்லையோ அவர் அப்படிச் சொன்னதும் நான் சித்து விளையாட்டென்றால் என்னவென்று தெரியாமலேயே பாபாவின் விடயத்தைப் பின்னுக்குப் போட்டு விட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தான் அப்போ பலனில்லை. ஆனால் அயலிலிருந்த பல குடும்பங்கள் பாபா நம்பிக்கையில் பஜனை நடத்துவார்கள். நாம் போகமாட்டோம். ஆனால் எனது சிறிய அண்ணா மட்டும் செல்வார். அவருக்கு மட்டும் தான் அந்த நேரம் பாபா நம்பிக்கை வந்திருந்தது. அயலுக்குள் நடந்த பஜனைகளுக்குச் செல்லாமல் கனடா வந்த பின் கனடாவின் வின்ரர் குளிருக்குள் பஸ், மெட்ரோ எல்லாம் ஏறிக்கஷ்டப்பட்டு பஜனைக்குச் சென்றிருக்க அயலுக்குள் கேட்ட அதே பஜனைப் பாடலைக் கேட்டால் எப்படியிருக்கும்? கண்ணெல்லாம் கலங்கி 'கடவுளே பக்கத்தில், அயலுக்குள் பஜனை நடக்கையில் செல்லாமல், இங்கே இந்தக் குளிருக்குள் இப்படிக் கஷ்டப்பட்டு வந்து இருந்து பஜனையைக் கேட்க வேண்டியிருக்கிறதே' என்பதை எண்ணியெண்ணி மனம் அங்கலாய்க்கக் கண்ணெல்லாம் கலங்கி நெக்குருகி நெகிழ, மகள் "அம்மா அழாதேங்கோ" எனப் பயந்து போய்ச் சொல்ல அது வேறு கதை.
ஆனால் அப்போவெல்லாம் எனது சிறிய அண்ணா அடிக்கடி பாபாவின் முக்கியமாக சீரடிபாபாவின் பெருமையைப் பற்றியெல்லாம் சொல்வார். யாரோ ஒருவருக்கு சீரடிபாபா நேரடியாக வந்து அருள் செய்த கதையெல்லாம் சொல்வார். எனக்குத் தான் அப்போ காலம் வரவில்லை நம்புவதற்கு. கம்பஸில் எனது பக்கத்து அறையிலிருந்த ஒரு சாயி பக்தை சாயிபாபாவின் ஒரு புத்தகத்தைத் தந்து வாசிக்கச் சொன்னாள். நானும் வாசித்தேன். அப்போது கூட பாபா நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்; அதாவது சாதாரண மக்களாகிய எமக்கு வழிபடுவதற்கு ஒரு ரூபமும் ஒரு நாமமும் தேவை. அது கிருஷ்ணராக இருந்தாலென்ன கிறிஸ்துவாக இருந்தாலென்ன என்பது போன்ற பல நல்ல விஷயங்களை அதில் வாசித்தேன். அவர் தன்னை வணங்கும் படி ஒரு இடமும் சொல்லவில்லை. அதை வாசித்த பின்னரும் கூட அவரை ஒரு சமயப் பெரியாரென்ற அளவில் தான் வைக்கத் தோன்றியதே அன்றி அவரைக் கடவுளாக எண்ணத் தோன்றவில்லை. அதற்குக் காலம் வரவில்லை. ஆனால் நல்ல காலம் நான் கனடா வருவதற்கு முன்னர் எனக்கு அவரில் நம்பிக்கை வந்துவிட்டது. எப்படி நம்பிக்கை வந்தது என்பது பெரிய கதை. நானும் மகளும் கனடா வருவதற்கு இமிக்ரேஷன் அலுவலுக்காக வந்து அப்பாவின் சேகிற் பங்களாவில் தங்கியிருப்பது வழக்கம். அதில் அப்பாவின் உபயோகத்துக்கு ஒரு அறை உள்ளது. மற்றைய அறையில் ஒருவரும் இல்லையென்றால் அதையும் நாங்கள் உபயோகிப்போம். அங்கே ஆனந்தவிகடன் போன்ற பல புத்தகங்கள் இருக்கும். எல்லாப் புத்தகத்தையும் வாசித்துவிட்டேன். வேறு புத்தகமொன்றுமில்லை (பாபாவைப் பற்றி ஒரு அவுஸ்திரேலியர் எழுதிய 'சாயிபாபா அவதார்'  என்ற ஆங்கிலப் புத்தகத்தைத் தவிர). அது எங்கள் சின்னத்தானின் புத்தகம். அவருக்கும் பாபாவில் நம்பிக்கையுள்ளது. நான் எந்தப் புத்தகத்தை வாசித்தாலும் அதை மட்டும் வாசிக்கமாட்டேன். அதற்கு காலம் இன்னும் வரவில்லையாக்கும்.
கனேடியன் எம்பஸியிலிருந்து எமக்கு இலங்கையில் பிரச்சனை ஒன்றுமில்லை என்பதால் எமது ஸ்பொன்ஸரைத் தள்ளிப் போடுவதாகக் கடிதம் வந்தது. இவர் கனடாவிலிருந்து என்னையும் மகளையும் ஸ்பெஷல் மினிஸ்ட்ரி பெர்மிட்டில் எடுப்பதற்குத் தான் முயற்சித்தார் (தனக்கு லாண்டெட் இமிகிரண்ட் கிடைக்காததால்). அதற்குத் தான் அவர்கள் அப்படிப் பதில் அனுப்பியிருந்தார்கள். இனி இவருக்கு லாண்டெட் இமிக்ரென்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் தான் நாமிருவரும் கனடா செல்லமுடியும். மூட் அப்ஸட்டாகி அடுத்த ரூமில் போய்ப் படுத்திருக்கையில் என் கை என்னையறியாமல் பாபாவைப் பற்றிய அந்தப் புத்தகத்தை எடுத்தது. அது ஹோவர்ட் மர்பெஃட் (Howard Murphet) என்ற ஒரு அவுஸ்திரேலியர் எழுதிய புத்தகமாகும். அன்று ஒரு வியாழக்கிழமை என்று எனக்குத் தெரியாது. அப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க ஒரே வியப்பாக இருந்தது. இவ்வளவு அற்புதங்கள் செய்திருக்கிறாரா என வியந்தேன். நாம் ஆன்மீகச் சாதகங்கள் செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்து கொண்டு வருகையில் ஒரு கட்டத்தில் எமக்கு சில சித்திகள் கைவரும். அவற்றை நாம் உபயோகித்தால் எமது ஆன்மீகச் சக்திகள் வீணடிக்கப்பட்டு விடும். அப்படிப்பட்ட சித்திகளைத்தான் சித்து விளையாட்டென்று சொல்வதென்று இப்போ தெரியும். அப்படிப்பட்ட சித்திகளை உபயோகித்து அற்புதங்கள் செய்தால் அவர்களின் சக்தி வீணடிக்கப்பட்டு விடும். மீண்டும் அவர்கள் தவம் செய்து அந்தச் சக்தியைப் பெற வேண்டும். ஆனால் பாபா சிறிய வயதில் இருந்தே பலப்பல அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் கூடச் செய்கிறார் என்றால் அவர் கடவுளின் அவதாரம் தான் என விளங்கியது. அப்படியே எனக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பாடசாலையில் இந்து சமயம் ஒரு பாடமாக இருக்கையில் சைவ சித்தாந்தம் எனக்கு விருப்பமான பகுதி. எப்படி ஆத்மா இறைவனை அடைவது, பதி, பசு, பாசம், எல்லாவற்றையும் நன்றாக விரும்பிப் படிப்பேன். தவம் செய்யும் முனிவர்களுக்கு ஒரு கட்டத்தில் அட்டமா சித்திகள் என்று சொல்லப்படுகின்ற எட்டு வகைத் சித்திகள் சித்திக்கும் எனப் படித்திருக்கிறேன். சில நினைவிலும் உள்ளன. அதாவது அணிமா, கரிமா, லகிமா,மஹிமா என எட்டு வகை. இவைகளின் அர்த்தங்கள் இப்போ நினைவில் இல்லை. ஆனால் அவை தான் சித்து விளையாட்டென்று அப்பா சொன்னவை. முனிவர்கள் தவம் செய்து பெறும் சித்திகள். பாபாவுக்குச் சிறிய வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அப்படியென்றால் பாபா கடவுள் தானே. அன்று ஒரு வியாழக்கிழமை. அதாவது பாபாவின் நாள். அன்று தான் பாபா என்னை ஆகர்ஷிக்கத் தேர்ந்தெடுத்த நாள். அப்படியே ஆகர்ஷிக்கப்பட்டேன். வியாழக்கிழமை பாபாவின் நாளென்பது சாயிபக்தையான எங்கள் பெரியம்மா மூலம் எங்களுக்கு முதலே தெரியும். அதீத சாயிபக்தையான எங்கள் பெரியம்மா தனக்கு என்ன நன்மை நடந்தாலும் அது வியாழக் கிழமைகளில் தான் நடக்கும் என்று சொல்பவர். அவர் பாபாக்காக வியாழக்கிழமைகளில் மரக்கறியாக இருந்து பின்னர் வெள்ளிக்கிழமை மச்சம் உண்பதை நாங்கள் பாபாவில் நம்பிக்கை வர முன்னர் பகிடி பண்ணியும் இருக்கிறோம். இப்போ நானே சிலசமயம் அப்படிச் செய்கிறேன்.    
அப்போ பாபாவின் படம் வாங்கவென்று நுகேகொடவில் இருந்த கடைகளுக்குச் சென்றேன். அங்கே ஒரு பெட்டிக்கடை; பாபாவின் படங்களுக்காக மட்டுமே வைக்கப்பட்டிருந்த மாதிரி இருந்தது. அதில் பாபாவின் படங்கள் மட்டுமே இருந்தன. சிங்களவர்களிலும் நிறைய பாபா பக்தர்கள் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியாது அப்போ. ஆசைதீர ஒரு பாபாவின் படத்தைத் தெரிந்தெடுத்துக் கொண்டு நுகேகொடவில் இருந்த அப்பாவின் சேகிற் பங்களாவிற்கு (அங்கே தான் நானும் மகளும் அப்பா, அம்மாவுடன் தங்கியிருந்தது) திரும்பினால், அப்பாவிற்குப் பிடிக்கிறதோ தெரியாது என்பதால் சாமித்தட்டில் (சேகிட் பங்களாவில் ஒரு அறைதான் அப்பாவின் உபயோகத்துக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்ததால் சுவர் அலுமாரியொன்றின் மேல் தட்டிலேயே சாமிப்படங்களை அம்மா வைத்திருந்தா) ஒரு மூலையில் அப்பாவின் கண்ணுக்குப் படாதவிடத்தில் தான் பாபா படத்தை வைத்தேன். அம்மாவிற்கும் வேறொரு சந்தர்ப்பத்தில் பாபாவில் நம்பிக்கை வந்திருந்தது. அதனால் அம்மாவிற்கு மட்டும் சொல்லியிருந்தேன். அடுத்த கிழமை எனது தங்கைமார் இருவர் கொழும்புக்கு ஏதோ அலுவலுக்கு வந்த பொழுது சாமி விளக்குக் கொழுத்தும் பொழுது நடுவே இருந்த சிவன் உமையின் படம் (கலண்டரில் வந்த படத்தையே அம்மா வெட்டி வைத்திருந்தா) தற்செயலாக விளக்கில் விழுந்து சாதுவாக எரிந்துவிட்டதாம். அதை அம்மா சகுனப்பிழையென்று எண்ணிப் பயந்தாலுமென்று தங்கையிருவரும் பாபாவின் படத்தை அந்த இடத்தில் வைத்து சிவன் படத்தை மறைத்து விட்டார்கள். எனக்கு இது தெரியாது. நான் மறுநாள் பார்க்கையில் பாபாவின் படம் முன்னே இருந்தது. ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் தான் என்ன நடந்ததென்று தங்கைமார் சொன்னார்கள். கடவுளேயென்று அப்பாவும் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.
இவருக்கு 'லாண்டட் இமிக்ரண்ட்' அந்தஸ்து கிடைக்கச் சிறிது நாட்கள் எடுக்கலாம் என்பதாலும் தனிய ஒரு அறையில் மகளை வைத்துப் பார்ப்பது (ஐந்து வயது) கஷ்டமென்பதாலும் நானும் மகளும் மட்டக்கிளப்புக்குப் புறப்பட்டோம். அங்கு சென்ற பின் குளித்து, உடை மாற்றி, வந்து சாமி கும்பிட சாமியறைக்கு வந்தால் சாமி கும்பிட மனம் வரவில்லை. நாம் வழக்கமாகக் கும்பிடும் முருகன், சிவன் படங்களெல்லாம் இருந்தன. ஆனால் எல்லாவற்றுக்கும் உயிரில்லாதது மாதிரி வெறும் உடல் மட்டுமே உள்ளது மாதிரி இருந்தது. எனக்கு நேர மூத்த அண்ணா முந்தி வைத்துக் கும்பிட்ட பாபாவின் சிறிய ஒரு படம் இங்கே தானே இருக்கும் என்று சாமிப் படங்களையெல்லாம் விலத்திப் பார்த்தேன். நான் தேடிய அப்படம் ஒரு சாமிப்படத்துக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டிருந்தது. வெறும் மட்டையில் ஒட்டப்பட்டிருந்த அப்படத்தை எடுத்து முன்னால் வைத்தேன். அப்போ தான் எல்லாப் படத்துக்கும் உயிர் வந்தது மாதிரி இருந்தது.    
இவைகளுக்கு எல்லாம் முன்னர் நிகழ்ந்த சில ஆன்மீக அனுபவங்களையும் எழுத விரும்புகிறேன். ஒன்று நான் கம்பஸ் போவதற்கு முன் நிகழ்ந்தது. பண்டாரவளையிலிருந்து அப்பா மாற்றலாகி மீண்டும் மட்டுநகருக்கு வந்து சிறிது நாள். அப்போ அப்பாவுக்கு யாரோ கொடுத்த ஒரு புத்தகம். பெயர் 'கைலாயம் கண்டேன்'. ஒரு ஸ்வாமியார் எழுதியதென்று ஞாபகம். அவரின் பெயர் சச்சிதானந்த ஸ்வாமியென்று நினைக்கிறேன். நிச்சயமில்லை. அந்த ஸ்வாமியார் வேறும் பலருடன் சேர்ந்து கைலையங்கிரிக்கு சென்று வந்ததைப் படங்களுடன் விலாவாரியாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதை வாசிக்க வாசிக்க நானும் அவருடன் சேர்ந்து செல்வதாக உணர்ந்தேன். போகும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள், பனிப்பாறையில் சிலர் சறுக்கி விழுந்தமை எல்லாமே வாசித்தறிந்தேன். அதனை வாசிக்க வாசிக்க அவர்களுடன் சேர்ந்து நானும் கைலாயம் ஏறுவதைப் போல உணர்ந்தேன். மானசரோவர் பொய்கையில் நீராடியதெல்லாம் வாசிக்கையில் நானும் சேர்ந்து அந்தக் குளிரில் நீராடுவதைப் போல உணர்ந்தேன். கடைசியில் கைலை மலையில் அவர்கள் போய் நிற்கையில் நானும் அவர்களுடன் போய் நிற்பதாக நினைத்து எனக்கு நெக்குருகி மெய் சிலிர்த்தது. அந்த இடத்தில் ஆத்மார்த்தமாக நானும் அவர்களுடன் கைலைமலையில் நின்றிருந்தேன்.
இதே போல இன்னொரு அனுபவமும் உள்ளது. இந்தியாவிலுள்ள ஒரு கோவிலுக்கு அஸ்திவாரம் போடுவதற்கு 'ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்' என்ற மந்திரத்தை 108 தரம் எழுதியனுப்பினால் அவர்கள் அக்காகிதங்களை அஸ்திவாரம் கட்டுமிடத்தில் வைப்பார்கள் என்றும் அது எங்களுக்கு நன்மை பயக்குமென்றும் அம்மாவுக்கு யாரோ சொன்னதால் அம்மா எங்களை எழுதச்சொன்னார்கள். நாங்களும் எழுதிக்கொண்டிருந்தோம். ஒரு நாள் நான் தனியே பின் கராஜுக்குள் உள்ள மேசையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் போது கராஜின் திறந்திருந்த கதவால் ஒரு பாம்பு உள்ளே எகிறிக் குதித்து சுவரில் வழுக்கிக் கீழே விழுந்து வழுக்கிக் கொண்டு அப்படியே மறுபக்கக் கதவால் வெளியேறி விட்டது. கண்மூடிக் கண்திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி என்னை வியப்பிலாழ்த்தி விட்டது. பிற்காலத்தில் இந்த விஷயத்தை தெரிந்த ஒருவருக்குச் சொன்ன போது அவர் சொன்னார் அது நிச்சயமாக ஒரு ஆன்மீக அனுபவம் தான் என்று. அதாவது விஷ்ணு ஆசீர்வதிக்க வந்துள்ளார் என்று சொன்னார்.
ஆனால் இவையெல்லாவற்றையும் மிஞ்சும் ஒரு அனுபவம் உள்ளது. அதுவும் கராஜுக்குள் தான் ஏற்பட்டது. ஒரு நாள் அந்தி சாயும் நேரம் நான் கராஜுக்குள் தனியே இருந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். எனக்குத் திடீரென்று 'நான் யார் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணம் தோன்றி விட்டது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பயம் வந்து விட்டது. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டேன். திடீரென்று ஒரு இருபது இருபத்திரண்டு வயதுப் பிள்ளைக்கு உள்மனதுள் 'நான் யார் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணம் வந்தால் எப்படியிருக்கும்? இப்போ நினைக்கையில் அது ஒரு ஆத்மீக உணர்வு என்று தெரிகிறது. ஆனால் அந்த வயதில் அது எனக்குப் பயத்தைத் தந்ததில் ஆச்சரியமில்லை. அதன் பின் அப்படித் தனிமையில் இருப்பதைத் தவிர்த்த ஞாபகம். அப்போ எனக்கு லூஸோ என்று கூட நினைத்த ஞாபகம்.

Saturday, August 20, 2022

இரண்டாம் பாகம்

எனது ஆன்மீகப் பயணத்தைக் கனடாவுக்கு வருவதற்கு முன், கனடாவுக்கு வந்ததன் பின் என இரண்டாகப் பிரிக்கலாம் எனத் தோன்றுகிறது. முதலில் நான் பாபா பக்தையாவதற்கு முன், அதன் பின் எனப் பிரிப்போமோ என நினைத்தேன். ஆனால் முதற் பகுதியில் நான் பாபா பக்தையான விதமெல்லாம் எழுதிவிட்டேன் என்பதனால் அதனை விட்டுவிட்டேன். ஆனால் நான் பாபா பக்தையான பின்னர் தான் கனடாவுக்கு வந்தேன். அதுவும் அவனருள் தான் (அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பார்கள்). நான் கனடாவுக்கு வருவதற்கு முன் தன்னில் நம்பிக்கை வரச்செய்ய வேண்டும் இல்லாவிடில் இவள் நிரம்பக் கஷ்டப்படுவாள் என அவர் தீர்மானித்தாரோ என நான் எண்ணுவதுண்டு. வைப்ரேஷன் (vibration) என்று சொல்வார்கள். எமது நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ போல இல்லை மேற்கத்தைய நாடுகளின் வைப்ரேஷன். இங்கு எப்படிப்பட்ட நல்லவர்களும் கொஞ்சம் தடுமாறுவார்கள் தான். இந்த வைப்ரேஷனில் உண்மையுள்ளது. வைப்ரேஷன் என்றால் Google Translate இல் அதிர்வு என்று உள்ளது. அதாவது எமது எண்ணங்கள் எல்லாம் பிரபஞ்சத்தில் உடனுக்குடன் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. அவை நல்ல எண்ணங்களாக இருந்தால் நல்ல வைப்ரேஷன் இருக்கும். இல்லையெனில் கூடாத வைப்ரேஷன் இருக்கும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள வைப்ரேஷன் இன்னமும் கூட நன்றாக உள்ளதால் அங்கு இருக்கையில் எமது மனங்களில் நல்ல எண்ணங்களே பெரும்பாலும் தோன்றும். கனடா போன்ற மேற்கத்தைய நாடுகளில் எதிர்மறையான அலையதிர்வுகள் (வைப்ரேஷன்) எமது மனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது தான் எப்படிப்பட்ட நல்லவர்களினது மன நிலையிலும் சிறிது மாறுதல் ஏற்படுகிறது. அப்போ கெட்டவர்களென்றால் கேட்கவே வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 'அங்கு சும்மா ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தவை எல்லாம் இங்கு ஹைவேயில் ஓடத்தொடங்கி விடுவினம்' என்று பகிடி விடுவார். சிறிய பிரச்சனைகளெல்லாம் பூதாகரமாகத் தெரியும். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது பக்தி தான் என்னைக் காப்பாற்றும் எனத் தெரிந்து செய்த மாதிரி எழுபதுகளில் இருந்தே பாபாவைப் பற்றி நான் அறிந்திருந்தாலும் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில், அதாவது நான் கனடாவுக்கு வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் தான் எனக்கு அவரில் நம்பிக்கை வந்தது. முன்னரே நம்பிக்கை வந்திருந்தால் நாம் இந்தியாவில் வசிக்கும் போது எப்பாடு பட்டாகிலும் கணவரை இழுத்துக் கொண்டு சென்று பாபாவைத் தரிசித்திருப்பேன். புண்ணிய பூமியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வசித்திருந்தும் எம் தெய்வத்தை நேரில் பார்ப்பதற்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

இந்த வைப்ரேஷனை நான் நேரில் உணர்ந்தவள். கனடாவுக்கு நான் வந்த புதிதில் நானும் கணவரும் மொன்றியல் நகரில் ஒரு இடத்தில் நடைபெறும் பாபா பஜனைக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் செல்வோம். அன்றும் அப்படித்தான் செல்கையில், நான் கனடாவுக்கு வந்த புதிதென்பதால் என் மனதிலும் ஒரே குழப்பமாக, மனமெல்லாம் ஒரே போராட்டமாகத் தான் சென்றேன். அங்கு உள்ளே சென்று காலணிகளைக் கழற்றும் இடத்துக்கு இறங்கிச் செல்கையில் அந்தப் படிக்கு மேலே ஒரு பாபாவின் சிரித்த படி இருக்கும் படம் மாட்டியிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு கீழே சென்று காலணிகளைக் கழற்றி விட்டுப் படிகளால் மேலே வருகையில் மனமெல்லாம் நிர்மலமாகி சூரியனைக் கண்ட பனி போலக் கவலையெல்லாம் விலகி மனம் இலேசாகி விட்டிருந்தது. என்னே அதிசயம்! பார்த்தீர்களா? அந்தக் கட்டிடத்தில் இருந்த நல்ல சூழ்நிலையால் அங்கே ஒரு நல்ல வைப்ரேஷன் உருவாகியிருந்ததால் அது எனது மனநிலையில் நல்ல மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. இந்த வைப்ரேஷன் (அதாவது அலையதிர்வுகள் என்று சொல்லலாம்) என்பதை வேறும் சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு பாடசாலைக்குள் சென்ற போது படிப்பு அலையதிர்வுகளை உணர்ந்திருக்கிறேன். அதேபோல எந்த நேரமும் எதிர்மறையான எண்ணங்களையுடைய ஒருவருடைய வீட்டுக்கு என்னால் செல்ல இயலாது. ஏனெனில் அங்கே இருக்கும் எதிர் மறையான அலையதிர்வுகளை என்னால் உணர முடிந்ததால்.

நான் முதலிலேயே எழுதியது போல் எனக்குக் கனடாவுக்கு வருமுன் சாயிபாபாவில் நம்பிக்கை வந்திருந்தாலும் முழுமையாக மனம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லைப் போலும். இங்கு (கனடா) வந்தபின் திரையிசைப் பின்னணிப் பாடகி பி. சுசீலா கனடாவுக்கு ஒரு முறை வந்திருந்தார். அவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகியென்பதால் அவரது கச்சேரிக்குச் சென்றோம். அக்கச்சேரியில் அவர் பாபாவின் பஜனைப் பாடல்கள் பாடிய ஒரு கசெட்டை வித்தனர். நானும் அதனை வாங்கி அதில் அவரின் கையெழுத்தை வாங்கினேன். வீட்டுக்கு வந்தபின் அப்போ கணவர் வாங்கித் தந்த வாக்மான் (walk man) இல் அதைப் போட்டுக் கேட்டுக் கொண்டு உடைகள் மடித்துக் கொண்டிருந்தேன். முதலில் விநாயகர் பாடலும் அதைத் தொடர்ந்து சிவன், முருகன், கிருஷ்ணன் பாடல்கள் போயின. எல்லாப் பாடல்களும் முடிகையில் கடைசி வரியில் பாபாவின் பெயரும் வரும் படி இருந்தன. ஆனால் ஒரு பாடல் 'ப்ரஷாந்தி நிலைய சுந்தரா..' என்று தொடங்கி நேரடியாகவே அவரைப் பற்றிப் பாடத்தொடங்கியது. எனக்கு மற்றைய கடவுள்களின் பாடலின் இறுதியில் பாபாவைப் பற்றி ஒரு வரி வந்தது ஏற்கக்கூடியதாக இருந்தது. ஆனால் அவரைப் பற்றியே ஒரு பாடல் இருந்தது ஏற்கக்கூடியதாகவில்லை. அத்துடன் அக்கசட்டில் முழுவதுமாகப் பாடல்கள் இருக்கவுமில்லை. முக்கால்வாசியுடன் பாடல்கள் முடிந்து விட்டன. அதுவும் மனதுக்குக் குறையாக இருந்ததால் கசட்டை மேலே வைத்து விட்டேன். சிறிது காலம் சென்றபின் அவரின் பற்பல அற்புதங்கள் என் வாழ்வில் நடந்த பின் ஒரு நாள் அந்தக் கசட்டை மீண்டும் கேட்க நேர்ந்த போது அப்பாடல் (ப்ரஷாந்தி நிலைய சுந்தரா.....) தொடங்கியதும் என்னையறியாமல் என் மனம், 'ஐயோ எனது பாதி உயிர் அங்கே உள்ளதே நான் என்ன செய்வேன்' என்று அழத்தொடங்கி விட்டது. கண்ணால் கண்ணீர் ஓட, நான் விம்மி விம்மி அழுது கொண்டே அப்படியே அமர்ந்து விட்டேன். முதலில் எந்தப் பாடலைக் கேட்க மனமில்லாமல் வைத்தேனோ அதைக் கேட்டே இப்படி அழுதுவிட்டேன். நான் நினைக்கிறேன் அப்போ தான் மனம் பாபாவை முழுமையாக ஏற்றுக் கொண்டது என்று. அதற்கு அவரின் அதிசயங்கள் என் வாழ்வில் நடக்க வேண்டியிருந்தது.
அப்போ நானும் கணவரும் ஃப்ரெஞ்ச் ஆட்கள் நடத்திய அந்த பஜனை சென்டருக்கு ஒவ்வொரு ஞாயிறும் பஸ் எடுத்து மெட்ரோ எனப்படும் அண்டர்கிரௌண்ட் ட்ரெயின் எடுத்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போ தான் எனது மச்சாளுக்கு (கணவரின் தங்கை) திருமணம் நடந்தது. மாப்பிள்ளை ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்தார். அவரும் ஒரு சாயி பக்தன் தான். அப்படிச் சொன்னால் போதாது 'அவர் ஒரு தீவிர சாயிபக்தன்' என்பது தான் மிகவும் பொருத்தம். திருமணம் எல்லாம் இனிதே முடிந்து, எல்லாம் சற்றே ஓய அந்த சகோதரர் தனது வீட்டில் முதன் முறையாக மொன்றியல் நகரில் தமிழ் மக்களுக்கான ஒரு பஜனையைத் தொடக்கி வைத்தார். அவர் தான் வசித்த ஃபிரான்ஸ் நாட்டிலும் தமிழர்களுக்கு இரண்டு பஜனை சென்டர்கள் திறந்திருந்தார். சாயி பக்தியின் அரிச்சுவடியிலிருந்த எனக்கு சாயி பஜனையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நாமாவளி சொல்வதோ அல்லது பஜனை பாடவோ ஒன்றும் தெரியாது. அந்த சகோதரர் தான் பஜனை பாடும் படி எனக்கு நம்பிக்கை ஊட்டியதுடன் பாடல்கள் கொண்ட கசட்டுகளைத் தந்து கேட்கச் சொல்லி என்னையும் ஒரு பஜனைப் பாடகி ஆக்கினார். அவரின் (மச்சாளின்) வீட்டில் தான் பஜனை நடை பெற்றுக் கொண்டிருந்தது. பல உறவினர்கள், நண்பர்கள், பஜனை நடைபெறுவதைக் கேள்விப்பட்டு வந்தோர் என பஜனை களைகட்டியது. பின்னர் அவர்கள் டொரோண்டோ நகருக்கு மாற்றலாகிச் செல்கையில் பஜனை நடத்தும் பொறுப்பை வேறொரு தமிழ் குடும்பம் பொறுப்பெடுத்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீட்டில் பஜனை வைக்க விரும்பினார்கள். அவர்களின் வீடு சற்றே தூரத்தில் இருந்தது. நாம் மெட்ரோ என்னும் அண்டர்கிரவுண்ட் ட்ரெயின் எடுத்து (அப்போ எங்களிடம் கார் இல்லாததால்) அங்கிருந்து பஸ் எடுத்துச் செல்வோம். பஜனைகளுக்குச் சென்று வருவதாலோ என்னவோ எனக்கு பக்தி கூடி மாமிசம் உண்பதில் மீண்டும் வெறுப்பு வந்து விட்டது. மீண்டும் நான் சைவமாக மாறி விட்டேன். திருமணம் நடப்பதற்கு முன் நான் சைவமாக இருந்து பின் மாமிசம் உண்ணத் தொடங்கியது முதலிலேயே நடந்தது. சில காலம் மாமிசம் உண்ணாமல் இருந்தேன். பின்னர் கணவருக்கு ஒரு சமையல், மகளுக்கு ஒரு சமையல், எனக்கு ஒரு சமையல் எனக் கஷ்டம் எனச் சொல்லி இவர் என் மனதை மாற்றி என்னை மீண்டும் மாமிசம் உண்ண வைத்தார்.
அப்போது நான் எனது இரண்டாவது குழந்தையைக் கர்ப்பமாக இருந்தேன். அதாவது மூத்த புதல்வன். அப்போ பஜனைக்கு பஸ் எடுத்து ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவேன். சில வேளைகளில் இவர் வருவார். சில வேளைகளில் நான் தனியே செல்வேன். அப்போ பஜனை நடத்துபவர்கள் எனது வயிற்றிலிருக்கும் குழந்தை பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பஜனை நடத்தியவர்கள் வீட்டில் ஒரு சிறிய பிரச்சனையால் பஜனையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது. எனவே எமது வீட்டிலும் சிறிது காலம் பஜனை நடந்தது. எமது வீடு சிறியது என்றாலும் நான் பஜனை செய்யலாமென்று எல்லோருக்கும் சொல்லி விட்டேன். ஆனாலும் எனக்குக் கொஞ்சம் யோசனை தான். ஆனால் எமது வீட்டுக்கு அளவான ஆட்களே வருகை தந்தனர். வழக்கமாகப் பெரிய ஹாலில் நிறைய ஆட்கள் வருவது தான் வழக்கம். அதுவும் கூட இறைவன் அருள் தான். இரண்டு அல்லது மூன்று கிழமைகள் தான் நடந்திருக்கும். ஒரு நாள் முதலில் பஜனைக்கு வந்த ஒரு நபர் எங்கள் வீட்டில் பஜனை நடப்பதையறிந்து தாமும் வந்திருந்தார். அவர் ஒரு பொது இடத்தில் பஜனை வைப்பதைப் பற்றிப் பேசினார். நாமும் சம்மதித்தோம். ஒரு மண்டபம் எடுத்து அங்கு பஜனை நடந்தது. அதற்குத் தலைவராக எமக்கு மண்டபம் எடுத்துத் தந்தவர் இருந்தார். எனது கணவர் உபதலைவராக இருந்தார். பஜனை சிறப்பாக நடந்தது. பிரசாதங்கள் செய்து கொண்டு பஜனைக்குச் செல்வோம். எங்களுடன் பஜனைக்கு வந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணும் அப்போது கர்ப்பமாக இருந்து பின் அவளுக்குக் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென்று அப்பெண் பகவானிடம் பிரார்த்தனை செய்த போது அவருக்குக் கனவில் பகவான் வந்து முருகனின் பெயரை வைக்கும் படி சொன்னதாக அவர் தனது குழந்தைக்கு முருகனின் பெயரை வைத்தார். நானும் பகவானிடம் எனது குழந்தைக்கும் பெயர் தெரிவு செய்து தரும் படி மனதுள் பிரார்த்தனை செய்தேன். அதன் காரணமோ என்னவோ பகவானின் நாமாவளியின் கடைசிக்கு முந்தைய (107) வசனம் (சுலபப் பிரசன்னாய நமஹ என்று) சொல்கையில் 'பிரசன்னா' என்று வைக்கும் படி மனதுள் தோன்றியது. அதற்கு முதலும் கூட ultrasound பார்க்கையில் ஆண்பிள்ளை என்று சொன்னதால் என்ன பெயர் வைப்பதென்று ஒரே யோசிப்பேன். அப்போ பாபாவின் செல்லப் பெயர் 'சத்யா' என்று இருப்பதால் அதையே வைப்போமா எனவும் எண்ணியதுண்டு. ஆனால் பின்னர் எண்சாஸ்திரத்தில் (அதாவது numerology யில்), 's' எனும் எழுத்தில் பெயர் தொடங்கினால் இருதலைக் கொள்ளி எறும்பு போல முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள் என்று இருந்தது நினைவுக்கு வந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். ஆனால் பகவான் வேறொருவர் மூலம் அந்தப் பெயரையே அவனுக்கு வீட்டுப் பெயராக வைக்கும் படி செய்து விட்டார். பஜனை நன்றாக நடந்து கொண்டிருந்தது. நான் எனது மூன்றாவது குழந்தையைக் கர்ப்பமானேன். சிலபல காரணிகளால் பஜனை நடத்துவதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. அந்த பஜனையை மீண்டும் புதுப்பித்து நடாத்துவதற்கு யார் அதனை ஆரம்பித்தார்களோ அவரே தான் செய்யும் படி வந்தது. அதாவது மச்சாளும் கணவரும் மீண்டும் மொன்றியலுக்கே குடிவந்தார்கள். அவர்களே பஜனையைப் புதுப்பித்து நடாத்தினார்கள். இறைவனின் எண்ணமும் அது தான் போலும். பஜனையும் செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மூன்றாவது குழந்தை அதாவது இரண்டாவது மகன் பிறந்தான். அவன் கர்ப்பமாக இருக்கையிலேயே நான்காம் மாதத்தில் ultrasound செய்வதற்கு டாக்டர் சொன்னதால் வைத்தியசாலைக்குச் சென்றோம். Ultrasound இல் குழந்தை ஆணா பெண்ணா என்பதையும் நாம் விரும்பினால் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வதற்கு முன்னமே என் உள்ளுணர்வில் குழந்தை ஆண் தானெனத் தெரிந்தது. அவனும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் தான் பிறந்தான். எனக்குக் சிறிது நாட்களாகவே சில ஆன்மீக அனுபவங்கள் கனவுகள் மூலம் வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்று நாம் ஒரு கோவிலுக்குச் செல்கிறோம். எம்மை அந்தக் கோவிலுக்கு தெரிந்த ஒருவர் தான் அழைத்துச் செல்கிறார். அவர் தான் எனது ஆத்மீக வழிகாட்டி என்று கனவுகளின் மூலம் உணர்த்தப் பட்டது.
அப்போ கணவர் பின்னேர வேலை செய்து கொண்டிருந்தார். அதாவது மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தான் வேலை. நான் ஒரு கைக்குழந்தை மற்றும் இரண்டு வயதுப் பையனுடன் நித்திரை முழிப்பதால், இரு பக்கமும் இரு குழந்தைகளுடன் படுத்து விடுவேன். கணவருக்கு உணவை முதலிலேயே பரிமாறி வைத்து விடுவதால் அவர் என்னை எழுப்பாமலேயே உணவுண்டு விட்டுப் படுத்து விடுவார். அப்போ நான் விழித்திருந்தால் நான் எழும்புவேன். அன்றும் நான் இரு பாலகர்களுடன் துயிலும் பொழுது ஒரு கனவு: பக்திப்படங்களில் வானத்தில் ஒரு கட்டிடம் இருக்குமே அதே போல அந்தரத்தில் ஒரு ஒடுக்கமான மாடத்திலிருந்து நான் கீழே வீழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மேலே வர முயற்சிக்க ஒருவர் என்னைத் தள்ளிக்கொண்டு இருக்கிறார். நான் ஏன் தள்ளுகிறார் என வினவ அவர் சொல்கிறார், "உனக்கு அதிக ஆணவம் உள்ளது. அதனால் நீ மேலே வர இயலாது" என்று. அப்போ என் மனதில் சிவனின் ஒரு குறிப்பிட்ட மந்திரம் நினைவுக்கு வருகிறது. அதனை நான் உச்சரிக்கச் சுவரிலிட்ட பந்து போல நான் மேலெழுகிறேன். பின்னர் கீழே விழுகிறேன். பின்னர் அம்மந்திரத்தைச் சொல்ல மீண்டும் மேலெழுகிறேன். இப்படியாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கனவின் தொடர்ச்சியாக நாம் சிறுபிள்ளைகளாக இருந்து வளர்ந்த வீட்டின் முற்றத்தில் எனது மகளும் வேறு சிலரும் நிற்கின்றனர். நான் ஒரு பந்து போலக் கீழே விழுவதும் பின்னர் மந்திரத்தைச் சொல்லக் கூரைக்கு மேலே எழுவதுமாக இருக்க மகள் அதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். அதன் பின்னர் கனவிலிருந்து விழித்து விட்டேன். ஆனாலும் கண் மூடியபடி மனதுள் அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தான் விழிப்பு வந்தது. அம்மந்திரத்தை மனமானது உச்சரிக்க உச்சரிக்க எதோ ஒன்று என் உடலிலிருந்து தலை வழியாக மேலே செல்வதை உணர்ந்தேன். ஒரு சுகமான உணர்வையும் ஒரு இதமான குளிரையும் என்னால் உணர முடிந்தது. அந்த சுகமான உணர்வு வர்ணிக்க இயலாதது. அந்த ஆனந்தமானது வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது. பேரின்பம் என்பது அப்படித் தானா இருக்கும்? நான் சிவபக்தை என்பதால் நான் நினைத்தேன் அந்த ஆனந்தமானது கைலாயத்தில் தான் கிடைக்குமென்று. இப்போ தெரிகிறது அது சமயச்சார்புகளற்ற ஒரு ஆத்மீக அனுபவமென்று. அப்படியே அந்த ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். அப்போ கணவர் வேலையால் வந்து கதவைத் திறந்த சப்தம் கேட்டது. நான் எழுந்தால் எங்கே அந்த ஆனந்த அனுபவம் கலைந்து விடுமோ என எண்ணி அப்படியே படுத்திருந்தேன். மறுநாள் தான் கணவரிடம் அந்த அனுபவத்தைச் சொன்னேன். மறுநாள் அதைப்பற்றி எண்ணுகையில் தான் நினைவு வந்தது அந்தக் கனவு வந்த அன்று காலையில் எல்லாம் என் மனம் நிர்மலமாக இருந்தது என்று. காலையிலேயே அந்த ஆன்மீக அனுபவத்துக்கு நான் தயாராகி விட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஆன்மீக அனுபவங்களை நாம் எமக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றும் பிறருக்குச் சொல்லக் கூடாதென்றும் சிலர் சொல்வார்கள். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு அப்போ தெரியாது பாபா சிலருக்குக் கனவு மூலம் தீட்சை வழங்குவதாக. பின்னர் தான் அதைத் தெரிந்து கொண்டேன். சிறு பிராயத்தில் எமது ஊரில் கோவிலில் சிறுவர்களுக்குத் தீட்சை வழங்கப்பட்டது. அப்போ நாமும் செல்வதற்கு இருக்கையில் மூத்த சகோதரிகளும் வயதில் பெரிய மச்சாள்மார்களும் தீட்சையின் போது அய்யர் ஒரு வெள்ளைத் துணியை எனக்கும் தனக்கும் சேர்த்துப் போர்த்தி விட்டுத் தான் மந்திரத்தைச் சொல்லித் தருவார் என்றார்கள். அப்போ அவர்கள் அய்யர் துணியைப் போட்டு விட்டு என்ன சொல்கிறாரோ எனப் பகிடி விட்டார்கள். எனக்குப் பயம் வந்து விட்டது. அதனால் நான் தீட்சை பெறப் போகமாட்டேன் எனச் சொல்லி விட்டேன். அப்போ நாயன்மார்களில் ஒருவருக்கு ஒரு மடத்தில் வைத்துத் தனது காலை அவர் தலையில் வைத்து இறைவன் தீட்சை வழங்கியதைப் படித்த ஞாபகம் வந்ததால் அதே போல இறைவன் எனக்கும் தீட்சை வழங்குவார் என எண்ணினேன். அது கூட எனக்கு நினைவுக்கு வருகிறது. இறைவன் கனவில் எனக்குத் தீட்சை வழங்கி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. என்னைப் படிப்படியாக இறைவன் ஆன்மீகத்தில் முன்னேற வைத்துக் கொண்டிருந்தான்.
எனக்குக் கனவில் உரைக்கப்பட்ட மந்திரம் என்பதால் அது தான் எனக்குரிய மந்திரம் எனப் புரிந்தது. ஏற்கனவே சாயி பக்தர்கள் 'சாயிராம்' என்ற மந்திரத்தை உச்சரிப்பார்கள். எனவே எனக்கு இரு மந்திரங்கள் உள்ளன.
சாயி பஜனை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனது மகளும் பஜனைப் பாடல்கள் பாடுவாள். மகன்மார்கள் இருவரும் பஜனை மண்டபத்தில் விளையாடித் திரிவார்கள். அங்கே சிறுவர்களுக்கான பாலவிகாஸ் வகுப்புகள் சிறிது காலம் நடைபெற்றது. என்னைத் தான் அதற்குப் பொறுப்பாக விட்டதால் நானே நடத்தும்படி வந்தது.
பஜனையை நடத்தும் அந்த சகோதரர் ஆத்மீக நூல்களையும் இடையிடையே வாசிப்பதற்குத் தருவார். அதில் பலவகையான ஆங்கில நூல்களும் இருக்கும். அதில் 'இறைவனுடனான உரையாடல்கள்' (Conversations with God) என்னும் ஒரு நூலானது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்நூலை எழுதியவர் பெயர் நீல் டொனால்ட் வால்ஷ் (Neale Donald Walsch) ஆகும். அவர் எதாவது மனக்கஷ்டங்கள் வருகையில் அதனை ஒரு காகிதத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். ஒரு முறை அவருக்கு மனைவி, மக்களுடன் பிரச்சனை, வேலையில் பிரச்சனை அத்துடன் உடல் நலத்திலும் பிரச்சனை வந்த போது வழக்கம் போலத் தனது மனத்தாங்கல்களை ஒரு காகிதத்தாளில் எழுத என்று தொடங்கி விட்டுப் பின்னர் வெறுமே எழுதாமல் ஏன் இம்முறை இறைவனை விளித்து எழுதக்கூடாது என எண்ணி 'இறைவா,' எனத் தொடங்கித் தனது கவலைகளை எழுதினார். எல்லாவற்றையும் எழுதி முடித்த பின்னர் அவர் பேனாவை அகற்ற முனைந்த போது அவரது கை மேலும் ஏதோ எழுத முனைந்தது. கையை அதன் போக்கில் விட 'உனக்கு இக்கேள்விகளுக்குப் பதில் வேண்டுமா அல்லது சும்மா தான் எழுதினாயா?' என்ற கேள்வியை அவரது கை எழுதியிருந்தது. அவருக்கு அதிசயமாக இருந்தது. அப்போ அவர் அக்கேள்விக்குப் பதில் எழுதுமுகமாக, 'நான் சும்மா தான் எழுதினேன். ஆனால் பதில் வருமென்றால் நன்று' என எழுதினார். அப்படித்தான் இறைவனுடனான அந்த உரையாடல் ஆரம்பித்தது. அவர் தனது கேள்வியை எழுதி முடித்து விட்டுப் பேனாவை சும்மா வைத்திருக்க அவரது கை அவரின் முயற்சியில்லாமலே பதிலை எழுதும். எழுதி முடியும் வரை என்ன எழுதப்படப் போகிறது என்பது அவருக்குத் தெரியாது. இதனை 'ஆட்டோமாட்டிக் ரைட்டிங்' (automatic writing) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த வகையில் பற்பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. படிப்படியாக அப்படித் தொடங்கப்பட்ட உரையாடலானது ஒரு கட்டத்தில் அவருடைய பிரத்தியேகமான விஷயங்களில் இருந்து பொதுவான விஷயங்களுக்கு மாறியது. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் பேப்பரும் பேனாவுமாக அமர்ந்து இறைவனிடம் கேட்க வேண்டியவைகளை எழுதி விட்டுக் காத்திருக்க அவரது கை தானே பதில்களை எழுதத்தொடங்கும். அவருக்கும் இது எங்கே முடியப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இறைவன் இந்த உரையாடல்கள் அனைத்தும் மூன்று புத்தகங்களாக வெளிவரும் என எழுதினார். அப்போது அவர் அதனை நம்பவில்லை. ஆனால் முதல் புத்தகத்துக்குரிய விஷயங்கள் எழுதி முடியவும் அதனை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளைத் தொடங்கும்படி உரைக்கப்பட்டது. உலகம் இதனை ஏற்குமோ ஏற்காதோ எனப் பயந்து கொண்டே தொடங்கினார். அது வெற்றிகரமாக வெளியிடப்பட்டு விற்பனையும் அமோகமாக நடந்தது. பிரத்தியேகமான விஷங்கள் முதலாவது புத்தகத்திலும் உலகசம்பந்தமான விஷயங்கள் இரண்டாவது புத்தகத்திலும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மூன்றாவது புத்தகத்திலும் வெளிவந்தன. அம்மூன்று புத்தகங்களையும் வாசித்து அனைவரும் வியந்தோம். உண்மையிலேயே பதில்களெல்லாம் சாதாரண மனிதர்களால் சொல்ல முடியாத பதில்களாகவே இருந்தன. எம்மையும் இவ்வுலகையும் படைத்து உருவாக்கிய ஒருவராலே தான் அப்படிப்பட்ட பதில்களை அளிக்க முடியும். அதிலும் அந்த மூன்றாவது புத்தகம் (பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றியது) ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகமாகும்.
எனக்கு ஆன்மீகத்தில் வழிகாட்டி போலிருந்த அந்த சகோதரர் ஒரு நாள் எனக்கு 'இவ்வுலகுக்கு அப்பால்' (A World Beyond) என்ற ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வாசிக்கும்படி தந்தார். என் மனமோ ஏன் இதை நான் வாசிக்க வேண்டும்; ஆன்மீகத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணியது. ஆனால் அதனை வாசிக்கத் தொடங்கிய பின்னர் தான் இறப்பின் பின்னர் என்ன நடக்கின்றது என்பதை உணராத வரை நாம் ஆன்மீகத்தின் நுனிப்பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறோம் என்பதனை உணர்ந்தேன். அதன் பின்னர் எனக்கு அந்தத் துறையில் அதாவது இறப்பின் பின்னர் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி அறிவதில் நாட்டம் வந்து அதைப் பற்றிய புத்தகங்களை மேலும் மேலும் வாசித்து அறிந்து கொண்டேன். A World Beyond என்ற அந்த ஆங்கில நூலானது பார்வைக்கு மிகச்சிறியதாக இருந்ததால் அதனை ஏன் நான் மொழி பெயர்க்க இயலாதென எண்ணினேன். ஏற்கனவே CWG என்று சுருக்கமாக அழைக்கப்படும் 'இறைவனுடனான உரையாடல்கள்' என்ற நூலை நான் மொழி பெயர்ப்பது என்று ஒரு எண்ணம் சிலரின் மனதில் (நான் உட்பட) இருந்தது நான் அறிவேன். ஆனால் அப்புத்தகங்கள் மிகப் பெரியனவாதலாலும் அவற்றில் இறைவனின் பதில்கள் சற்றே வித்தியாசமான முறையில் இருந்தமையாலும் அந்த எண்ணத்தைத் தவிர்த்து வந்தேன். A World Beyond என்ற புத்தகம் மிகச்சிறியதாக இருந்ததால் இந்த விபரீத ஆசை எழுந்தது. ஏன் விபரீத ஆசை என்று சொல்கிறேன் என்றால் அதனை மொழி பெயர்க்க ஆரம்பித்ததும் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உணர்ந்தேன். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்மாப் போல புத்தகம் சிறியதாக இருந்தாலும் அதில் உள்ள ஆங்கில வசனங்கள் ஒவ்வொன்றும் மிக மிக நீளமானவை. அத்துடன் மொழி பெயர்ப்பு என்பது எனக்கும் புதியது. ஆரம்பத்தில் நான் அந்த நீளமான ஆங்கில வசனங்களை நேரடி மொழி பெயர்ப்பாக வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தேன். அது அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. பின்னர் தான் அவ்வசனங்களை வாசித்து அவற்றின் தாத்பரியத்தை முழுவதுமாக விளங்கிக் கொண்டு அவ்வசனங்களை எமது தமிழில் எப்படி எழுதுவதென யோசித்து எழுதத் தொடங்கினேன். அப்போ எனக்கு இப்படி நாம் வலைத்தளம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்றோ அதில் நாம் தமிழில் எமது படைப்புகளைப் பதிவு செய்யலாமென்றோ தெரியாது. அதனால் நான் அப்புத்தகத்தின் மொழி பெயர்ப்பைக் கையெழுத்துப் பிரதியாக பஜனைக்கு வருபவர்களுக்குக் கொடுப்பதற்காக உறுப்பெழுத்தில் ஒழுங்காக எழுதிக் கொண்டு வந்தேன். சில பக்கங்களை எழுதிய பின்னர் சிலருக்கு அதனை வாசிக்கவும் கொடுத்தேன். அப்போ எனது மொழி பெயர்ப்பும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை; அத்துடன் பல பேருக்கு இறப்பின் பின்னர் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அறிவதில் அவ்வளவு ஆர்வமும் இருக்கவில்லை. ஆனாலும் எனது மொழி பெயர்ப்பை நான் தொடர்ந்து கொண்டே இருந்தேன். அப்போ தான் இலவசமாக நாம் வலைத் தளங்கள் நடத்துவது எப்படி என்பதை அந்த சகோதரர் காட்டித் தந்தார். ஆனால் தமிழில் டைப் செய்வது என்பது அப்போது பெரிய விஷயமாக இருந்ததால் (transliteration முறை அப்போது எனக்குத் தெரியாது) நான் அந்த வலைத்தளத்தில் ஒன்றும் செய்யவில்லை. அந்த சகோதரர் அடிக்கடி வலைத்தளத்தில் ஒன்றும் செய்யவில்லையா எனக் கேட்பார். அதனால் ஒரு நாள் அந்த வலைத்தளத்தை ஆராய்ந்தேன். அப்போ தான் இந்த transliteration என்ற முறையில் நாம் இலகுவாகத் தமிழில் பதிவு செய்யலாம் என்று கண்டு பிடித்தேன். அதன் பின்னர் எனது மொழி பெயர்ப்புகளை அவ்வலைத்தளத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அவ்வலைத்தளத்தின் பெயர் 'ஆனந்தகீதம்'. இணைப்பு: ananthageetham.blogspot.com 
இப்போ (2014/02) அம்மொழி பெயர்ப்பு முடியும் தறுவாயில் உள்ளது.

 /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இப்போ (2020/09/27) மொழிபெயர்ப்பு முடிந்துவிட்டது. 
எவ்வளவோ காலத்துக்குப் பிறகு அதாவது சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவ்வலைத்தளத்தில் எழுத வந்துள்ளேன். இதற்கிடையில் வாழ்வில் தான் எத்தனையெத்தனை மாறுதல்கள்: அப்பனே! நினைத்துப் பார்க்கிறேன்: கானன் நீ தான் கண்ணுக்குள்ளே நிற்கிறாய். நான் டொரொண்டோவுக்கு மாறி வரும் போது உன்னை இழக்கவேண்டி வருமெனக் கனவில் கூட எண்ணவில்லையடா. அக்காவின் மகனான உன்னைப் பெறாமகன் என்று தான் சொல்வார்கள். ஆனால் உன்னைத் தூக்கிய பின்னர் தான் எனக்கு ஆண் பிள்ளை பெறும் விருப்பம் வந்தது. எனவே நீயும் எனக்கு ஒரு மகன் தானடா. 
நாங்கள் கோர்ன்வோல் என்ற நகரில் பதினோரு வருடங்கள் இருந்து பின்னர் டொரொண்டோ நகருக்கு 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மாறி வந்தோம். அதற்குள் இலங்கைக்கும் அம்மாவுக்கு துணையாகச் சென்று வந்தேன். 22வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக சென்று வந்தேன். இலங்கையிலும் பலவகை மாற்றங்கள். அக்காவின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளியே நாங்கள் வாங்கிய கொண்டமேனியம் என்று இங்கு (டொரொண்டோவில்) அழைக்கும் ஃபிளட்ஸ் இருந்தது.
ஆனால் கோர்ன்வோல் நகரில் இருக்கையிலும் எனக்குச் சில ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. எனது சில முந்தைய பிறவிகள் எனக்குத் தெரியவந்துள்ளன. நினைத்துப் பார்த்தால் மொன்றியலில் இருக்கையிலேயே சில விஷயங்கள் எனக்குக் கனவுகள் மூலம் உரைக்கப்பட்டுள்ளன. கோர்ன்வோலில் ஒருநாள் காலை நானும் மகளும் மட்டும் இருக்கையில் நான் நித்திரையாக இருக்கையில் யாரோ என்னை "மும்தாஸி" என அழைக்க நான் அதற்கு "ஆமாம்" எனப் பதிலளித்துக் கொண்டு எழுந்தேன். எழுந்த பின்னர் தான் 'மும்தாஸி' என்றல்லவா அழைக்கப்பட்டேன் என்பது புரிந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை மகள் 'அம்மா' என அழைத்தது தான் எனக்கு மாறிக் கேட்டதோ என எண்ணி நித்திரையிலிருந்த மகளை எழுப்பிக் கேட்டேன். தான் என்னை அழைக்கவில்லையென மகள் உரைத்தாள். ஆனால் எனக்கு யாரோ என்னை 'அப்படி' அழைத்து அதற்கு நான் பதிலளித்துக் கொண்டு எழுந்தது சர்வநிச்சயமாகத் தெரிந்தது. அதன்பின் தான் 'மும்தாஸி' என்றல்லவா அழைத்தார்கள். ஆனால் நாம் பாடசாலையில் ஷாஜகானின் மனைவியின் பெயர் மும்தாஜ் என்று தானே படித்துள்ளோம். இதென்ன மும்தாஸி என எண்ணி இன்டர்நெட்டில் அதனை ஆராய்ந்தேன். அப்போ தான் உண்மையில் அவளின் பெயர் மும்தாஸி என அறிந்தேன். இந்த உண்மையும் அதனை நான் அறிந்து கொண்ட விதமும் கூட எனது ஆர்வத்தையும் கற்பனையையும் தூண்டின. அப்போ நான்தானா மும்தாஸி என என்னை நானே கேட்டுக் கொண்டேன். ஆமென எனது மனம் சொன்னது. அதன்பின்னர் என்னால் அவர்களின் மாளிகையை எண்ணிப் பார்க்கையில் ஊதா நிறத்திலும் பொன் நிறத்திலும் தான் அவர்களின் மாளிகை அலங்கரிக்கப் பட்டிருப்பதாக எண்ணம் வந்தது. அவர்கள் ஒரு மூடிய சமூகமாக இருந்ததாகவும் அரசியாக இருந்த நான் அனைவருக்கும் பல உதவிகள் புரிந்ததாகவும் எண்ணங்கள் வந்தன. இவையெல்லாம் எனது கற்பனை என்று சொன்னாலும் என்னை யாரோ மும்தாஸி என அழைத்து நான் அதற்குப் பதிலளிக்கு முகமாக ஆமென்று கொண்டு எழுந்தது உண்மையாக நடந்ததே. 
அதற்கு முன்னர் ஒரு கனவில் நான் ஒரு வெள்ளையனாக இருப்பதாகவும் இப்போ டாக்ஸி ஹையர் செய்வது போல் அந்நாட்களில் குதிரை வண்டியை ஹையர் செய்யலாம் எனவும் நான் வீடு மாறுவதற்காக அப்படி ஒரு குதிரை வண்டியை ஹையர் செய்து கொண்டு செல்வதாகவும் அந்தக் குதிரை வண்டிக்காரன் என்னை மயக்கி அதன்பின் எனக்குத் தெரியாமல் கடத்திக் கொண்டு சென்று எனது நெஞ்சில் கழுத்துக்குக் கீழே டியூலிப்ஸ் என்ற ஒருவகை மலரின் வடிவில் மாலை வடிவில் பச்சை குத்திய குறையில் என்னைக் கொண்டு சென்று வீட்டில் விட்டதாகவும் பின்னர் தான் நான் அதனைப் பார்த்து அதனை எப்படி அழிப்பதென எல்லாரிடமும் கேட்டுக் கொண்டு திரிவதாகவும் கனவு கண்டேன். அதில் நான் ஒரு வெள்ளையனாக இருந்தேன். 
பின்னர் ஒருநாள் நானும் மகளும் கிங்ஸ்ரன் நகருக்கு சென்றிருந்தோம். அங்கு இடம் பார்ப்பதற்கு அழைத்துச் செல்லும் ஒரு குழுவுடன் இருவரும் செல்கையில் என்னுடைய கைப்பையில் தண்ணீர்ப் போத்தல் இருந்ததால் சிறிது கனமாக இருந்ததாலும் எனக்குக் காலிலும் சற்று நோ இருந்ததாலும் மகள் என்னிடம் இடையிடையில் எனது கைப்பையைத் தான் தூக்குவதற்குக் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் "பரவாயில்லை என்னால் தூக்க இயலும்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சுற்றுலாவால் வீட்டுக்கு வந்தபின் அன்று இரவு கனவில், ஒரு பேர் பெற்ற அமெரிக்கன் பாடகியின் வீட்டில் வேலை செய்யும் ஒரு மனிதனாக நான் இருப்பதாகவும் வீட்டில் முன் புறம் ஒரு பக்கத்தில் இருக்கும் ஒரு கொட்டகையில் இருந்து சில பாரமான மரப்பலகைகளை நான் தூக்கிக் கொண்டு சென்று வேறெங்கோ அடுக்குவதாகவும் எனது மகள் அப்போ எனக்கு மகனாக சிறுவனாக இருப்பதாகவும் அவன் தான் அப்பலகைகளைத் தூக்குவதாகச் சொல்வதாகவும் நான் அதற்கு "இல்லையில்லை அது எனது வேலை" என்று சொல்லி மறுப்பதாகவும் அந்நேரம் அப்பாடகி வெளியில் எங்கோ செல்வதற்காக வீட்டினுள் இருந்து வெளியில் வருவதாகவும் கனவு கண்டேன். அந்தக் கனவைப் பற்றி அறிந்த சிலர் எனக்கு அப்பாடகி விருப்பமென்பதால் அப்படிக் கனவு கண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கனவுக்கு முன் எனக்கு அப்பாடகியில் ஒருவிதமான அபிப்பிராயமும் இருந்ததில்லை. ஆனால் அக்கனவுக்குப் பின் எனக்கு அவளில் ஒரு தந்தைக்குரிய வாத்சல்யம் தோன்றியிருக்கிறது.   
இப்படியாக எனது முந்தைய பிறவிகள் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. டொரொண்டோவில் 'கொண்டோ' வாங்கும் அலுவலில் இந்த 'மோர்ட்கேஜ்' இப்படி இழுபடுகையில் எனக்கு ஒரு உள்ளுணர்வு வந்தது. என்னவென்றால் நான் தான் இந்த அனுபவத்தை விரும்பி வந்தனான் என்றும் ஏனென்றால் முதற் பிறவியொன்றில் வேறு ஒருவரை இப்படித்தான் அலைக்கழித்தனான் என்றும் அதனால் அந்த அனுபவத்தை நானும் அனுபவிக்கத் தான் இப்படியொரு அனுபவத்தை வேண்டி வந்ததாகவும் தெரியவந்தது. என்னுடைய காலில் வந்த பிரச்சனையும் அவ்வாறே முற்பிறவியில் வேறொருவரை நான் கஷ்டப்படுத்தி அவருக்குக் காலில் பிரச்சனை வந்ததால் இப்பிறவியில் எனக்கு அப்படி வரவேண்டுமென்று வாங்கி வந்ததாக உணர்ந்தேன்.
சிலர் மறுபிறவி என்பதெல்லாம் பொய் என்பதாகச் சொல்வார்கள். ஆனால் இப்போ பல அமெரிக்கர்கள் அதைப் பற்றி ஆராய்ச்சி நடத்துகிறார்கள். இயன் ஸ்டீவன்ஸன் (Ian Stevenson) என்னும் ஒரு அமெரிக்கர் வேர்ஜீனியாப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மனோதத்துவப் பிரிவின் தலைவராகவும் பின்னர் கால்ஸன் பேராசிரியராகவும் பின்னர் அத்துறையிலேயே ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் 1957ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை இருந்தவர். அவர் மறுபிறவியைப் பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறு குழந்தைகளுக்குத் தங்களது போன பிறவி ஞாபகங்கள் இலகுவாக வெளியில் வரும் என்பது அவர் கருத்து. அவர் நாற்பது வருடங்களுக்கும் மேலாக மூவாயிரம் குழந்தைகளின் போன பிறவி ஞாபகங்களை ஆராய்ந்துள்ளார். காரணமில்லாது சிலருக்கு சில விஷயங்களில் உண்டாகும் பயங்கள், சிலருக்கு சிலரில் காரணமில்லாது ஏற்படும் அன்பு, சிலருக்கு இருக்கும் சில விசேட திறமைகள் மற்றும் சில உடல் உபாதைகள் போன்றவற்றுக்கு அவர்களின் போன பிறவியில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாகலாம் என்பது அவர் கருத்தாகும். அவர் மறுபிறவியைப் பற்றிக் கிட்டத்தட்ட முன்னூறு கட்டுரைகளும் பதின்நான்கு புத்தகங்களும் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'இருபது குறிக்கப்பட்ட மறுபிறவி நிகழ்வுகள்' (Twenty Cases Suggestive of Reincarnation) எனும் புத்தகமாகும். இயன் ஸ்டீவன்சன்னுக்குப் பின் அங்கு இணைப்பேராசிரியராக இருந்த ஜிம் டக்கர் (Jim Tucker) என்பவர் அவரது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரும் 'வாழ்வுக்கு முந்தைய வாழ்வு: சிறுவர்களின் போனபிறவி நினைவுகளைப் பற்றியதொரு விஞ்ஞான ரீதியிலான ஆய்வு (Life Before Life: A Scientific Investigation of Children's Memories of Previous Lives) என்ற நூலை 2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். கரோல் போமன் (Carol Bowman) எனும் யூதப்பெண்ணின் மகன் குழந்தைப் பருவத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தங்களைக்  கேட்கையில் பயந்து கத்திக் கொண்டிருந்ததால் அவர் மகனை வீட்டுக்கு வருகை தந்த மனோதத்துவ நிபுணரிடம் காட்டினார். அந்த நிபுணர் அச்சிறுவனைத் தாயின் மடியில் அமர வைத்து அவனிடம் சாதாரணமாக "வெடிச்சத்தங்களைக் கேட்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது" எனக்கேட்க, அச்சிறுவனோ 'தான் ஒரு பாறையின் பின் ஒரு பெரிய துப்பாக்கியுடன் இருப்பதாகவும் தனக்கு மணிக்கட்டில் துப்பாக்கிச் சூடு பட்டுவிட்டதாகவும் அதனால் சிப்பாய்களின் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாகவும் பின்னர் பீரங்கி ஓன்றை இழுத்துக் கொண்டு ஒரு மலையில் தான் ஏறிக்கொண்டிருப்பதாகவும் அது தனக்குப்  பிடிக்கவில்லையெனவும் தனது மனைவியையும் பிள்ளைகளையும் நினைக்கத் தனக்குக் கவலையாக இருப்பதாகவும்' சொல்லத்தொடங்கி விட்டான். அந்த ஐந்து வயதுச் சிறுவனின் வாயிலிருந்து இப்படியான சொற்களை எதிர்பார்க்காத அவனின் தாய்க்கோ ஒரே அதிர்ச்சி. அந்த நிபுணர் கேட்கக் கேட்க அச்சிறுவன் 'தான் ஒரு கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஆணாக அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் (American Civil War) பங்கு பற்றியதாகவும் அப்போது தான் குண்டடிபட்டு இறந்ததாகவும்' உரைத்தான். அன்று அந்த நிபுணரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்த பின்னர் அச்சிறுவனுக்கு அந்தப் பயங்கள் போய்விட்டன. அதுவரையில் மறுபிறவியென்பதைப் பற்றி ஒருவிதமான அறிவும் இல்லாதிருந்த அந்தப் பெண்மணி அதன்பின்னர் மறுபிறவியைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் செய்து இப்போ அதைப் பற்றிப் புத்தகங்களும் வெளியிட்டு, அத்துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் முதல் புத்தகம் 'சிறுவர்களின் முந்தைய பிறவிகள்' (Children's Past Lives) ஆகும். இப்படியாக மறுபிறவியென்பதை நாம் ஒரேயடியாக மறுக்க இயலாதவாறு பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. 
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது. நாம் கோர்ண்வோலில் இருந்து டொரொண்டோக்கு மாறி வருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று மகளின் திருமணத்தை ஒப்பேற்றுவதாகும். என்ன தான் ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தாலும் ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக எனது கடமைகளை எனக்குத் தெரிந்தவரையில் சரியாக செய்வதற்கு முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என எண்ணுகிறேன். அந்த வகையில் மகளின் திருமணம் ஒரு முக்கிய பொறுப்பாகும். மகன்மாரின் படிப்பு அடுத்த காரணம்.     

மூன்றாம் பாகம்

 டொரொண்டோவுக்கு மாறி வந்த புதிதில் எனக்கு வேலையொன்றும் கிடைக்கவில்லை. பின்னர் தான் அக்காவின் ஆலோசனையின் பேரில் டேக்கெயார்களுக்கு சப்ளை ஆசிரியர்களை (அதாவது யாராவது ஒருவர் வேலைக்கு வரவில்லையெனில் அவரது இடத்தை நிரப்பும் ஆசிரியர்களை) அனுப்பும் ஒரு ஏஜென்சியில் வேலைக்கு முயற்சித்து அதுவும் கிடைத்தது. அநேகமாக ஒவ்வொரு நாளுமே வேலை இருந்து கொண்டிருக்கும். ஆனால் வெவ்வேறு டேக்கெயார்களில். சப்ளை ஆசிரியர்களை டேக்கெயார்களில் இருக்கும் ஏனைய ஆசிரியைகள் பெரிதாக மதிக்க மாட்டார்கள். தாங்கள் நிரந்தரமான ஆசிரியர்கள், நாங்கள் தற்காலிகமான ஆசிரியர்கள் என்பதால் எங்களை ஒரு படி குறைவாகவே நடத்துவார்கள். அவர்களையும் குற்றம் சொல்ல இயலாது. இரண்டு வயதுக் குழந்தைகள் பத்து உள்ள அறையில் கட்டாயம் இரு ஆசிரியர்களாவது இருக்க வேண்டும். அதில் ஒருவர் வராவிட்டால் அந்த இடத்துக்கு சப்ளையாக வந்திருக்கும் ஆசிரியருக்குக் குழந்தைகளையும் தெரியாது. அவர்களின் பழக்கவழக்கங்களும் தெரியாது. அப்போ அவ்வாசிரியருக்கு பொறுப்பு இரட்டிப்பாகும். அதாவது பிள்ளைகளையும் பார்க்க வேண்டும். அதே நேரம் புதிதாக வந்திருக்கும் ஆசிரியருக்கும் எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனால் அவ்வாசிரியர் தனது கோபத்தைப் புதிதாக வந்திருக்கும் ஆசிரியரிடம் தான் காட்டுவார். எனவே நான் வேலைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பலவகையான கீழ்மைகளை அனுபவிக்க வேண்டி வந்துள்ளது. நான் கொஞ்சம் தன்மானமுள்ளவள். ஆனால் வேலைத்தலங்களில் எனது தன் மானத்துக்கு அடிக்கடி சோதனைகள் வரும். வேலையை விட்டுவிடலாம் போல் இருக்கும். ஆனால் நான் பொறுமை காத்தேன். முதலில் கோர்ன்வோலில் மட்டுமல்ல மொன்றியலிலும் பல வேலைகளை எனது தன்மானத்துக்குப் பங்கம் வந்த காரணத்தால் விட்டுவிட்டு வந்த நான் இம்முறை பல்லைக் கடித்துக் கொண்டு மிகவும் பொறுமை காத்தேன். அதற்கு வேறு வேலை கிடைக்காதென்பது மட்டும் காரணமல்ல. மிக முக்கிய காரணம் எனக்கு சரியான ஆணவம் என்று எனது கனவில் உரைக்கப்பட்டது தான். அந்த ஆணவத்துக்கு ஒருவேளை முந்தைய பிறவிகளில் நான் பலம் வாய்ந்த நபராக இருந்ததும் காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. அதனால் தான் இப்பிறவியில் இப்படிப் பலமில்லாதவளாக வந்திருக்கிறேனோ எனவும் எண்ணுவதுண்டு. அதனால் இப்போ இப்படி நடக்கையில் இதுவும் எனக்கொரு சோதனை தான்; அந்த ஆணவங்களை அடக்கத்தான் இப்படி நடக்கிறதோ தெரியவில்லை என்பதால், எல்லாச் சிறுமைகளையும் பொறுத்துக் கொண்டு வேலைகளுக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். அப்போது தான் எனது பெறாமகனின் இழப்பு ஏற்பட்டது. அது வாழ்வில் பெரியதொரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவராலும் இலகுவாக விடுபட முடியவில்லை. 

அதனால் சிறிது நாட்கள் வேலைக்கு லீவு எடுத்து நின்றிருந்தேன். தொடர்ந்து வேலைக்கு லீவு போட்டால் வேலையிலிருந்து நிறுத்தி விடுவார்களோ என்று எண்ணி அடுத்த கிழமை இனி வேலைக்குச் செல்வோம் என எண்ணி அந்த ஏஜென்சியின் மின்னணு ஃபோர்மில் (eform) அந்தக் குறிப்பிட்ட டேக்கெயாருக்கு வேலைக்கு வருவதாக அறிவிப்பதற்காக எனது கைபேசியில் குறிப்பிட்ட அந்தப் பொத்தானை அழுத்துவதற்கு என்று கையைக் கொண்டு செல்ல எனது கை என்னையறியாமல் மற்றைய பொத்தானை அழுத்திவிட்டது. அதாவது வரவில்லை என்பதாக அறிவிக்கும் பொத்தானைக் கை அழுத்திவிட்டது. அருகில் நின்றிருந்த எனது குடும்பத்தினர், எனக்கு உண்மையில் வேலைக்குச் செல்லும் எண்ணமில்லை; வேண்டுமென்றே தான் நான் மற்றைய பொத்தானை அழுத்தியதாகப் பகிடி பண்ணினார்கள். ஆனால் உண்மையில் நான் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் தான் அன்று கைபேசியில் வழமை போல் அந்த வேலையை ஒப்புக்கொள்வதாக அதற்குரிய இடத்தில் அழுத்துவதற்கு முயற்சித்தேன். ஆனால் கை மாறி மற்றைய பொத்தானை அழுத்திவிட்டது. எனக்கே அது ஆச்சரியமாகத் தான் இருந்தது. அப்போ எண்ணினேன் எனது பெறாமகனுக்கு எனது பிரச்சனை தெரிந்ததால் அவனே எனக்கு விருப்பமில்லாத வேலைக்குச் செல்லவிடாமல் மறித்து விட்டானென. பின்னர் சிறிது நாள் ஓய்வு எடுத்துச் சற்று மனம் ஆறுதலடைந்த பின்னர் வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். 

எனது பெறாமகனின் இழப்புக்குப் பின் குடும்பத்தில் உள்ள ஏனையோரைப் போலவே எனக்கும் விரக்தி, சோகம் எல்லாம் இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் ஆன்மீகத் தேடல் இருந்ததாலோ என்னவோ இனிமேல் ஆன்மீகப் பாதையைத்தான் நான் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படியென்றால் தான் அவனுடைய இழப்பைத் தாங்க இயலும் என்று மனதில் தீர்மானித்தேன். ஆன்மீகமென்றால் கோவில்களுக்குச் செல்வதென்பதல்ல. எனது மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகத்தை நோக்கித் திருப்புவதெனத் தீர்மானித்தேன். எனக்கு அப்பப்பக் கனவுகள் மூலமோ வேறு வழிகளிலோ பெறாமகன் வழிகாட்டிக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு குறிப்பிட்ட கனவில் இந்த உடலின் நிலையாமையைப் பட்டவர்த்தனமாக எனக்கு உணர்த்தினான். காசிக்குச் செல்லும் சந்தர்ப்பமும் அவனால் தான் ஏற்பட்டது. அங்கு சென்று கங்கை நதியில் நீராடினோம். அங்கு நிற்கையில் ஏதோ இவ்வுலகை விடக் கொஞ்சம் உயரத்தில் நிற்பது போல ஒர் உணர்வு. என்னதான் விஞ்ஞானிகளும் இளம் பிள்ளைகளும் காசியைப் பற்றியும் கங்கை நதியைப் பற்றியும் குறைவாகச் சொன்னாலும் அந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வீகம் உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். அந்த இடத்துக்கு நான் சொந்தம் என்பது போல உணர்ந்தேன். எங்கள் வீட்டில் எனக்கு மூத்த நால்வர் பிறந்த பின் அப்பா அப்புவைக் காசிக்கு அழைத்துச் செல்வதற்காக பிள்ளைகள் நால்வரையும் அம்மம்மா வீட்டில் விட்டுவிட்டு எனது அம்மாவுக்கும் இந்தியாவுக்கு டிக்கெட் போட்டுக் கொண்டு அப்புவை அழைத்துச் சென்றதாகவும் அங்கு இமாலய அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ், காசியெல்லாம் சென்றதாகவும், இந்தியாவால் வந்தபின் தான் நாங்கள் ஐந்து பெண்களும் பிறந்ததாகவும் அம்மா அப்பா சொல்வார்கள். அப்பா நான் தான் திருச்செந்தூர் வள்ளி என்று செல்லமாகச் சொல்வார். எனக்கு இப்படி ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதால் அங்கு ரிஷிகேஷில் இருந்த ரிஷி யாரோ தான் வந்து பிறந்திருப்பதாக நான் பகிடிக்குச் சொல்லிக் கொள்வேன். ஆனால் காசியில் நிற்கையில் உண்மையிலேயே முந்தி ஏதோ ஒரு பிறவியில் அங்கு நான் இருந்திருப்பதாக உணர்ந்தேன்.  

டேக்கெயார் சப்ளை ஆசிரியராகப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாகச் சென்று கொண்டிருந்த என்னை இனிப் பொறுத்தது போதும் என்பது போல வேலையை விடும் படி செய்வதற்கு இறைவனோ அன்றி இப்பிரபஞ்சமோ அந்த மாபெரும் சக்தி தீர்மானித்தது போலும். ஒருநாள் காலை குளியலறையினுள்ளே நான் என்னையறியாமல் மயங்கி விழுந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுயநினைவின்றிக் கிடந்திருக்கிறேன். அதன்பின் நானாகவே மயக்கம் தெளிந்து எழுந்து, அதன்பின் தான் அறையினுள் படித்துக் கொண்டிருந்த மகன்மாருக்குத் தெரிந்து, இரவு வேலையால் வந்து படுத்துக் கொண்டிருந்த கணவரையும் எழுப்பி சத்தி எடுத்துக் கொண்டிருந்த எனக்கு கைவைத்தியம் பார்த்தார்கள். அதன்பின் எனக்குத் தனியே வேலைகளுக்குச் செல்வதற்குச் சிறிது அச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வெறு இடங்களில் வேலையென்பதால் அவர்கள் விலாசத்தை அறிவித்ததும் முதல் நாள் இரவே கூகிள் மாப்ஸில் (Google Maps) அங்கு செல்லும் வழி, பஸ் எண், சப்வே (subway) எனப்படும் சுரங்க ரயிலின் திசை எல்லாவற்றையும் எழுதியோ அல்லது ப்ரிண்டில் எடுத்தோ கைப்பையில் வைத்து விடுவேன். அப்படியிருந்தும் சிலவேளைகளில் ஏதாவது சந்தேகம் வந்தால் வழியில் யாரிடமாவது கேட்டுக் கொள்வேன். ஆனால் இப்படி நடந்த பின்னர் அப்படித் தனியே புதுப்புது இடங்களுக்குச் செல்வது சற்றே பயமாக இருந்தது. டாக்டர்களும் எல்லாப் பரிசோதனைகளையும் செய்து விட்டு என்ன நடந்ததென்று தெரியவில்லை என்றார்கள். தனியே நடந்து செல்கையில் எனக்கு அப்படி நேர்ந்தால் என்ன நடக்கும் என்று எண்ணி வேலையை விடுவதெனத் தீர்மானித்தேன். அதன்படி அந்த ஏஜென்சிக்கு வேலையை விடுவதாக அறிவித்து விட்டேன். 

அன்று அந்தக் கழிவறையில் நடந்த ஒரு விஷயத்தை நான் பெரிதாக ஒருவரிடமும் உரைக்கவில்லை (என்னை ஒரு லூஸென்று எண்ணுவார்களோ என்பதனால்). வழமை போல் கணவர் இரவு வேலை முடிந்து காலையில் வந்து குளித்து, உணவருந்தித் தேநீர் பருகிவிட்டுப் படுப்பதற்குச் சென்றுவிட்டார். நானும் வழமை போல் தேநீர் அருந்திய பின் காலைக்கடன் முடிப்பதற்காகச் சென்று டாய்லெட்டில் அமர்ந்தேன் (அது வெஸ்டர்ன் டாய்லெட் என்பதால் அமர்ந்தேன் எனலாம் என எண்ணுகிறேன்). அப்போ எனக்கு முன்பாக ஒரு சக்தியின் அருகாமையை உணர்ந்தேன். அந்த சக்தி முன்னே பின்னே பார்க்காமல் நீதி வழங்கும் தன்மையுடையது என்பதையும் புரிந்து கொண்டேன். அவ்வளவு தான் எனக்கு ஞாபகம். பின்னர் நான் நிலத்தில் மயக்கநிலையில் கிடப்பதைத் தான் கண்டேன். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் தலைசுற்றிக் கொண்டு சத்தி வந்தது. எல்லா ஆரவாரமும் அடங்கிய பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை மறுபடி நினைவு படுத்திப் பார்த்த போது உடனே இவ்விஷயம் நினைவுக்கு வரவில்லை. பின்னர் மீண்டும் மீண்டும் என்ன நடந்திருக்கும் என நினைவு படுத்திப் பார்க்கையில் தான் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லி ஏன் எல்லோரையும் பயமுறுத்துவான் என அதைச் சொல்லவில்லை. நீதிமன்றங்களில் நீதி தேவதையின் கண்களைக் கறுப்புச் சேலையால் கட்டியிருப்பார்கள் அல்லவா. அதே போன்றதொரு நீதி வழங்கும் சக்தியைத் தான் என் முன்னே நான் உணர்ந்தேன் (கண்ணால் காணவில்லை ஆனால் உணர்ந்தேன்). இப்போ விஜய் டிவியில் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற தொடரில் சனி பகவானை அப்படித் தான் காட்டுகிறார்கள். முகம் பார்க்காமல் நீதி வழங்குபவர் என்று. அப்படித் தான் ஒரு உணர்வை அந்த சக்தியில் உணர்ந்தேன் அன்று.  

ஆனால் இப்படி நான் உணர்ந்தது இது முதல் தரமல்ல. இதற்கு முன் கோர்ன்வோலில் வாகனங்களின் பிரேக் கட்டைகள் செய்யும் ஃபக்ட்ரியில் வேலை செய்கையில் ஒருதரம் எனது காலஞ்சென்ற அண்ணாவின் அருகாமையை உணர்ந்திருக்கிறேன். அந்த நேரம் எனக்கிருந்த மனக்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக அவர் வந்திருப்பார் போலும் என்று தான் எண்ணினேன். இப்படிப்பட்ட நுட்பமான உள்ளுணர்வுகளைப் பற்றி எல்லோரிடமும் கதைக்க இயலாது தானே. அநேகம் பேருக்கு இவையொன்றும் புரியாது. அதனால் அவற்றை எனக்குள்ளேயே வைத்துக் கொள்வேன். 

எங்கள் இந்து சமயத்தில் பல தெய்வங்கள் உள்ளது மற்ற மதத்தவர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பங்களிலேயே உள்ள இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், கொஞ்சம் புரட்சிகரமாக சிந்திப்பவர்கள் என்று பலருக்குக் கேள்விக்குறியாக உள்ள விஷயம் தானே. நானும் சிவபக்தை என்பதால் விஷ்ணுவைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. எனது வீட்டுப் பெயரில் கீதை (கீதா) இருப்பதால் பகவத்கீதையில் கொஞ்சம் நாட்டமும் அதனை உலகுக்கருளிய கிருஷ்ணர் மீது (மஹாபாரதம் படித்ததனாலும்) பக்தியும் உள்ளது. அத்துடன் ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் என்ற ஸ்ரீராமரின் கதையை வாசித்ததனால் ராமரிலும் ஒரு பக்தி. அவ்வளவும் தான் எனக்கும் வைணவத்துக்கும் உள்ள சம்பந்தமாக இருந்து கொண்டிருந்தது பல காலம்.  ஆனால் எனக்கு விஷ்ணுவைப் பற்றியும் ஒரு உண்மை உணர்த்தப்பட்டது ஒரு நாள். எனது அக்கா மகளின் குடும்பத்துடன் ஒருதரம் ஃப்ளோறிடாவுக்கு வானில் (van) சென்றோம். அங்கு வசிக்கும் எனது தங்கையும் கணவரும் ஒருநாள் எங்களை சிப்பிகள் நிறைய உள்ள ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். பிளாஸ்டிக் பைகள் நிறையச் சிப்பிகள் பொறுக்கினோம். பின்னர் கனடாவுக்குத் திரும்புகையில் இரண்டு பைகள் நிறையக் கடற் சிப்பிகளுடன் திரும்பினேன். அவற்றை என்ன செய்வதென்று தெரியவில்லை. மட்டக்களப்பில் சிறுவயதில் பாசிக்குடாவுக்குச் செல்கையில் அங்கு சிப்பிகளில் பலவகையான சிற்பங்கள் செய்து விற்பனைக்கு வைத்திருந்ததும் நாம் அவற்றை வாங்கியதும் நினைவுக்கு வந்ததால் அப்படி ஏதாவது செய்து பார்க்கலாம் என்று அவற்றைக் கழுவிக் காயவைத்து விட்டு ஒருநாள் அவற்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பலவகையான விதம்விதமான சிப்பி, சங்கு, ஊரி வகைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கையில் கடலுக்குள் இப்படி விதம்விதமான, வகைவகையான உயிரினங்களெல்லாம் உள்ளனவே என மனம் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டது. அப்போ எனக்குத் திடீரென்று 'கடலுக்குள் விஷ்ணுவின் அம்சம் உள்ளது' என்று உள்ளுணர்வுக்கு ஒரு தகவல் வந்தது. அந்த உணர்வை எல்லோராலும் விளங்கிக் கொள்ள இயலாது. சற்று நேரம் அப்படியே இருந்தேன். அதன் பின்னர் தான் சிந்தித்துப் பார்த்தேன். எப்போதும் விஷ்ணுவினதும் லக்ஷ்மியினதும் வாழ்க்கை சமுத்திரத்துடன் தொடர்பாகத் தானே உள்ளன என்பது புரிந்தது. விஷ்ணு பாற்கடலில் தான் பள்ளி கொள்கிறார். லக்ஷ்மியும் பாற்கடலைக் கடைகையில் தானே தோன்றினார். அப்படி அவர்கள் இருவரின் வாழ்க்கையுடனும் கடல் சம்பந்தப் பட்டுக் கொண்டேயிருக்கின்றது. மச்சாவதாரம், கூர்மாவதாரம் இரண்டும் கடலில் தானே நிகழ்ந்தது. ராமனாக வந்த போது இறுதியில் சரயு நதியில் தானே ராமர் உயிர் நீத்தார். கிருஷ்ணரின் துவாரகை நகரம் கடலிலேயே தோன்றிக் கடலிலேயே அமிழ்ந்தது தானே. கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆற்றில் இருந்த பாம்பின் மேல் தானே ஆடினார். ஆறெல்லாம் இறுதியில் கடலில் தானே கலக்கின்றன. லட்சுமியையும் அலைமகள் என்று தானே அழைப்பார்கள். அப்போ அவர்கள் இருவரின் வாழ்க்கையுடனும் கடல் இரண்டறக் கலந்துள்ளது என்பதில் எவ்வளவு உண்மை. இந்த உண்மைகள் புரிந்ததும் அந்தச் சிப்பிகளில் கிருஷ்ணர் ராதை சிலையொன்று செய்தேன்.

நாம் ஸ்கார்பொரோ நகரில் இருந்த பதினெட்டு மாடிகள் கொண்ட வானுயர் கட்டடமான கொண்டமேனியத்தின் (condominium) ஆறாவது மாடியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு தான் டொரொண்டோ நகருக்குக் குடி வந்திருந்தோம். அங்கு நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வசித்தோம். பின்னர் பிக்கரிங் (Pickering) என்று ஸ்கார்பொரோ நகருக்குக் கிழக்கு முகமாகக் கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவில் உள்ள ஒரு நகருக்கு மகளின் குடும்பமும் நாமும் சேர்ந்து கொஞ்சம் பெரிய வீடாக வாங்கி மேலும் கீழுமாக வசிக்கும் எண்ணத்தில் குடி வந்தோம். அந்தக் கொண்டோவை (condominium என்பதன் சுருக்கம் condo) விற்பதற்கும் பின்னர் இதனை வாங்குவதற்கும் இடையில் சில பல சிரமங்கள் பட வேண்டியிருந்தது. ஒருவாறாக வீட்டுக்கு வந்து சேர்ந்து சில நாட்கள் இருக்கும் எனது கணவருக்கு ஒரு விசித்திரமான கனவு. அக்கனவில் யாரோ என்னிடம் வந்து வீட்டை விட்டு எழும்பும் படி சொல்வதாகவும், அதைத் தனக்குச் சொல்வதற்காக நான் படியேறி வந்து தான் இருந்த அறைக்கதவைத் தட்டுவதாகவும், தான் பயந்து கொண்டு வந்து கதவைத் திறந்தால் மாமி (இவரின் அம்மா) நிற்பதாகவும், தான் உடனே மாமியின் தோள்களில் முகம் புதைத்து அழுவதாகவும்  கனவு கண்டிருந்தார். அந்தக் கனவைக் கேட்டு நாங்கள் அதன் அர்த்தம் புரியாமல் இருந்தோம். ஆனால் கனவின் இறுதியில் மாமி வந்ததால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் சில நாட்களுக்குப் பின் எனக்கு ஒரு கனவு. அதில் நானும் மகளும் சமையல் அறையில் நிற்கையில் நிலத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுப் பட்டுவிட்டது. அதனை நான் கால்களால் எற்றி விடுகிறேன். அப்போ ஒரு ஆள் வந்து, கதிரையில் இருந்து கொண்டு நாம் வீட்டைப் பழுதாக்குவதாகவும், அதனால் உடனே வீட்டை விட்டு எழும்ப வேண்டுமென்றும் சொல்கிறார். நான் அவரிடம் கெஞ்சுகிறேன். ஆனால் அவர் முடிவான முடிவாகச் சொல்கிறார். கனவால் எழுந்ததும் எனக்கு அச்சம் வந்து விட்டது. அப்போ வீட்டை விட்டு எழும்புவதா எனக் குழம்பி நான் இறைவனிடம்,  "ஒருமாதிரிக் கஷ்டப்பட்டு இப்போ தான் நாம் செட்டில் (settle) பண்ணியிருக்க இப்படிக் கனவு வருகிறதே! நாங்கள் எங்கு செல்வோம்" என வேண்டினேன். பின்னர் இறைவன் அருளால் இன்னொரு கனவு வந்தது: அக்கனவில் மேலே உள்ள sunroof க்குள் ஆகாயத்தில் இருந்து  வில்வம் இலைகள் விழுவதாகக் கனவு கண்டேன். அதன்பின்னர் தான் சற்று நிம்மதி வந்தது அனைவருக்கும். எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பதற்கிணங்க நாம் இரு குடும்பங்களும் தனித்தனியே தான் மேலும் கீழும் வசிப்பதாக முடிவு செய்து தான் அந்த வீட்டை வாங்கி வந்திருந்தோம். முதலில் மகள் தாங்கள் பேஸ்மெண்ட்டில் வசிப்பதாகவும் எம்மை மேலே வசிக்கும் படியும் தான் சொன்னாள். ஆனால் கணவர் நாம் பேஸ்மென்டில் வசிப்போம் என்றார். நாம் குடி வந்தபொழுது பேஸ்மெண்டில் சில திருத்த வேலைப்பாடுகள் இருந்ததால் அதுவரை நாமும் மேலேயே வசித்தோம். திருத்த வேலைப்பாடுகள் முடிந்ததும் தான் நானும் கணவரும் பேஸ்மென்டுக்கு வந்தோம். கணவரின் வேலை நேரம் மாலை நான்கு மணியில் இருந்து நள்ளிரவு பன்னிரெண்டரை வரையும். மகள் குடும்பமும் இரு மகன்மாரும் மேலே வசிப்பவர்கள். மகன்மாருக்கு உணவு நான் சமைப்பேன். அவர்கள் வந்து அதனை எடுத்துக் கொண்டு அவர்களின் அறைகளுக்குச் சென்று விடுவார்கள். அப்போ நான் தனியே தான் இரவில் கீழே இருக்கவேண்டி வரும். அப்போ எனக்கு அந்தக் கனவுகள் நினைவுக்கு வந்து சற்றே பயம் வரும். அந்தப் பயங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி இரவு நேரம் போகப்போக மிகப்பயமாக இருக்கும். பின்னர் அதனைத் தவிர்ப்பதற்காக 'ரேடியோ சாயி'யின் யூ டியூப் (YouTube) வீடியோக்களை இரவு தனியே இருக்கும் நேரங்களில் பார்க்கத் தொடங்கினேன். அதனால் அந்தப் பயங்கள் குறையத் தொடங்கின. 2001 ஆம் ஆண்டு பாபாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த அமைப்பானது இப்போ 'சத்யசாயி மீடியா சென்டர்' எனும் புதிய பெயருடன் ஆறு விதமான இன்டர்நெட் ஒளி பரப்பு நிலையங்களாக, வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்படும் யூ டியூப் வீடியோக்களைத் தான் நான் பார்ப்பது. அதில் பல விதமான மக்களின் சாயி அனுபவங்களை அறியக்கூடியதாக உள்ளது. அதனால் வந்த தொடர்பில் எனக்கு 'ஸ்ரீ சத்யசாயி யுகம்-4' என்ற வாட்ஸ் அப் குரூப்புக்கு அழைப்பு வந்தது. நான் அதில் சேர்ந்தேன். அதில் ஹொவர்ட் மஃபெட் என்ற அவுஸ்திரேலியர் எழுதிய Sai Baba: Man of Miracles (சாயி பாபா: அற்புத மனிதர்) என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒலி வடிவமாக (audiobook) விட்டிருந்தார்கள். ஹொவர்ட் மஃபெட் எழுதிய இரண்டாவது புத்தகமான சாயிபாபா அவதார் (Sai Baba AVATAR) எனும் புத்தகத்தை நான் முதலிலேயே வாசித்து விட்டேன். அப்புத்தகம் வாசிக்கும் போது இப்புத்தகத்தைப் பற்றி அதன் முகவுரையில் இருந்து அறிந்த போது இப்புத்தகம் வாசிக்கும் விருப்பம் வந்தது. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த ஆசை இப்போ நிறைவேறியது. அவரும் அவரது துணைவியாரும் உண்மையாகவே ஆத்மீகத் தேடல் உள்ளவர்கள் போலும். அவர்களிருவரும் பற்பல இடங்களில் தங்கள் ஆன்மீகத் தேடலைத் தொடர்ந்திருக்கிறார்கள். அத்தேடலின் போது ஷீர்டி சாயிபாபாவைப் பற்றிய ஒரு புத்தகத்தை தான் வாசிக்க நேர்ந்ததாக இப்புத்தகத்தின் அறிமுகத்தில் அவர் குறிப்பிடுகிறார். பின்னர் உலகச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் இருந்து அவர்களின் சொந்த இடமான அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் இந்தியாவுக்கு இரு காரணங்களுக்காகச் செல்ல உத்தேசித்ததாக அவர் எழுதுகிறார். அவர் எழுதிய முதலாவது காரணமானது பிளவாஸ்கி அம்மையாரினால் (Madame Blavatsky) 1875 ஆம் ஆண்டு அடையாறில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரம்மஞான சபையால் (Theosophical Society) நடத்த இருந்த மெய்யறிவு வகுப்புகளுக்குச் செல்வது; இரண்டாவது நோக்கமானது இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து அங்கு இப்போதும் ஆழமான ஆன்மீக வழிமுறைகள் ஏதும் உள்ளனவா அல்லது காணாமல் போய்விட்டனவா என்பதை அறிவதாகும். போல் ப்ரெண்டன், யோகானந்தா, கிப்ளிங், மேடம் ப்ளாவட்ஸ்கி, கொலோனல் எச். எஸ். ஒல்கொட் மற்றும் பல எழுத்தாளர்கள் எழுதியது போல் அமானுஷ்யமான விஷயங்கள் இன்னும் இந்தியாவில் மீதம் உள்ளனவா? இன்னமும் அங்கு எங்காவது மறைவியலான அறிவு ஏதும் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதாகும். இப்படியான தேடலுக்கு ஒரு வருடம் போதுமானது என அவர்கள் எண்ணினார்கள். 

தியோஸோபிப் பள்ளிக்கூடமானது மகிழ்ச்சிகரமாகவும் அவர்களின் எதிர்வரும் பயணங்களுக்கு அவர்களைத் தயார் செய்வதாகவும் அமைந்தது. அவர்கள் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் இருந்த பற்பல ஆச்சிரமங்களுக்கும் சென்றனர். இமாலயத்தின் குகைகளில் இருந்த பற்பல துறவிகளுடனும் யோகிகளுடனும் உரையாடினர்.  

சத்யசாயி பாபாவைப் பற்றி ஊரூராக சுற்றித் திரியும் ஒரு யோகியிடம் தான் அவர்கள் முதலில் அறிந்தார்கள். அந்த யோகி, தான் பாபாவைச் சந்தித்ததோ அல்லது புட்டபர்த்தி என்ற கிராமத்தில் இருக்கும் அவரது ஆச்சிரமத்துக்குச் சென்றதோ இல்லையாம். அந்த யோகி அறிந்ததில் இருந்து அவரின் இடத்துக்குச் செல்வது மிகவும் கடினமாம். மிகவும் பின் தங்கிய கிராமப்பகுதியில் தான் அவரது இருப்பிடமாம். மஃபெட் சித்திகளையும் அற்புதங்களையும் பற்றி ஆராய்வதால் அவரின் இருப்பிடத்துக்குச் செல்வது மிகவும் பயனுள்ளது என்று அந்த யோகி எண்ணுவதாகச் சொல்லியுள்ளார். அந்த யோகி பாபா அற்புதங்கள் நிறைந்தவர் என இவருக்குக் கூறியுள்ளார். எப்படிப்பட்ட அற்புதங்கள் என இவர் கேட்டதற்கு அந்த யோகி பாபா வெறும் வெளியில் இருந்து பொருட்களை உருவாக்குவதாகச் சொல்லியிருக்கிறார். பிற்பாடு வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் ஷீர்டி பாபாவின் மறு அவதாரமென அவரின் பக்தர்கள் சொல்வதாக அறிந்த போது அது இவரின் ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது. ஆனாலும் இந்தியாவின் மிகப் பின்தங்கிய கிராமத்திற்கு மாட்டு வண்டியிலும் நடந்தும் செல்வதற்கு அவர்களின் அப்போதைய உடல்நிலை இடம் கொடுக்க மாட்டாது என்பதால் அப்பயணத்தைச் சற்றே ஒத்திவைத்துவிட்டுத் தம் உடல்நிலை சீராவதற்குச் சிறிது நாட்கள் பிரம்மஞான சபையின் சோலைகள் நிறைந்த சூழலில் இளைப்பாற விரும்பினார்கள்.

அவர்கள் பிரம்மஞான சபைக்குத் திரும்பி ஆறேழு மாதங்கள் இருக்கும், ஒருநாள் அங்கு நிர்மலானந்தா என்று பெயர் மாற்றம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்துசமயப் பெண் துறவி வந்தார். அவர் இந்து சமயத் துறவு வாழ்க்கைக்குத் தீட்சை பெறும் போது ஸ்வாமி சிவானந்தர் அவருக்கு அப்பெயரைச் சூட்டினார். ஸ்வாமி சிவானந்தரின் மறைவுக்குப் பின் அவர் சத்யசாயி பாபாவின் பக்தையாகி விட்டார். தான் புட்டபர்த்தியில் பல வியத்தகு அற்புதங்களைக் கண்டிருப்பதாக அவர் உரைத்தார். சத்யசாயி பாபா மெட்ராஸுக்கு வந்திருப்பதாகவும் அவருடன் கூட வந்தவர்களில் தானும் ஒருவர் என்றும் அவர் கூறினார். நிர்மலானந்தாவுடன் சென்றால் பாபாவைத் தரிசிக்கலாம் போல் இருந்தது. ஹோவர்ட் மஃபெட்டுக்கு இச் செய்தி இனிப்பாக இருந்தது. மனைவி ஐரிஸ்ஸுக்கு உடல் சுகயீனமாதலால் அவர் மட்டும் நிர்மலானந்தாவுடன் பாபா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றிருந்தார். அது சாயி பக்தரான வெங்கடேஸ்வரராவ் எனும் ஒரு மைக்கா தொழிலதிபரின் வீடாகும். நிர்மலானந்தா அவரை அங்கு குழுமியிருந்த சனத்தொகையினூடே வழி நடத்திச் சென்று, பாப் றேமர் என்றொரு அமெரிக்கருக்கு அறிமுகப்படுத்தி விட்டு எங்கோ சென்று விட்டார். பாப் றேமர் இவரை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இரு இந்தியர்களுடன் இவரும் நின்றிருந்தார். 

அப்போ அறைக்கதவு உள்ளிருந்து திறந்தது. மஃபெட் ஒருநாளும் கண்டிராத ஒரு மனிதர் வந்தார். அம்மனிதர் மிகவும் சிறிய மனிதராக இருந்தார். அவர் சிவப்பு நிறத்தில் நீள அங்கியொன்று அணிந்திருந்தார். அவருடைய தலைமுடியானது சுருள் சுருளாக அவருடைய தலையைச் சுற்றி ஒரு கூடாக நிறைந்திருந்தது. அவர் மாநிறத்தில் இருந்தார். கண்கள் ஒளி மிகுந்து காணப்பட்டன. அவரது முகமானது உள்ளார்ந்த ஒரு மகிழ்ச்சியினால் ஒளிர்ந்து காணப்பட்டது. மஃபெட் பாபாவைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருந்தாலும் பாபாவின் படத்தை ஒருநாளும் கண்டதில்லையாதலால் இவர் தானோ பாபா என வியந்து கொண்டு நின்றிருந்தார். பாபா நேரே இவரிடம் வந்து "நீங்களா அவுஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளவர்?" எனக்கேட்டார். மஃபெட் "ஆமாம்" என்றார். பின்னர் அந்த இரு இந்தியர்களிடமும் பாபா சென்றார். அவர்களிடம் அவர் தெலுங்கு மொழியில் பேசினார். பின்னர் அவரது கையைத் திருப்பிச் சிறு வட்டங்களாகச் சுழற்றினார். அதை நேராக்கிய போது அவரது கை முழுவதும் விண்ணிற சாம்பல் நிறைந்து காணப்பட்டது. அதை அவர் அவ்விரு ஆண்களுக்கும் பகிர்ந்தளித்தார். அதில் ஒருவர் தன் உணர்ச்சிகளை அடக்க மாட்டாமல் விம்மத் தொடங்கி விட்டார். பாபா அவர் தோளிலும் முதுகிலும் தட்டி ஒரு அன்னையைப் போல் அவருக்கு ஆறுதல் சொன்னார். அவரின் மகனுக்கு வந்த பயங்கர நோய் ஒன்றை பாபா குணப்படுத்தியதாகப் பின்னர் தான் அறிந்து கொண்டதாக மஃபெட் குறிப்பிடுகிறார். பின்னர் பாபா மஃபெட்டிடம் வந்தார். அவருக்கு முன் நின்றும் அவ்வாறே கைகளைச் சுழற்றினார். இம்முறை பாபா தனது அங்கியின் கைகளை முழங்கை வரை இழுத்து விட்டுக் கொண்டார். அவரது மனதிலே பாபா தனது அங்கியின் கைகளிலே ஒளித்து வைத்திருந்த சாம்பலைத் தான் தந்திரமாக எடுத்தவரோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது தான் பாபா தனது அங்கியின் கைகளைப் பின்னே தள்ளி விட்டதன் காரணம் எனப் பல வருடத்தின் பின்னர் தான் அறிந்து கொண்டதாக மஃபெட் குறிப்பிடுகிறார். பாபாவுக்கு எங்கள் மனதில் எழும் எண்ணங்களை அறிவதில் ஒரு சிரமமும் இல்லை என்றும் மஃபெட் குறிப்பிடுகிறார். பாபாவின் கைகளில் தோன்றிய சாம்பலை அவர் மஃபெட்டின் கரங்களில் போட்டார். ஒரு கணம் மஃபெட் அதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றிருந்தார். அப்போ அவரின் இடப்புறம் இருந்து ஒரு குரல் "அதை வாயில் போடவும். உங்கள் உடல் நலத்துக்கு அது மிகவும் நல்லது" என்றது. சொன்னது அங்கே மீண்டும் வந்த பாப் ரேமர் ஆகும். சாம்பலை ரசித்து உண்ண முடியுமென்று மஃபெட் ஒருநாளும் எண்ணியதில்லை. ஆனால் அந்த சாம்பலானது நறுமணமுள்ளதாகவும் ருசியாகவும் இருந்தது என்று அவர் எழுதுகிறார்.  மஃபெட் மேலுமொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். அதாவது பாபா அற்புதங்கள் செய்வதையும் விட மக்களின் மனதில் ஒரு சக்தி வாய்ந்த மாற்றத்தை உண்டாக்குவதாகவும் எழுதுகிறார். எங்களைக் கவலைகளொன்றுமே இல்லாத ஒரு உயரத்துக்கு உயர்த்தி விடுவதாகக் குறிப்பிடுகிறார். சாதாரணமான மனிதனின் துன்பங்களும் சச்சரவுகளும் ஒன்றுமே இல்லாத விதமாக நாம் வாழ்விலும் பார்க்க மேலானவர்களாக உணர்வதாகவும் எழுதுகிறார். தங்களை ஒரு சந்தோஷ வலையம் சூழ்ந்திருந்ததை உணரக்கூடியதாக இருந்ததாகவும் எழுதுகிறார். அவரது மனைவி ஐரிஸ், 'பாபாவுடன் பேசிவிட்டு வந்த பின்னர் தன்னால் பல மணி நேரத்துக்குப் புன்னகை புரிந்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது' என்று சொல்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

பின்னர் அவர் புட்டபர்த்திக்கு நேரே சென்று எவ்வாறு பாபாவின் அற்புதங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தது என்றும் இறுதியில் பாபாவின் தெய்வீகத்தன்மையில் எவ்வாறு தானும் தனது மனைவியும் முழு நம்பிக்கை கொண்டது என்பது பற்றியும் எல்லாம் எழுதியுள்ளார். ஒரு கட்டத்தில் பாபாவின் உடைக்கு அவரது மனைவியே இஸ்திரி போடவேண்டி வந்ததாம். அப்போது உள்ளே பாக்கெட் ஏதும் இல்லையென்பதை தாங்கள் உறுதி செய்து கொண்டதாகவும் எழுதியுள்ளார். மஃபெட் பாபாவின் பற்பல அற்புதங்களைப் பற்றியெல்லாம் அப்புத்தகத்தில் விபரித்து இருக்கிறார். அவற்றில் எத்தனையோ அவர் நேரே கண்டவையாகும். அத்துடன் அவர் பலரை தான் நேரே பேட்டி கண்டும் உள்ளார். மஃபெட் அங்கு சென்ற சில நாட்களில் சிவராத்திரி வந்ததால் சிவராத்திரியில் பாபா செய்யும் இரு மிகப்பெரும் அற்புதங்களான, ஷீர்டி பாபாவின் சிலைக்கு வெறும் குடத்திலிருந்து விபூதி விழப்பண்ணி அச்சிலை விபூதியில் மூழ்கும் வரை அபிஷேகம் செய்வதனையும் பின்னர் நடு இரவில் பாபாவின் வாயிலிருந்து லிங்கோத்பவம் நடைபெறுவதையும் நேரே இருந்து பார்த்ததாக எழுதியுள்ளார். 

அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை ஒலி வடிவில் கேட்கக் கேட்க எனது நம்பிக்கை இன்னும் பலமாகியது. இன்டர்நெட்டில் பாபாவைப் பற்றி அவதூறாக யாரோ எழுதியதைப் பற்றி நானும் அறிந்திருந்தேன். மனித மனத்தின் பலவீனத்தால் எனக்குமே மனம் சஞ்சப்பட்டது உண்மை. ஆனால் அவ்விதம் எழுதியவர்கள் சமயம் மாற்றும் கோஷ்டி என்பது பின்னர் தெரிய வந்திருந்தது.                                                                                                          

Friday, August 19, 2022

நான்காவது பாகம்

வாழ்க்கை ஓரளவு சுமுகமாகச் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் மகள் கருவுற்றாள். திருமணம் முடிந்து நான்கு வருடங்களின் பின்னரே மகள் கருவுற்றதால் சுகமாகப் பிள்ளை பிறக்கும் வரை நீ தான் துணை என ஆண்டவனை வேண்டினேன். துவாபர யுகத்தில் கிருஷ்ணர் அஸ்வத்தாமனின் கணையிலிருந்து அபிமன்யுவின் மகனைக் கருவிலேயே சென்று காத்த கதையெல்லாம் நினைவுக்கு வந்து இப்போ பாபாவாகப் பிறந்திருக்கும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினேன். வாழ்க்கையின் அடுத்த கட்டம் தொடங்கும் அறிகுறி தென்பட்டது. அந்த மகிழ்ச்சியில் சிறிது நாட்களே திளைத்திருந்தோம். மகிழ்ச்சியென்பது இரு துன்பங்களுக்கிடையேயான இடைவெளி என்று எங்கோ படித்த ஞாபகம். கணவரின் உடல் நிலையில் சிறு மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. உடல் மெலிந்ததுடன் வயிற்றில் ஒரு நோ. மருத்துவர் எண்டோஸ்க்கோப்பி (endoscopy) எனப்படும் வயிற்றுள் குழாய் விட்டுப் பார்க்கும் பரிசோதனை செய்யவேண்டும் என்றார். வைத்தியசாலையில் பரிசோதனைக்காகக் கணவரை உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியில் இருந்து கொண்டிருந்தேன். பரிசோதனை முடிந்ததும் அதனைச் செய்த பெண் டாக்டரே வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அப்பரிசோதனை செய்வதற்கு மயக்கித்தான் செய்வதென்பதால் கணவர் இன்னமும் அரை மயக்க நிலையில் படுத்திருந்தார். டாக்டர் என்னிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அதாவது என் கணவரின் வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாகச் சொன்னார். கணவருக்கும் முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் அவர் அரைமயக்க நிலையில் இருந்ததால் இன்னொரு குடும்ப அங்கத்தினருக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டுமென்பதாலேயே என்னை உள்ளே அழைத்து எனக்கும் அதனைத் தெரியப்படுத்தினார் என எண்ணுகிறேன். நான் கொஞ்சமும் எதிர்பாராத செய்தியென்பதால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் டாக்டரையே அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டு நின்றேன். டாக்டர் சொன்னார் தான் வயிற்றின் உள்ளே உள்ள கட்டியைச் சில படங்கள் எடுத்ததாகவும் நான் அவற்றைப் பார்க்கப் போகிறேனா என்றும் கேட்டார். நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் டாக்டரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அவர் மீண்டும் பார்க்கப் போகிறேனா எனக்கேட்டு விட்டு நான் சம்மதம் சொன்னது போல் என்னை அழைத்துச் சென்றார். எனக்கு அவற்றைக் காட்டினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதன் பின் என்னைக் கணவருக்கு அருகில் சற்றுநேரம் இருக்கச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். வழமையாக இப்படியான பரிசோதனைகள் முடிய 'எல்லாம் சரியாகவே உள்ளது' என்பது போன்ற வார்த்தைகளையே கேட்டுப் பழகியதால், அதையே இந்தத் தரமும் எதிர்பார்த்திருந்த எனக்கு இச் செய்தி பேரிடியாக இருந்தது. வயிற்றுக்குள் இருக்கும் கட்டியின் ஒரு சிறு பகுதியை டாக்டர் பையோப்ஸி (biopsy) எனப்படும் திசுக்கள் பரிசோதனைக்கு அனுப்புவதற்காக எடுத்ததாகவும் சொல்லியிருந்தார். என்ன தான் பரிசோதனை முடிவு வரும் வரை ஒன்றும் சொல்ல இயலாதெனினும் இப்படியான கட்டிகள் இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்று தெரியுமாதலால் மனம் பயத்தில் ஆழ்ந்தது. அரைமயக்க நிலையிலும் கணவருக்கு விஷயத்தின் தீவிரம் விளங்கியதால் இருவரும்  ஒருவரையொருவர் என்ன செய்வதென்று தெரியாமற் பார்த்துக் கொண்டிருந்தோம். கணவருக்கு ஒருவாறு மயக்கம் முழுவதுமாகத் தெளிந்தது. வீட்டுக்குப் புறப்பட்டோம். வீட்டில் பிள்ளைகளுக்கு இந்தச் செய்தி பேரிடியாக இருந்தது. 

வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. 'ஸ்பெஷலிஸ்ட்' எனப்படும் நிபுணத்துவம் வாய்ந்த இரு டாக்டர்களிடம் அந்தப் பெண் டாக்டரே கணவருக்கு 'அப்பொய்ன்மெண்ட்' (சந்திப்பிற்கான நியமனம்) வைத்துள்ளதாக ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்துச் சொன்னார்கள். ஒருவர் 'சர்ஜன்' எனப்படும் அறுவைச் சிகிச்சை நிபுணர். மற்றவர் புற்றுநோய் மருத்துவர் (ஒங்கோலொஜிஸ்ட்). சர்ஜன் கணவரின் வயிற்றை அழுத்திப் பார்த்து விட்டுச் சில பரிசோதனைகள் செய்ய எழுதினார். அவர் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றுபவர். கீமோத்தெரப்பி (chemotherapy) செய்து அந்தக் கட்டியைச் சிறிதாக்கினால் பின்னர் தான் அறுவைச் சிகிச்சை மூலம் அதனை அகற்றி விடலாம் என்றே அந்த சேர்ஜன் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். ஆனால் ஸீ ரீ ஸ்கேன் (CT scan) பரிசோதனை முடிவுகளில் இருந்து வயிற்றில் இரைப்பைக்கு அருகில் இருக்கும் கொழுப்புப் பகுதிக்கும் நோய் பரவியுள்ளதால் வெட்டி எடுப்பதில் அர்த்தமில்லை என்றார்கள். 

 ஆனால் பயோப்ஸி எனப்படும் திசுக்களின் பரிசோதனை முடிவுகள் வரமுன் ஏன் புற்றுநோய் மருத்துவரைச் சந்திக்கச் சொல்கிறார்கள் என்பது விளங்காமலேயே அவரைச் சந்திக்கச் சென்றோம். இப்படியான கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோய்க் கட்டிகளாகவே இருக்கும் என்பதாலேயே அப்படிச் செய்துள்ளார்கள் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. திசுப் பரிசோதனை முடிவும் அறுவைச் சிகிச்சை நிபுணர் செய்யச் சொன்ன பரிசோதனைகளின் முடிவும் வந்து அது புற்றுக் கட்டி தானென உறுதியாகியது. இடிக்கு மேல் இடி.

புற்றுநோய் மருத்துவரைக் (oncologist) காணச் சென்றோம். 1990களில் நானும் மகளும் கனடாவுக்கு ஸ்பொன்சரில் வருவதற்கு முன் கணவருடன் ஒன்றாகப் படித்த தூரத்து உறவுமுறையான ஒருவருக்கு இதே வருத்தம் வந்ததால் அவர் டாக்டரிடம் செல்கையில் அவருடன் உதவிக்கும் அவருக்கு  மொழி பெயர்ப்பதற்கும் கணவரே அவருடன் சென்று வந்ததாக என்னிடம் முன்பே சொல்லியுள்ளார். அதனால் இவருக்கு இந்நோயைப் பற்றி ஓரளவு தெரியும். கீமோத்தெரபி செய்தால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றியெல்லாம் தெரியும். எனவே கீமோத்தெரபியை இயன்ற அளவு தவிர்ப்பதெனக் கணவர் தீர்மானித்தார். அப்பாவிற்கு இப்படி என்றறிந்தவுடன் மகள் இன்டர்நெட்டில் எல்லாம் ஆராய்ச்சி செய்து வேறு பல வழிகளில் இவ்வருத்தத்தை மாற்றிய விதங்கள் எல்லாம் ஆராய்ந்து அவ்வழிகளில் முயற்சி செய்வதென முடிவு செய்திருந்தோம். எனவே புற்றுநோய் மருத்துவரிடம் சென்றபொழுது இப்போ கீமோதெரபி செய்யும் எண்ணம் இல்லை என்று சொன்ன பொழுது அவர் அதை ஏற்றுக் கொண்டார்.  

தாள முடியாத துன்பம் வரும் வேளைகளில் மனித மனம் இயல்பாகவே இறைவனை நாடுவது வழமை தானே. அதுவும் நான் சும்மா அம்மா பேசியதற்கே கீதை வாசித்தவள். கேட்கவா வேண்டும். இப்போ பாபா பக்தை வேறு. சத்யசாயி பாபாவினதும் ஷீர்டி பாபாவினதும் பெரிய படங்கள் இரண்டு ஒரு சகோதரர் லேமினேட் செய்து தந்தவை இருந்தன. அவற்றை சுவற்றில் ஒட்டிவிட்டு நான் அவற்றுக்கு முன் இருந்து ஒவ்வொரு நாளும் பஜனை செய்யத் தொடங்கினேன். முதலில் பாபாவின் அஷ்டோத்ர சதநாமாவளி (108 நாமாவளி) சொன்னபின் பஜனைப் பாடல்கள் நானே ஒருத்தியாக இருந்து பாடுவேன். கனடாவிலும் இலங்கையிலும் இருக்கும் எனது இரு பெறா மகள்மார் (அக்காவின் பிள்ளைகள்) என்னுடன் தாமும் சேர்ந்து வாட்ஸ் அப் மூலம் பஜனை செய்வதற்குக் கேட்டார்கள். கனடாவில் வசிப்பவருடன் சேர்ந்து செய்ய இயலுமாக இருந்தது. நேர வித்தியாசத்தால் ஸ்ரீலங்காவில் இருப்பவருடன் சேர்ந்து செய்ய இயலவில்லை. சாதாரணமாகவே சமையல் செய்கையில் நான் ஏதாவது பாடல்கள் கேட்டுக் கொண்டே தான் சமைப்பேன். அப்படிச் செய்யும் போது வேலை இலகுவாக முடியும். இப்போ அந்தப் பாடல்களும் பக்திப் பாடல்களாக மாறின. 

எமது உடல் அமிலத்தன்மையாக மாறுவதும் இப்படியான நோய்கள் உருவாவதற்கு ஒரு காரணம் என்பதால் அதற்கும் மாற்றாக அப்பச்சோடாவைக் கொண்டு ஒரு மருந்து செய்து ஒருவருக்கு இவ்வியாதி குணமடைந்துள்ளதென மகள் வாங்கிய புத்தகம் ஒன்றில் இருந்து அறிந்து அம்மருந்தையும் செய்து கொடுத்துக் கணவர் உட்கொண்டார். மஞ்சள், வேம்பு இவையெல்லாம் இவ்வருத்தத்தை மாற்றும் என்று அறிந்து அவற்றையும் கணவர் பாவித்தார். ஆனால் இம்மருந்துகளெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கின்றனவா என்பதை எப்படி அறிவதென்று தெரியவில்லை. அதன் காரணத்தாலேயே ஆங்கில வைத்தியத்துக்கு மீண்டும் செல்லவேண்டி வந்தது.  

கணவரின் வயிற்றில் உள்ள கட்டியானது பித்தத்தை இரைப்பைக்குக் கொண்டு செல்லும் குழாயை அழுத்தியதால் வழமை போலப் பித்தம் செல்ல இயலாமல் உடலில் பித்தத்தின் அளவு அதிகரித்தது. அதனால் கண், உடலெல்லாம் மஞ்சள் நிறமாக மாறி, உடலில் ஒரு அரிப்புத்தன்மையும் தோன்றியது. கணவர் தோல் அரிப்புக்கு ஒரு வகைக் கிரீமைப் பாவித்தார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அத்துடன் உணவைச் செமிக்கச் செய்வதற்குரிய பித்தம் செல்லாததால் கணவரின் இரைப்பையில் உள்ள உணவு சரியாகச் செமிபாடடையவில்லை. அதனால் அவருக்குப் பசியும் அவ்வளவாக இருப்பதில்லை. எமக்கு இது தெரியவில்லை. நாம் வயிற்றில் உள்ள கட்டியால் தான் பசியில்லையென எண்ணிவிட்டோம். ஆனால் ஓங்கோலொஜிஸ்ட் என்று சொல்லப்படும் புற்றுநோய் மருத்துவருக்கு இது தெரிந்திருக்க வேண்டும். அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கீமோத்தெரப்பி செய்வதற்குரிய நாளைக் குறித்துத் தந்தார்  (அப்பொய்ண்ட்மென்ட்). கீமோத்தெரப்பி செய்வதற்கு முதல்நாள் ஆஸ்பத்திரிக்குச் சென்று இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு ஒரு மணித்தியாலத்தால் அந்த டாக்டரை (ஒங்கோலொஜிஸ்டைச்) சென்று பார்க்கவேண்டும். அதன்படி முதல்நாள் ஆஸ்பத்திரி சென்று கணவர் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்துவிட்டு ஒங்கோலொஜிஸ்ட்டைக் காணச் சென்றோம். எமது நல்ல காலம் அன்று கணவரின் ஒங்கோலொஜிஸ்ட் லீவு என்பதால் அவரது வாடிக்கையாளர்களை இன்னொரு பெண் மருத்துவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கணவரின் இரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்து விட்டு, ஜீஐ (GI) எனப்படும் இரைப்பை, சிறுகுடல் சம்பந்தமான டாக்டரிடம் கணவரை யாரும் அனுப்பவில்லையா எனக் கேட்டார். நாம் 'இல்லை' என்றோம். கணவரின் பித்தத்தின் அளவு இரத்தத்தில் மிக அதிகமாக உள்ளதால் கணவரை உடனே எமெர்ஜென்சி எனப்படும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லச் சொன்னார். 14 க்குள் இருக்கவேண்டிய எண்ணிக்கை 300 க்குக் கிட்ட இருந்தது. அப்படியெனில் போன கிழமையும் கூடத்தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த டாக்டர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படிச் செய்திருக்கிறார். அதனால் தான் கணவருக்கு உடலில் அரிப்பும் பசியின்மையும் இருந்திருக்கிறது. கடவுளருளால் இந்தப் பெண் டாக்டர் எமெர்ஜென்சிக்கு அனுப்பியதால் அவர்கள் கணவரை வார்டில் அனுமதித்து அவசரச் சிகிச்சை அளித்தார்கள். ஜீஐ டாக்டர் கணவரின் பித்தப்பைக்குள் ஸ்டென்ட் (stent) எனப்படும் நுண்ணிய துளையுள்ள மெல்லிய குழாய் ஒன்றைப் புகுத்திப் பித்தத்தைச் சிறுகுடலினுள் பாயும் படி செய்தார். அதன் காரணத்தால் கணவர் மூன்று நாட்களுக்கு ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வந்தது. அந்த நாட்களில் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்த காரணத்தால் பஜனை செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் நினைத்தேன் 'கடவுளுக்கு எனது நிலைமை தெரியும் தானே. எனவே நான் பஜனை செய்யாவிட்டாலும் அவருக்கு விளங்கும் தானே' என்று. அப்படித்தான் எனது பஜனை நின்றது. 

ஒருவாறாகக் கணவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். பித்தத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளும் நின்றுவிட்டன. வழமையான மாதிரிப் பசி உணர்வும் வந்து விட்டது. கணவரின் ஓங்கோலொஜிஸ்ட்டை மாற்றுவதற்கு மகள் அந்தப் பெண் டாக்டரின் நர்ஸுக்கு ஃபோன் செய்து அவரை வேண்டி மனுச் செய்தாள். நல்லகாலம் அந்தப் பெண் டாக்டரும் கணவரையும் தனது வாடிக்கையாளராக ஏற்றுக் கொண்டார்.  

மகளின் வயிற்றில் இருந்த கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு வந்தது. ஒருநாள் மகளின் கனவில் அவளின் அப்பம்மா (மாமி - கணவரின் தாயார்) வந்தார்கள். அக்கனவின் படி பார்த்தால் அவர் தான் பேத்தியின் வயிற்றில் பிள்ளையாக வந்திருப்பதாகத் தெரிந்தது. அத்துடன் பெண் பிள்ளையென்றும் தெரிந்தது. நவம்பர் மாதம் இருபத்தொன்பதாம் திகதி மகள் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். சிசேரியன் என்னும் அறுவைச்சிகிச்சை மூலமாகப் பிறந்ததால் இரு நாட்களின் பின் மகளும் மருமகனும் பிள்ளையை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். பேத்தியைக் கண்டதும் கணவருக்கு புதுத் தெம்பு பிறந்தது. சிறிது நாட்கள் அந்த மகிழ்ச்சியில் கழிந்தது. நாம் செய்து கொண்டிருந்த கை வைத்தியங்களும் தொடர்ந்தன. மஞ்சள், வேம்பு முதலிய தமிழ் மருந்துகளும் கணவர் உபயோகித்துக் கொண்டு தான் இருந்தார். 

முதல் ஒரு கட்டம் கீமோதெரப்பி முடிந்து ஸி ரி ஸ்கான் (C T scan) எடுத்துப் பார்த்தார்கள். நாமும் கணவர் வயிற்றில் உள்ள கட்டி கொஞ்சம் என்றாலும் சிறுத்துள்ளதென டாக்டர் சொல்வார் என ஒரு எதிர்பார்ப்புடன் சென்றால், ஒரு வித்தியாசமும் இல்லை என்றார் டாக்டர். மனம் எல்லாம் சோர்ந்து விட்டது. அதாவது கீமோதெரப்பியும் வேலை செய்யவில்லை, அதேநேரம் நாம் செய்த மாற்றுச் சிகிச்சைகளும் வேலை செய்யவில்லையென்பது மனச்சோர்வைத் தந்தது. ஆனால் பிறகு எண்ணிப் பார்த்தால் அது பரவாமல் இருப்பதே ஒரு நல்ல அறிகுறி தானே என எண்ணவும் தோன்றுகிறது. 

இரவு உணவின் பின்னர் தான் சிங்க்கிற்குள் (sink) சேர்ந்து கிடக்கும்  பாத்திரங்களைக் கழுவுவது. அப்போ கணவர் படுப்பதற்குச் சென்று விடுவார். முன்னர் எல்லாம் பாத்திரங்களை அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் தான் எல்லாவற்றையும் கழுவுவது. ஆனால் டொரோண்டோவுக்குக் கொண்டொமேனியம் எனப்படும் குடியிருப்பின் ஆறாவது மாடியில் நாம் வீடு வாங்கிக் கொண்டு வருகையில், அங்கு சிறிய வகைக் கரப்பான் பூச்சிகள் இருந்த காரணத்தால் இரவே பாத்திரங்களைக் கழுவா விட்டால் பூச்சிகள் மொய்த்து விடும். நல்லகாலம் அந்த வீட்டில் டிஷ் வோஷர் எனப்படும் பாத்திரங்களைக் கழுவும் மெஷின் இருந்ததால் இரவே பாத்திரங்களை அதனுள் போட்டுவிட்டு சமையலறை மேடை முழுவதும் சோப் நீரால் துடைத்து விட்டால் பூச்சிகள் வரமாட்டா. அதே பழக்கம் புது வீட்டுக்கு வந்தும் தொடர்ந்தது. எமது அந்த கொண்டமேனியம் வீட்டிலிருந்து சாமான்களைக் கொண்டு வரும் போது ஒரு சிறிய கரப்பான் பூச்சி வந்திருந்தாலும் போதும் இங்கு அவை பெருகுவதற்கு. எனவே அதைத் தவிர்ப்பதற்கு இரவே பாத்திரங்களைக் கழுவப் போட்டுவிட்டு மேடை முழுவதும் சோப் நீரால் துடைத்து விடும் பழக்கத்தைத் தொடர விரும்பினேன். புது வீட்டிலும் டிஷ் வோஷர் இருந்தது வசதியாக இருந்தது. இரவு உணவின் பின்னர் எல்லாப் பாத்திரங்களையும் டிஷ் வோஷரில் போட்டுவிட்டு மேடைகள் எல்லாம் சோப் நீரால் துடைத்து விட்டுத் தான் நான் படுக்கைக்குச் செல்வது. அப்போ மீண்டும் பாபாவின் யூ - டியூப் வீடியோக்களைக் கேட்க ஆரம்பித்தேன். பார்க்க என்று சொல்லாமல் கேட்க என்று ஏன்  சொல்கிறேன் என்றால் பாத்திரங்களை டிஷ் வோஷரில் அடுக்கும் போது இயர்ஃபோனின் (காதுகேள் பொறி) ஒரு நுனியை யூ - டியூப் வரும் கைபேசியிலும் மற்றைய இரு (கேட்கும் பகுதிகள்) நுனிகளையும் எனது இரு காதிற்குள்ளும் புகுத்திவிட்டுக் கைபேசியை உடையில் உள்ள சட்டைப் பையினுள் போட்டு விட்டு அதைக் கேட்டுக் கொண்டே டிஷ் வொஷரில் பாத்திரங்களை அடுக்குவேன். அப்போ அந்த வீடியோக்களில் பலரின் சொந்த பாபா அனுபவங்கள் போன்றன வரும். ஒருநாள் பிரஷாந்தி நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி யூ- டியூபில் வந்தது. பாபா எழுதிய 'வாகினி' என்ற பெயர்களைத் தாங்கிய நூல்களைப் பற்றிய நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொன்னார். ஒரு முறை ஒரு பக்தர் பாபாவிடம் "ஸ்வாமி எப்படி நாம் இறைவன் மீது அன்பு செலுத்தலாம்?" எனக் கேட்டாராம். அதற்கு பகவான் "இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் இறைவனின் போதனைகளின் படி நீ நடந்து வர வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் இறைவனில் நீ வைத்திருப்பது அன்பல்ல வெறும் விருப்பே" என்று உரைத்தாராம்.

பாபா தனது பதினான்காவது வயதில் தன் குடும்பத்தினரிடம் "நான் உங்களுக்குச் சொந்தமானவனில்லை; என்னை எனது பக்தர்கள் அழைக்கிறார்கள்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட பின்னர் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கத் தனது பிறந்த கிராமமாகிய புட்டபர்த்தியையே தனது பிரதான வசிப்பிடமாகக் கொண்டு இருந்ததும் புட்டபர்த்தியிலும் பக்கங்களில் உள்ள கிராமங்களிலும் குடிநீர்த்திட்டம், ஆஸ்பத்திரி, கல்லூரி முதலானவற்றை ஆரம்பித்து அதனைச் சென்னை வரை கொண்டு சென்றதும் அத்துடன் அவரது பிரதான வாசஸ்தலமாகிய பிரஷாந்தி நிலையத்திலிருந்து வெளிவரும் மாதசஞ்சிகையான 'சனாதன சாரதி'யில் அவரும் 'தர்மவாகினி', 'ஞானவாகினி' போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளதும் வாசித்து அறிந்துள்ளேன். வாகினி என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பிரவாகம் என்ற அர்த்தமும் உண்டு. அந்தக் கட்டுரைகளெல்லாம் பின்னர் தனிப் புத்தகங்களாக வெளிப்பட்டதும் அறிந்துள்ளேன். அப்படியிருந்தும் பாபாவினால் எழுதப்பட்ட அந்த நூல்களை வாசிப்பதற்கு ஒரு போதும் நான் எண்ணியதில்லை. அதன் காரணம் தெரியவில்லை. ஆனால் அந்நிகழ்ச்சியை யூ- டியூபில் பார்த்த பிற்பாடு எனக்கு அவற்றை வாசிக்கும் விருப்பம் வந்தது. தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட அப்புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் கூடப் பலர் மொழி பெயர்த்துள்ளனர். எனக்கு பிரசாந்தி இணைப்பு (Prashanthi Connect) என்ற ஒரு பிரயோகத்துக்கு (App) அழைப்பு வந்து அதனை எனது தொலைபேசியில் இணைத்துக் கொண்டேன். அதன் மூலம் இப்போ என்னால் பாபா எழுதிய நூல்களான பாகவத வாகினி, தர்ம வாகினி போன்றவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒலி வடிவில் கேட்க இயலுமாக உள்ளது. அன்று பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியில் உரையாற்றியவர் பாபாவின் 2000 க்கும் மேற்பட்ட உரைகள் பொது மக்களின் பார்வைக்கு உள்ளன எனவும் பாபா வாகினி தொடர்களில் 15 நூல்கள் வெளியிட்டிருக்கிறார் எனவும் உரைத்தார்.  

பாகவதவாகினியானது பாண்டவர்களின் பேரனான பரீட்சித் (அபிமன்யுவின் மகன்) பிறந்ததில் இருந்து ஆரம்பித்துப் படிப்படியாகக் கிருஷ்ணரின் கதை என விரிந்து செல்கிறது. 

தர்மவாகினி அழகாக நாம் செய்ய வேண்டிய தர்மம் என்னென்ன என விபரித்துக் கொண்டு செல்கிறது. இளம் வயதில் சில புத்தகங்கள் வாசித்ததனால் பெண்ணுரிமை போன்ற சில விஷயங்களைப் பற்றி எனக்கு ஏற்பட்டிருந்த சில தப்பபிப்பிராயங்கள் பாபாவின் தர்மவாகினியைக் கேட்டதும் தான் நீங்கியது என்று சொல்லவேண்டும். அதில் பாபா இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகளை அழகாக விபரித்துக் கொண்டு செல்கிறார். 

அடுத்ததாக நான் தியான வாகினியைக் கேட்டேன். அதில் தியானம் செய்யும் முறையையும் இறைவனின் நாமத்தை நாம் உச்சரிப்பதால் வரும் நன்மைகளையும் பாபா அழகாக விபரித்துக் கொண்டு செல்கிறார். இப்போ இந்து சமயத்தில் இருக்கும் சில தப்பபிப்பிராயங்களையும் (சாதி வேறுபாடு போன்றன) அனைவருக்கும் புரியும் விதமாக பாபா விளக்கிக் கொண்டு செல்கிறார். 

பின்னர் நான் பாபாவின் உபநிஷதவாஹினியைக் கேட்டேன். பாடசாலையில் சமயப்பாடத்தில் இந்து சமயத்தில் உபநிஷதங்களைப் பற்றிப் படித்துள்ளேன். அவற்றின் சில பெயர்கள் கூடப் படித்த ஞாபகம். ஆனால் உண்மையில் அவற்றில் என்ன உள்ளதென்பது தெரியாது. இப்போ தான் அவற்றில் என்ன உள்ளதென்பதைப் பற்றியும் அவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது. 

கணவரின் ஒங்கோலோஜிஸ்ட் இப்போ வேறு வகையான கீமோத்தெரப்பி ஒன்றைத் தொடங்கினார். அதாவது கீமோத்தெரப்பி என்பதே வெவ்வேறு வகையான மருந்துகளின் சேர்க்கை. அந்தக்கலவையை இரத்தத்தில் ஏற்றுவதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை அழிப்பதே கீமோத்தெரப்பி. அந்த இரசாயன மருந்துக் கலவை இரத்தத்தில் ஏற்றப்படுவதால் அது எமது மற்றைய உயிரணுக்களையும் பாதிக்கிறது. இந்தப் புதிய கீமோத்தெரப்பியானது கொஞ்சம் வலிமை வாய்ந்த மருந்துகளைக் கொண்டது போலும். கிழமையில் இருநாட்கள் சென்று மருந்து ஏற்றிவிட்டு வருவார். தெரப்பியின் பாதிவழியிலேயே மிக மோசமான பக்கவிளைவுகள் வரத்தொடங்கி விட்டன. இவரால் நடக்க இயலவில்லை; கதைக்க இயலவில்லை. அது மூளையையும் பாதித்ததோ தெரியவில்லை இவரால் ஒழுங்காக யோசிக்கக் கூட இயலவில்லை. "இப்படியே போனால் நான் விரைவில் போய் விடுவேன்" என்று இவர் சொல்லத்தொடங்கி விட்டார். அதனால் பாதிவழியிலேயே அந்த கீமோவை நிற்பாட்டி விட்டோம்.           

காரட் சாறு புற்றுநோய்க்கு நல்லது என்பதால் மகள் மரக்கறிகளில் இருந்து சாறு பிழியும் ஒரு மெஷினை வாங்கி ஒவ்வொரு நாளும் அப்பாக்கு காரட் ஜூஸ் கொடுத்துக் கொண்டு வந்தாள். ஆங்கில வைத்தியத்தில் இவ்வருத்தத்தை முழுவதுமாக மாற்ற இயலாதென்பது தான் அவர்களின் முடிவு. கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போடலாம் என்பதாகத் தான் சொன்னார்கள். ஆனால் மகள் வாங்கிய புத்தகம் ஒன்றில் பல வழிகளில் அதனை முழுவதுமாக மாற்றியதையெல்லாம் அறிந்து கொண்டோம். அத்துடன் எமது தமிழ் வைத்தியத்தில் இதனை மாற்றலாம் என்று லண்டனில் இருக்கும் இவரின் மாமியின் மகள்